தமிழகம்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதிலுமா பாரபட்சம்! – ஏஐடியுசி பொதுச் செயலாளர் ம. இராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதில் பாரபட்சம் கூடாது என்று தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (27.12.2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் பணியாளர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்ட அடிப்படையில், தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்த சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1000/- சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஒப்பந்த, வெளி முகமை பணியாளர்கள் இந்தப் பொங்கல் பரிசு பெறும் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். கிராமப்புற பொது சுகாதாரம் பேணும் தூய்மைப் பணியாளர்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை காவலர்கள் தான் பெரும் பகுதி இந்தப் பணியைச் செய்கிறார்கள். 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதம் ரூ. 3600/- மட்டுமே அதுவும் மாதம் 30 நாட்கள் வேலை செய்து 26 நாள் ஊதியம் பெறும் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்காது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒப்பந்த, வெளிசந்தை தொழிலாளர்கள் தான் சுமார் 80 விழுக்காடு. அவர்களில் பெரும்பாலோர் தூய்மை பணிபுரிவோர். இவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்காது. மருத்துவதுறை உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம், வெளிச்சந்தை, திட்டப் பணியாளர்கள் என்று அற்ப ஊதியத்திற்கு நவீன கொத்தடிமைகளாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளனர்.

உண்மையில், அரசின் நலத்திட்டங்களுக்குப் பிரதானமான அச்சாணியாக இந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களது ஊதியத்தைப் பறிப்பது, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்குப் பங்களிப்பைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்வது என்னும் சொல்லொனாத் துயரங்களை எதிர்கொண்டே இந்த தொழிலாளர்கள் அரசின் திட்டங்களுக்கு அச்சாணியாகத் திகழ்கிறார்கள்.

தமிழ்நாட்டின் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க முன் வந்துள்ள தமிழக அரசு, தனது திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் பெரும் பகுதி தொழிலாளர்களுக்கு ரூ. 1000/- பொங்கல் பரிசு கூட வழங்க வழி செய்யாமல் இருப்பது பாரபட்சமான செயலாகும்.

எனவே நிரந்தரம், காலமுறை ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகை ஒப்பந்தம், வெளிச்சந்தை, திட்டம் என எந்தப் பெயரில் பணிபுரிந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற முறையை கைவிட்டு அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகையைத் தமிழ்நாடு அரசு வழங்க முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button