தமிழகம்

‘வாய்தா’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு விழா மற்றும் கவிதை நூல்கள் வெளியீடு

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய முற்போக்கு பேரவை இன்று (17/06/2022) விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை இணைந்து சென்னையில் 16/06/2022 வியாழன் அன்று மாலை ‘வாய்தா’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டுவிழா மற்றும் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தின.

இயக்குநர் மகிவர்மன் இயக்கிய , புதுமுக கதாநாயகர் புகழ் மகேந்திரன் நடித்த திரைப்படம் ‘வாய்தா’ நீதித்துறையில் நிலவும் அவலங்களையும், நீதியை பெறுவதற்கு சாமானிய மக்கள் படும் துன்ப துயரங்களையும் இப்படம் ,படம் பிடித்து காட்டியுள்ளது. கிராமப்புறங்களில் நிலவும் சாதீய பாகுபாடுகளையும், தீண்டாமையையும் மனக்கண் முன் கொண்டுவருகிறது.

வணிக ரீதியாக, லாப நோக்கோடு பல ஃபார்முலாக்களை உள்ளடக்கி திரைப்படங்கள் வெளிவரும் காலக்கட்டத்தில், ‘வாய்தா’ என்ற திரைப்படம், சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வோடு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நடித்துள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, அவர்களை கொண்டாடும் வகையில் , ‘வாய்தா’ திரைப்படக் குழுவிற்கு பாராட்டுவிழாவை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும், அனைத்திந்திய முற்போக்குப் பேரவையும் இணைந்து நடத்தின. அதே போல், அந்நிகழ்வின் பொழுது கவிதை நூல்களும் வெளியிடப்பட்டன.

16-06-2022, வியாழக்கிழமை, மாலை சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில், உள்ள ICSA மையத்தில் இந்த விழா நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழிகாட்டுக் குழு உறுப்பினர் ஜீவா மணி குமார் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். பேராசிரியர் கணபதி இளங்கோ சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.இராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர், டாக்டர் த. அறம் துவக்கவுரையாற்றினார்.

இயக்குனர் சி.எஸ்.மகிவர்மன், கதாநாயகர் புகழ் மகேந்திரன், கதாநாயகி ஜெசிகா,நடிகர் திருநாவுக்கரசு, பாடகர் அறந்தை பாவா உள்ளிட்டோரை பாராட்டி, தமிழ்நாடு AITUC பொதுச் செயலாளர் T. M. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

கவிஞர். ராஜ பாரதி எழுதிய ‘ஆழ்முகி’ கவிதை நூலை Dr. A. R. சாந்தி (தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், அனைத்திந்திய முற்போக்குப் பேரவை – AIPF) வெளியிட்டார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் K. S. குமார் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

கவிஞர்.யாழினி முனுசாமி எழுதிய ‘காற்றில் அலையும் சொற்கள்’ கவிதை நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் T. S. நடராஜன் வெளியிட்டார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்டப் பொருளாளர் எஸ். சங்கர நாராயணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

கதாயாகர் புகழ்மகேந்திரன், இயக்குநர் மகிவர்மன், நடிகர் திருநாவுக்கரசு மற்றும் நூலாசிரியர்கள் கவிஞர்கள் ராஜபாரதி, யாழினி, முனுசாமி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில பொதுச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் நிறைவுரையாற்றினார். கவிஞர் அறந்தை பாவா மற்றும் பாவை சேது லெட்சுமி ஆகியோர் பாடல்களைப் பாடினர்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சென்னை மாவட்ட துணைச் செயலாளர், செ.புஷ்பராஜ் நன்றி நவின்றார். இதில் ஏராளமான கலை இலக்கிய படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.

இவண்,
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
(அனைத்திந்திய முற்போக்குப் பேரவை)

சி.இராமலிங்கம்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,
காஞ்சிபுரம் மாவட்டம்.

கணபதி இளங்கோ,
சென்னை மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
தொடர்புக்கு :
94441 81955,
94452 83135,
93822 03123

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button