தமிழகம்

தமிழ்நாடு ஆளுநரின் கருத்துகள் மிக அபத்தமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து கூறி வரும் கருத்துக்கள் அபத்தமானது, மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் எவ்வித முடிவும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால் அவை நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை. எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட மகத்தான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடைபெற்ற போராட்டம் என்று ஆளுநர் கூறியிருப்பது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போராடிய மக்களை, தியாகம் செய்த மக்களை அவமானப்படுத்தும், செயலில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.

ஆளுநர் தான் வகிக்கும் மிக உயரிய பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக் கூறுவதற்கு மாறாக, உயர்ந்தபட்ச பொறுப்பை அவமதிக்கும் செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது அவர் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்பது வெளிப்படையாகியுள்ளது.

அத்துமீறி செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்து பல மாதங்களாகிவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் மதிக்கத் தவறிய காரணத்தால் ஆளுநர் அதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார். மொத்தத்தில், ஆளுநர் ரவி தனக்களிக்கப்பட்டுள்ள கடமையை உணர்ந்து செயல்படவில்லை. மாறாக, தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு, தமிழக ஆட்சிக்கு எதிராக செயல்பட ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட திரு.ரவி அவர்கள் ஒன்றிய அரசின் நோக்கத்தை நிறைவேற்றி வருவதன் மூலம் தமிழக மக்களை ஆத்திரமூட்டலுக்கு இரையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் தங்களது மிகக் குறுகிய அரசியல் நோக்கத்தை ஒன்றிய அரசும், ஆளுநரும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள். இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆளுநரின் அத்துமீறிய செயலுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து வெளியேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button