தமிழகம்

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க தமிழகமெங்கும் இன்று (13.09.2022) ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஒன்றிய அரசு கையாள்கிறது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இதனால், ஒன்றிய அரசை நடத்திவரும் பாஜக-வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக, தமிழ்நாடு அரசு தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து, 2022 செப்டம்பர் 13ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், தொழில் மையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

கோரிக்கைகள்:

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 21,000 என சட்டப்படி அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உள்ளாட்சி, மருத்துவத்துறை, ஆஷா, கூட்டுறவு, டாஸ்மாக், பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 21,000 ஊதியமாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் துறைகளில், தொழிற்சாலைகள் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் நிரந்தர தன்மை கொண்ட பணியிடங்களில் கேஷுவல், காண்ட்ராக்ட், அவுட் சோர்ஸிங் உள்ளிட்ட பெயர்களில் தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஊதியத்தையும் சமூக பாதுகாப்பையும் இடைத்தரகர்கள் சுரண்டிக் கொழுக்கவுமே இந்த ஒப்பந்த முறை வழி வகுக்கிறது. எனவே, ஒப்பந்த முறைமையை ஒழிக்க வேண்டும். 240 நாள் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும்.

மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செங்குத்தாக உயர்த்தியுள்ளதைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், நுகர் பொருள் வாணிப கழகம், மின்வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு பொது நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை எதிர்த்து, ரத்து வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநில விதிகளை நிறைவேற்ற மறுக்க வேண்டும்.

கட்டுமான, உடல் உழைப்பு நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். நலவாரியத்தில் இருந்து மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு ஏஐடியுசி

Related Articles

One Comment

  1. தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து அயராது போராடி வரும் ஏஐடியூசி பேரியக்கத்தின் 13/9/22 போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.. அனைத்து கோரிக்கைகளும் மனித வாழ்வாதாரத்தை்மையமாக்க் கொண்டவை. எனவே ஏஐடியூசி் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் ஒன்றிய அரசினை நிர்பந்திக்கவும் வேண்டும்.

    ந.சேகரன்,
    பரமக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button