தமிழகம்

கோவை மாநகரக் காவல்துறைக்கு கடும் கண்டனம்

தேச தந்தை அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். உலகை உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்தின் முதல் குற்றவாளி நாதுராம் கோட்சே என்பதையும், இந்து மதவெறி கொண்டு ‘மகாத்மா’ அழித்தொழிக்கப்பட்டார் என்பதையும் நாடும், மக்களும் நன்கறிவர்.

இந்த நிலையில் அண்ணல் காந்தி மதவெறிக்கு பலியான 73ஆம் ஆண்டு நினைவு தினம் சமூக நல்லிணக்க உறுதி ஏற்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் நடந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்த போது கோவை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு, உறுதிமொழி வாசிப்பை இடைமறித்து குறுக்கீடு செய்து, “நாதுராம் கோட்சே” என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது. அவரை மதவெறியர், கொலைக் குற்றவாளி என்று கூறக்கூடாது என்று தடுத்துள்ளனர்.

கோவை மாநகரக் காவல்துறையின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. தேச தந்தையை மதவெறி பிடித்து, படுகொலை செய்த குற்றவாளிக்கு, நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உண்மையை சொல்லவும் காவல்துறை அனுமதிக்காது எனில் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை கோவை மாநகரக் காவல்துறை பலவந்தமாக பறிக்கும் செயலாகும்.

கோவை மாநகரக் காவல்துறையின் சட்ட அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துமீறிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button