தமிழகம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாட்டுத் தீர்மானங்கள்

அரசியல் தீர்மானம்

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இந்திய விடுதலைப் போராட்டம் 90 ஆண்டுகள் நடைபெற்றது. ஆயிரம் ஆயிரம் வீரர்களின் ரத்தத்தால் விடுதலை பெற்றது மட்டுமல்ல; 565 சமஸ்தானங்களாக வெள்ளையன் விட்டு சென்ற பின்பு அதை இந்தியா என்ற பன்மைப் பண்பாடுகள் கொண்ட நாடாக இந்திய விடுதலை இயக்கம் தான் உருவாக்கியது. இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமின்றி, பிரிட்டிஷ்காரனுக்கு துதி பாடி போராட்டத்தை காட்டி கொடுத்த ஆர்எஸ்எஸ்-பாஜக கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
வீட்டுக்கு 15 லட்ச ரூபாய் தருவேன், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன், கருப்பு பணத்தை முற்றாக ஒழிப்பேன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்தி காட்டுவேன் என்றெல்லாம் ஏராளமாக வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த மோடி இவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக இந்திய மக்கள் கடந்த 75 ஆண்டுகளாக முதலீடு செய்து உருவாக்கி வைத்திருந்த அரும்பெரும் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம், அவருடைய கார்ப்பரேட் எஜமானர்களுக்கு, ஏறத்தாழ இலவசமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
உலகமே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவைக் காப்பாற்றிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையும், காப்பீடு நிறுவனங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் பாஜக ஆட்சி விற்றுக் கொண்டிருக்கிறது. காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் என்ற கூற்றுக்கு மாறாக இந்தியாவின் செல்வங்களை கார்ப்பரேட்டுகள் தான் உருவாக்கினார்கள் என்று வெட்கமில்லாமல் இந்தியப் பிரதமர் பேசுகிறார். இந்திய ராணுவத்திற்கு டாங்குகள் பீரங்கிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், கருவிகளையும், உடைகளையும் செய்து தரும் 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை 100% அந்நிய முதலீட்டுக்கு திறந்து விட்டிருக்கிறார். நிலக்கரி கனிமவளச் சுரங்கங்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏர் இந்தியா விமானங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் என்று இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு தேவையான, பொதுமக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட,அத்தனை பொதுச் சொத்துகளும் அநியாயமாக கார்ப்பரேட்டுகளிடம் விற்கப்படுகின்றன.
அவர்களது பகாசுர நிறுவனங்களின் லாப வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றுவதற்கு வசதியாக சிறு குறு நடுத்தர தொழில்கள் அனைத்தையும் பாஜக அரசு ஒழித்து கட்டிக் கொண்டிருக்கிறது.
பலமுனை வரியை நீக்கி, ஒரு முனை வரியாக்கிக் குறைக்கிறோம் என்ற பெயரில் ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டது. உலக நாடுகளில் எங்கும் இல்லாத அளவுக்கு 28%சத வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை அனேகமாக தினந்தோறும் ஏற்றப்படுகிறது. இது அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது.
செலவுகள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் பெரும்பாலான குடும்பங்களில் வருவாய் குறைகிறது. உலகம் முழுவதும் கொரனோ தொற்று பரவிக் கொண்டிருக்கும் போது, அமெரிக்க ஜனாதிபதிக்கு விழா எடுப்பதில் மும்முரமாக இருந்த மோடி அரசு, காலத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம்., கால அவகாசம் தராமல், சிந்தனையே இன்றி அறிவித்த திடீர் பொது முடக்கம், சாதாரண குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துப் போட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தமது இருப்பிடங்களை நோக்கி, உணவின்றி கால் பாதம் வெடிக்க, நடந்து கொண்டிருக்க, அவர்கள் மீது தடியடி நடத்தியது வெட்கித் தலை குனியச் செய்யும் செயலாகும்.
விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, கார்ப்பரேட் மயமாக்கும் வகையில் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. விவசாயிகள் ஓராண்டு காலம் போராடி, 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்த பின்பு, சட்டத்தை திரும்ப பெற்றது. அச்சட்டங்களின் சாரத்தை அழிக்காமலே நடைமுறைப்படுத்தும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. இந்திய வேளாண் துறையில் விதை தயாரிப்பு, இடுபொருள்களான உரம் பூச்சிச்கொல்லி மருந்து உற்பத்தி ஆகியவை ஏற்கனவே பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளுக்கு சென்று விட்டது. தற்போது வேளாண் பொருள் சந்தை, கார்ப்பரேட்டுகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டுள்ளது. விவசாயிகளுக்கான மானியங்கள் ஒழிக்கப்படுகின்றன. சுவாமிநாதன் குழு பரிந்துரை அமலாக்குவது பற்றி அரசு சிந்திக்கவில்லை. உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல், கடன் வலையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்னும் தொடர்கிறது.
இந்தியாவில் நிரந்தர தொழிலாளர் என்ற முறைமையையே அழிக்கும் வகையில், தொழிலாளர்களின் வேலைக்கும் ஊதியத்துக்குமான உத்தரவாதத்தை மோடி அரசு பறிக்கிறது. 150 ஆண்டு காலம் போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில், 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி இருக்கிறது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், இஎஸ்ஐ மருத்துவ வசதி ஆகியவையும் சிக்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எந்தச் சட்டத்தின் பயனையும் நுகர முடியாத வகையில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. ராணுவத்திலேயே நான்கு ஆண்டுகள் காண்ட்ராக்ட்டில் பணிபுரியும் அக்கினி பாத் திட்டத்தை கொண்டு வந்து விட்டனர். அதைப் பெருமைப்படுத்தி, தேச பக்தி என்பதை போன்ற மாயையை கட்டமைத்து வருகிறார்கள். இதனை எதிர்த்த இந்திய நாட்டின் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடி, துப்பாக்கிச் சூடு மற்றும் சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டன. கட்டிட மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஓரளவு சமூக பாதுகாப்பு தருவதற்கு துவக்கப்பட்ட மாநில நல வாரியங்களை ஒன்றிய அரசு சீர்குலைக்கிறது. வாரியங்களுக்காக வசூலிக்கப்படும் நல வரியையும் ஒன்றிய அரசே எடுத்துச் செல்லும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி, வணிக மயமாக்கப்பட்டு விட்டது. பணம் இருந்தால் தான் படிப்பு என்ற நிலை படிப்படியாக நுழைக்கப்படுகிறது. இதையும் தாண்டிப் படித்தும் வரும் சாதாரண குடும்பத்து மாணவர்களை உயர்கல்விக்கு செல்ல விடாமல் வடிகட்ட, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
வரலாற்றை திரித்தும், அறிவியல் உணர்வை மழுங்கடிக்கவும் பாடப்புத்தகங்களை ஆர்எஸ்எஸ் பிஜேபி அரசு திருத்துகிறது. பள்ளிப் பாடம் பயிலும் இளம் குருத்துகளின் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார்கள்.
மருத்துவம் சாதாரணமானவர்களின் கைகளுக்கு எட்டாத செலவாக மாறிவிட்டது. அரசு மருத்துவமனைகளைத் தாழ்த்தி, கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. அரசின் கைகளில் மருத்துவம் இல்லாவிட்டால் எத்தகைய கொடுமைகள் அரங்கேறும் என்பதை கொரோனா தொற்று நிரூபித்து விட்டது. ஆனாலும் மருத்துவத்தை மக்களுக்கு வழங்கும் கடமையை மோடி அரசு கைகழுவிக் கொண்டே இருக்கிறது.
மாநில அரசுகளை பொம்மைகள் ஆக்கி, அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசிடம் குவித்து கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. நாட்டின் பன்முக கலாச்சாரம் பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்தி மொழியை திணிக்க கடும் அழுத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு, நகர்ப்புற, மேல்சாதி, குட்டி முதலாளித்துவ வர்க்கம், வணிகர்கள்,வர்த்தகர்கள் போன்றோர் மத்தியில் இருந்தது. ஆனால், அவர்கள் கிட்டத்தட்ட சமூகத்தில் அனைத்து பிரிவுகளிலும் கால நேரத்தையும், காசு பணத்தையும் பயன்படுத்தி ஊடுருவியுள்ளனர். ஆர்எஸ்எஸ் சார்புடைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாணவர் அமைப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும் செயல் திட்டத்தையும் வேகமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ராணுவம் மற்றும் நீதித்துறையிலும் ஆர்எஸ்எஸ் செல்வாக்கைக் காண முடியும். கிராமப்புறங்களிலும் கூட, ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தமக்குப் பின்னால் அணி திரட்ட வேலை செய்கின்றன.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஆர்எஸ்எஸ் ஆட்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதற்கு அரசு திட்டங்கள் அவர்களுக்கு பயன்படும் வழியாகவும் மாறியுள்ளன. அவர்களது வேலையை சட்டபூர்வமாகவே அதிக வீச்சோடு செய்வதற்கு, திட்டப் பணிகள் துணை புரிகின்றன. ஆர்.எஸ்.எஸ் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாறுபட்ட குழுக்களை ஒன்றிணைப்பதற்கு இந்துத்துவா கருத்தியலையும் ஒரு கருவி ஆக்குகிறது.பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை, இந்து ஒற்றுமை என்ற பெரிய அடையாளத்துக்குள்ளாக ஒன்று சேர்த்து விட அவர்கள் நினைக்கிறார்கள். அதே நேரத்தில் சாதியப் படிநிலை, சாதியின் பெயரால் பாரபட்சம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமலும் பார்த்து இருக்கிறார்கள்.
வெவ்வேறு மதத்தினர்களுக்கிடையிலான திருமணத்தைத் தடை செய்தல், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருதல், மத நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்கிடையே பாரபட்சம் காட்டுதல் போன்ற பழமைவாத சமூக செயல் திட்டத்தை ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த வேலைகளில் எல்லாம், ஆர்எஸ்எஸின் மேல் சாதி, ஆணாதிக்க மனநிலை வெளிப்படையாக தெரிகிறது.
இவற்றையெல்லாம் எதிர்த்து ஆட்சேபனைக் குரல் எழுப்பினால் அவர்கள் மீது தேச விரோதிகள், அர்பன் நக்சல்கள், தேசத் துரோகிகள் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகிறது. யாரையும் கைது செய்து விசாரணை இன்றி சிறையில் வைத்திருக்கும் வகையில் ஊபா சட்டம் செயலில் இருக்கிறது. எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அறிவுஜீவிகள் உள்ளிட்ட மேலோர்கள் வெஞ்சிறையில் வாட்டப்பட்டு வருகின்றனர்.
அரசின் செயல்பாட்டை கண்காணித்து திருத்த வேண்டிய நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை பிஜேபி அரசு முடக்கிவிட்டது. காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரும்பாலானவை பெரும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் இருக்கின்றன. மாற்றுக் குரல் கொடுக்கும் எஞ்சிய ஊடகங்களை பிஜேபி அரசு அச்சுறுத்தி அடிபணியச் செய்கிறது.
நாடு ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிச நடவடிக்கைகள் பெருமளவு கூடிக் கொண்டுள்ளன.
இதனை எதிர்கொள்ள அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கட்சிகளின் பரந்த கூட்டணி உருவாக்குவதும், நிலை நிறுத்துவதும் அவசர அவசிய தேவையாகிறது. அதன் மூலம் தான், பிஜேபி ஆர்எஸ்எஸ்ஸின் ஆட்சிக்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றை உருவாக்க இயலும்.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியையும் அதன் கூட்டணியையும் தமிழகத்தில் தோற்கடித்து மாபெரும் வெற்றியை பெற்றது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றது. தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளையும் ஒன்றிய அரசின் பல்வேறு மத சார்பு கொள்கைகளையும், எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கூட்டணியை பலப்படுத்துவதற்கும் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணியை தமிழ்நாட்டில் தோற்கடிக்கவும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதி மக்களின் நலன்களை காப்பதற்கு முன்னின்று போராடுவதற்கும் அனைத்து பகுதி மக்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

சிராவயல் ஜீவா- காந்தி மணிமண்டபம்

அண்ணல் காந்தியடிகள், வர்ணாசிரமாத்தை உடைத்தெறிந்து ஆசிரமம் நடத்தி வந்த பேராசான் ஜீவா அவர்களை தானே நேரில் சென்று சந்தித்து உரையாடிய சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில்,அந்தச்சந்திப்பின் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று கட்சியின் மாநாட்டுக் கருத்தரங்கிலேயே தமிழ்நாடு அரசின் சார்பாக மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழநாடு முதல்வர் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில 25 வது மாநாடு நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறது.

தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு “தகைசால் தமிழர் “விருது வழங்கியமைக்கு நன்றி

தமிழ்நாட்டில் இடது சாரிகளின் முகமாகத் திகழும் மூத்த அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச்செயலர் உள்ளிட்ட பொறுப்புக்களில் திறம்பட செயலாற்றியவர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கதலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு “தகை சால் தமிழர் “ விருது வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்றும், அரசியல் அறிவியல் பொருளாதாரம் அனைத்தையும் கற்க, கற்பிக்க தமிழால் இயலும் என்றும் முதன்முதலில் முழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பேராசான் ஜீவா தொடங்கி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வழங்கப்பட்டதாகவே பொருளாகும்.
தகை சால் தமிழர் விருது வழங்கிய தமிழநாடு அரசுக்கும், முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில 25வது மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

75வது விடுதலை நாள்:
அக்டோபர் 9 முதல் 15 வரை தேசியக் கொடியேற்றம்

இந்திய மக்கள் அரும்பெரும் தியாகம் செய்து பெற்றெடுத்த விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழா 2022 ஆகஸ்ட் 15 ல் வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்எஸ்எஸ்-பிஜேபி ஆளும் ஒன்றிய அரசு, மூவண்ணக் கொடியேற்றி ஆகஸ்ட்13 முதல் 15ஆம் தேதி வரை விழா கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது
இதற்காக பாரம்பரியமான கதர் கொடிக்குப் பதிலாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை துணிக் கொடிளை மோடி அரசு இறக்குமதி செய்துள்ளது. உடற்பயிற்சியின் போது மூவண்ணக் கொடியை தோளில் துண்டாகப் போட்டு, அதைக் கொண்டு முகம் துடைத்தவர் மோடி. நாக்பூர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இதுவரை மூவண்ணக் கொடியை ஏற்றியது இல்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி, மனுநீதியைச் செயல்படுத்த வேண்டும் என அந்த கட்சியின் பிரபல தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஒரு வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் மூவண்ணம் தாங்கியது நமது தேசக் கொடி. அதற்கு நேர்மாறாக, ஆர்எஸ்எஸ்-பிஜேபி அரசு மத மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி, சிறுபான்மையினரை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. தனது சூழ்ச்சிகளை மறைப்பதற்கு தீவிர தேசியவாதம் பேசுகிறது
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகம் செய்து விடுதலையை வென்றெடுத்த, சிறை கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் தூக்குத் தண்டனைக்கும் படுகொலைகளுக்கும் ஆளான மாமனிதர்களின் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது பெருமிதமிக்க பாரம்பரியத்தோடு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை, வீடுகள் அலுவலகங்கள் அனைத்திலும் தேசிய கொடியேற்றி கொண்டாடுவது என முடிவு செய்கிறது. விடுதலைப் போராட்ட நோக்கங்களுக்கு ஏற்ப மீண்டும் இந்திய நாட்டைக் கட்டியமைக்க உறுதியேற்பது என இந்த மாநாடு முடிவு செய்கிறது.

  1. குடியுரிமை திருத்தச் சட்டம்.
    குடிமக்கள் திருத்த சட்டத்தை டிசம்பர் 2019ல் நாடாளுமன்றத்தில் வைத்து பிஜேபி நிறைவேற்றியது. ஒருவரின் குடியுரிமையை, அவரது மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்கவும் மறுக்கவும் செய்யும் அதிகாரத்தை உருவாக்கி, நமது நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்தையே ஒட்டு மொத்தமாக மாற்றி அமைப்பது தான் இந்த திருத்த சட்டமாகும். இது 1955 ஆம் ஆண்டின் குடிமக்கள் சட்டத்தை திருத்தி, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பருக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்தப் பகுதியில் இருந்து வந்திருக்கிற முஸ்லிம்களை மட்டும் குடியுரிமை கொடுக்க முடியாது என அது விலக்கி வைக்கிறது. இதனோடு குடிமக்களுக்கான தேசிய பதிவேடு (என்ஆர்சி) என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்திய மக்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும் என்னும் அதிகாரத்தை அரசுக்கு தந்தது. குடிமக்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ‘ஷாகீன் பார்க்‘கிலும், நாட்டின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில், குறிப்பாக பெண்கள் அமர்ந்து பிரம்மாண்டமான கண்டன இயக்கத்தை நடத்தினார்கள். ஆனாலும் இந்த சட்டம் இன்றைக்கும் ரத்து செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது தமிழ்நாடு மாநில மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
  2. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தரும் தேசிய பணமாக்கல் திட்டம்- கைவிடுக
    நிதியமைச்சர் அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டம் (ழிவிறி), நாட்டின் கேந்திரமான துறைகள், உள் கட்டமைப்புக்கள், ராணுவம், விண்வெளி ஆய்வு, பொதுத்துறை வங்கிகள் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் குத்தகை என்ற பெயரில், எந்த முதலீடும் இல்லாமல் தனியாரிடம் ஒப்படைக்கும் கேடுகெட்ட திட்டமாகும். இது ஒரு நடுத்தர கால திட்டமாம். இதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாயை ஈட்டுவது என அரசு தீர்மானித்து இருக்கிறது. இது தேசிய சொத்துக்களை தனியார் மயமாக்குவதில், நேரடி விற்பனைக்குப் பதிலாக சற்று புரியாத மொழியில் பேசி, கடைசியில் தரைமட்ட விலைக்கு நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுகிற மாற்று வழியாகும். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேச சொத்துக்களை தனியார் கையில் தருவதற்கான தனித்திட்டம் தான் இது. ஒரு துறையில் அனுபவமே இல்லாத, தொழிலை சீர்குலைக்கும் மோசமான நிர்வாகம் கொண்ட, திறனற்ற முதலாளிகளும் கூட, பிஜேபியின் பக்கம் நின்றால், தேசத்தின் பிரம்மாண்டமான சொத்துக்களை எளிதாக கைப்பற்றி விட முடியும்.
    தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. உலகத்தரம் மிகுந்த திருச்சி பிஎச்இஎல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் வழங்காமல் ஒன்றிய மாநில அரசுகள் தவிக்க விடுகின்றன. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பங்கு விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
    மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சொத்துக்களான பொதுத்துறை மற்றும் அரசுடைமை நிறுவனங்களை, தனியாரிடம் தந்து நாட்டின் இறையாண்மையையும், பாதுகாப்பையும், சுயசார்பையும் மோடி அரசு அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. பொதுத் துறையை தனியார் மையப்படுத்துவதை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு வலியுறுத்துகிறது. தனியார் மயத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கவும், பொதுத்துறை தொழிலாளர்கள் போராடும் போது உறுதியாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சேர்ந்து போராடவும் முடிவு செய்கிறது.
  3. தேர்தல் சீர்திருத்தம் உடனடி தேவை
    பொதுத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலிலும் தசை வளமும் பண பலமும் அரசு அதிகாரமும் தேர்தல் முடிவை நிர்ணயிக்கின்றன. மிக நன்கு திட்டமிட்ட, கண்காணிப்பு ஏற்பாடுகளோடு இந்த சீர்குலைவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பெரும் பண செலவுக்கான தொகை நேர்மையற்ற முறையில் ஈட்டப்படுகிறது. ஆட்சிக்கு யார் வந்தாலும் ஊழலுக்கான வழியை இது திறந்து வைக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றிய நம்பிக்கையின்மை பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உடனடியாக தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் ஜனநாயக நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். அரசியலும் ஒழுக்கமும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் இந்தச் சூழலில் இந்திரஜித் குப்தா குழு பரிந்துரைத்த தேர்தல் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது அவசியமானது. தேர்தல் செலவுகளை அரசே மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும்.
    மிகுந்த பண, தசை பலம் கொண்ட கட்சிகளுக்கு மாற்றாக சிறிய கட்சிகளுக்கு வாக்களித்தால் தமது வாக்கு வீணாகிவிடும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் அந்தக் கட்சியின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க உதவும் என்பதை உறுதிப்படுத்த, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மெய்யான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும்.
    எனவே விகிதாச்சார தேர்தல் முறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதை செயல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
  4. அக்னி பாத் : ராணுவத்தில் ஒப்பந்தக் கூலிமுறை – கைவிடுக!
    ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான ‘அக்னி பாத்’ என்ற நான்காண்டு ஒப்பந்தக் கூலி முறையை அரசு அறிவித்துள்ளது. சித்தாந்த வழிகாட்டுதல் ஏதுமில்லாமல், சமூக வலைத்தளம் போன்ற புதிய ஊடகங்களின் செல்வாக்கால் பெருமளவிலான இளைஞர்கள் உதிரிகளாக மாற்றப்படுவது தெரிகிறது. வாய்ப்புகளுக்கான கதவுகள் அவர்கள் முகத்தில் சாத்தப்படும் போது அவர்களுக்குள் எழும் விரக்தியும் கோபமும் அவர்களை இந்துத்துவ கருத்தியலுக்கு இழுத்துச் செல்கிறது.
    பாரபட்சமான, முரண்பாடான மற்றும் சமூகத்தில் சண்டையை ஊக்குவிப்பதையே இந்த நாட்டின் விழுமியங்கள் எனக் கருதச் செய்யும்
    வெறுப்பு மற்றும் பிறவற்றின் அடிப்படையில் உருவாகும் இந்த கருத்தியல் நமது எதிர்காலத்தை விஷமாக்குகிறது.
    தமிழ்நாட்டுப் பஞ்சாலைகளில், சுமங்கலித் திட்டம் என்ற பேரில், திருமணமாகாத இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி மூன்று ஆண்டுகள் கழித்து, கையில் திருமணத்திற்கு பணம் தந்து அனுப்பி வைத்தார்களே, ஒரு நவீன கொத்தடிமை திட்டம்! அதன் பிரதிபலிப்புதான் இந்த அக்னிபாத்.
    இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அக்கினிபாத்தில், இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அரசு கூறியிருப்பது, தனக்கான ஆட்களை மட்டும் வடிகட்டிச் சேர்த்துக் கொள்வதற்கான முன்னோட்டம்.
    வறுமையும், வேலைவாய்ப்பின்மையும், மத சாதி துவேஷமும் நிறைந்த ஒரு நாட்டில், பாஜகவுக்கு நெருக்கமான இளைஞர்களுக்கு நான்காண்டு இராணுவப் பயிற்சியை அளித்து வீதியில் இறக்குவது பெரும் ஆபத்துக்குரியதாகும்.‌இப்போதே நாடறிந்த ரவுடிகளை தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு பாஜக தசை பலம் காட்டி வருகிறது. சிதம்பரத்தில் நந்தனுக்கு நிகழ்ந்தது போல, தனக்கு எதிர்க் கருத்துச் சொல்பவர்களை அக்கினியில் இறக்கித் தீர்ப்பது தான் ஆர்எஸ்எஸ்ஸின் நிலைபாடு. அதற்கான பாதையை இந்த அக்னிபாத் வகுக்கிறது.
    மேலும் அண்டை நாடுகளோடு எப்போதும் தீர்க்க முடியாத முரண்பாடுகளை ஆர்எஸ்எஸ் – பாஜக இந்துத்துவ மதவெறி அரசு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் உள்ள நிரந்தர வீரர்களின் எண்ணிக்கை சரி பாதிக்கும் அதிகமாக குறைய போகிறது. அந்த இடத்தில் இந்த ஒப்பந்த வீரர்கள் நுழைக்கப்படுகிறார்கள்.
    நாட்டிற்கும், நாட்டுப் பாதுகாப்புக்கும், இளைஞர்களுக்கும், கேடுவிளைவிக்கும் திட்டம் இந்த அக்னிபாத். எந்த நிபந்தனையும் இன்றி இதைத் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
  5. ராணுவத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன் ஆக்காதே! தனியாரிடம் விற்காதே!
    இந்திய ராணுவத்துக்கான ஆயுதங்கள் கருவிகள் உடைகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு என்று நாடு முழுமையும் 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய இடங்களில் ஆறு தொழிற்சாலைகள் இருக்கின்றன.
    இந்த தொழிற்சாலைகளை ஏழு கார்ப்பரேஷன்களாக ஒன்றிய அரசு மாற்றியது. இதனை எதிர்த்து விட்டுக் கொடுக்காத வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இதற்கு முன்னர் இறங்கியுள்ளனர். எனவே இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன்பு பாதுகாப்பு துறை தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதை, பிரச்சாரம் செய்வதை, நிதி உதவி செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கி தனிச்சட்டத்தையே ஒன்றிய அரசு இயற்றியது.
    ஏழு கார்ப்பரேஷன்களும் தனியாருக்கு விற்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளின் கட்டளைக்கு அடி பணிந்து, சொந்த நாட்டு ராணுவத்தையே அந்நிய நாட்டுக்காரர்களுக்கு கான்ட்ராக்ட் விடுகிற அளவுக்கு பாஜக ஆட்சியாளர்கள் செல்வது பெரும் கண்டனத்துக்குரியதாகும்.
    கார்ப்பரேஷன்களாக மாற்றப்பட்ட 41 தொழிற்சாலைகளையும் மீண்டும் அரசே ஏற்க வேண்டும் என்றும் இவற்றை தனியாருக்கு விற்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் கைவிட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
  6. ஆளுநர் பதவி தேவையில்லை!
    முன்பெல்லாம் ஆளுநர் பதவி என்பது மூத்த ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்குரியதாக இருந்தது. தற்போது ஐபிஎஸ், ஐஏஎஸ் பட்டம் பெற்றவர்கள் இந்திய அரசுக்கு உளவு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் ஆளுநராக பொறுப்பு ஏற்கின்றனர். தற்போது தமிழகத்தின் ஆளுநராக இருக்கின்ற ரவீந்திர நாராயண ரவி ஐபிஎஸ் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். வடகிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் தேசிய துணை பாதுகாப்பு அதிகாரியாகவும், 2012ஆம் ஆண்டு வரை மத்திய உளவுத்துறை, பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு உளவுத்துறை அதிகாரியாகயும் செயல்பட்டவர்.
    சனாதான கொள்கைகளை பகிரங்கமாகப் பேசுபவர். தர்மபுரம் உட்பட பல ஆதினங்களுக்கு நேரடியாக சென்று சங்பரிவார் அரசியலை பேசக்கூடியவர். வரலாற்றை திரித்துப் பேசும் வல்லமை படைத்தவர். ஆரியம், திராவிடம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவு தான் என்று பகிரங்கமாக சொல்லக்கூடியவர். மாநில உயர்கல்வி அமைச்சரை புறக்கணித்து, மத்திய இணை அமைச்சரை கௌரவ விருந்தினராக அழைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செய்தவர். இதுபோன்று பல மாநில ஆளுநர்களை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.
    ஆளுநருடைய பணி அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்வது என்றால் அதனை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி செய்துவிடலாம். ஆண்டுதோறும் மாநில அரசு எழுதித்தரும் உரையை படிப்பதற்கு ஆளுநர் தேவையில்லை. அதனை சட்டமன்ற சபாநாயகர் படித்து விடலாம். பல்கலைக் கழகத்தினுடைய வேந்தர்களாக ஆளுநர்கள் பணியாற்றுவதை மாற்றி முதலமைச்சரோ அல்லது உயர் கல்வித் துறை அமைச்சரோ அந்தப் பொறுப்பை ஏற்கலாம். குடியரசுத் தலைவருக்கு மாநில ஆளுநர் மூலமாக தகவல்கள் செய்திகள், அனுப்புவதை மாநில அரசே நேரடியாக செய்யலாம்.
    மாநகர்களுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஆளுநருக்கு என தனி மாளிகைகள் அவசியமில்லை. சென்னையில் அமைந்துள்ள ராஜ்பவன் 150 ஏக்கர் நிலம் கொண்டது. அவருடைய படை, பரிவாரங்களை பாதுகாப்பதற்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களை மாநில அரசு செலவிடுகிறது. இதற்காக வழங்கப்படுகின்ற சம்பளம், பாதுகாப்பு உட்பட செலவழிக்கப்படுகின்ற பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்களுடைய வரிப் பணத்தின் மூலமாக வசூலிக்கப்படுபவை. தேவையற்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, நியமனம் செய்யப்படுகின்ற ஆளுநர் பதவியை உடனடியாக அகற்ற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.
  7. கூடங்குளம் அணுவுலை மையத்தை பூங்காவாக மாற்றாதே! கழிவுகளை கொட்டாதே!
    திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1988-ம் வருடம் இந்தியாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இந்திய அணுமின் கழகத்தால் அணுமின் நிலையம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சியால் ரஷ்யாவுடன் தொடர்பு ஏற்பட்டு 1997 ஆம் வருடம் 1,2 அணுஉலைகள் 3.5 பில்லியன் டாலர்களில் ( ரூ13615 கோடி) கட்டப் பட தொடங்கியது. மேலும் அணு உலைகளை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் அணுமின் கழகம் மேற் கொண்டுள்ளது. அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்று அமெரிக்கா எதிர்த்தது. முதல் இரண்டு அணு உலைகள் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் எனச் சொல்லப்பட்டது. 36 சதவிகிதம் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அவையும் அடிக்கடி பழுது ஏற்படும் நிலை உள்ளது. 39 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேலும் 2 அணு உலைகள் கட்டப்படுகின்றன. 2024 – ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    தற்போது மேலும் 2 அணு உலைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் அணு மின் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலையும் 1,200 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆறு அணு உலைகளையும், 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகளையும் இங்கு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்களை இங்கு கொண்டுவருவதற்காக 2004ஆம் ஆண்டு சிறிய துறைமுகமும் கட்டப்பட்டுள்ளது. 2013 ம் ஆண்டிற்குப் பிறகு 40 முறைகளுக்கு மேல் பழுது ஏற்பட்டு சீராக மின்சாரத்தைத் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது முதல் இரண்டு அணு உலைகள் பழுதுபட்டுள்ளது. அணு உலைக் கழிவுகளை கூடங் குளத்திலேயே அணு உலைக்குள் தொட்டியில் அணு சுழற்சிக்காக என தேசிய அணுமின் கழகம் பாதுகாத்து வருகிறது.
    2018 ல் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி 2022 ஏப்ரல் மாதத்திற்குள் அணுக் கழிவுகளை பாதுகாக்க வழிகாண வேண்டும் என்பதற்கு இணங்க கூடங்குளத்திலேயே பாதுகாப்பு பெட்டகத்தையும் அமைத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் அணு மின் நிலையங்களின் கழிவுகளை பாதுகாப்பதற்கும் இந்த இடத்தையே தேர்வு செய்துள்ளது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இவ்விடத்தில் 6 அணுஉலைகள், கழிவுகளை பாதுகாத்து வைக்கும் பெட்டகங்கள், அணுக் கழிவை மறுசுழற்சி செய்யும் ஆலை இதற்குமேல் அணுக்கழிவு மையம் அமைத்தால் மிகப் பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. ஜப்பான் புக்குஷிமா டாகிச்சி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து போல இங்கும் ஏற்பட்டு விடக்கூடாது. கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு அருகிலேயே 4328 உருளைகளில் அணுக்கழிவுகள் பாதுகாத்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். பாதுகாத்து வைக்கப்படும் அணுக் கழிவுகளால் ஏற்படும் கதிர்வீச்சு சுற்றுச்சூழலையும், கடல்வாழ் உயிரினங்களையும், மனித சமுதாயத்தையும் கடுமையாக பாதிக்கும்.
    அணு உலை பூங்காவாக கூடங்குளத்தை மாற்றுவதையும், அணுக் கழிவுகளை கொட்டி வைக்கும் கிட்டங்கியாக மாற்றுவதையும் உடனடியாக நிறுத்துமாறு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அணு மின் கழகத்தையும், ஒன்றிய அரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு கேட்டுக் கொள்கிறது
  8. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குதார்களிடம்.. பல ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக பிடித்துள்ளதை உடன் திருப்பி கொடு….
    இந்திய மக்கள் தமது கையிருப்பை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டிய கட்டாயத்தை பணமிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் இவர்களின் பணம் ரூபாய் 5000 கோடி அபராதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்குகளில் 30.8 கோடி பேர் உள்ளனர். கடந்த நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் 2433 கோடிரூபாய் எடுத்துள்ளது. இந்த அபராத தொகைக்கு ஜி.எஸ்.டி கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இம்முறைகளை கைவிட்டு.. மேற்கண்ட நிலையில் பிடிக்கப்பட்ட தொகை முழுவதையும் திரும்ப அவரவர் கணக்கில் திருப்பி வழங்கிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு கேட்டுக் கொள்கிறது .
  9. ஜனநாயக நிறுவனங்களை நிலை குலையசெய்யும், ஒன்றிய அரசின் போக்கை கண்டித்து.
    திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதாகட்சி 2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது. அது முதல் ஒன்றியஅரசு ஒரு பாஸிஸ அரசாக உருவாகி வருகின்றது. நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும், ஒன்றிய அரசின் நோக்கத்திற்காக சேவை புரியும் கருவிகளாக மாற்றப்பட்டு வருகின்றது.
    நாடாளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகத்துறை, இவை நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று கூறப்பட்டது. நாடு விடுதலை பெற்றதில் இருந்து, பல்வேறு கருத்துக்களை பல்வேறு கட்சிகள் எடுத்துரைத்து அதன் மூலம் தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நிவாரணம் பெறும் இடமாக நாடாளுமன்றம் இருந்தது.
    திரு.நரேந்திர மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள், மக்கள் கோரிக்கைகளை பேசுவதற்கான வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானிக்கும் அரசாக இது உள்ளது. பிரதமராக உள்ள திரு.நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவது அரிதாக இருக்கின்றது. நாட்டு மக்களை பாதிக்கும் பல்வேறு சட்டங்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்படுகிறது.
    இந்திய நிர்வாகத் துறையில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் உள்ளது. இதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் காணக் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் பிஜேபி தலைவராக உள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியே இதற்கு உதாரணம். டெல்லி தொடங்கி குக்கிராமம் வரை இந்துத்துவா கொள்கையில் பயிற்சி அளித்து அரசு எந்திரத்தில் ஊடுருவும் வேலையை ஆர் எஸ் எஸ் அமைப்பு நீண்ட காலமாக செய்து வருகிறது. முன்னாள் அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் பிஜேபியில் சேரும் தொடர்கதை நடக்கின்றது. தற்போது அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, நான்காண்டுகள் வேலையில் வைத்து, பிறகு கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து லட்சக்கணக்கில் நாட்டிற்குள் அனுப்புகின்ற வேலையை செய்வது எளிதாக தட்டிக் கழிக்க கூடிய விஷயம் அல்ல.
    ரஞ்சன் கோகய் என்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஜேபியின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை நாடே அறியும். இவர்தான் அயோத்தியில் ராமர் பிறந்ததற்கான ஆதாரமில்லை, ஆனால் அங்கு தான் ராமர் பிறந்தார் என்று ராம பக்தர்கள் நம்புகிறார்கள், எனவே அங்கு தான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தவர். பிகாசஸ் உளவு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கேட்பாரற்று கிடைக்கிறது. ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனுக்கள் ஆயிரக்கணக்கில் ஜம்மு காஷ்மீரில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு ஆண்டுகள் சில ஆயினும் நிலுவையில் உள்ளன. மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான மனுக்கள் இன்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கு அக்கறை காட்டப்படாமல் உள்ளது. இதை போல் ஏராளமான அரசியல் சட்டம் மீறல்களைப் பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் தேங்கி போய் உள்ளன. ஒட்டு மொத்த நீதி துறையே ஒன்றிய அரசின் சார்பில் உள்ளதோ என்ற நிலை தான் உள்ளது.
    அவசரநிலை காலத்தின் ஊடகங்களின் ஜனநாயக தன்மை தற்போது முற்றிலும் இல்லை. தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை பெற அரசை சார்ந்து இருப்பதாலும், இயல்பான அரசு சார்ந்த மனநிலையும்,அரசு பற்றிய பயமும் ஊடகங்களை ஒன்றிய அரசின் ஊதுகுழலாக மாற்றி உள்ளது.
    மேலும் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல்களை நடுநிலையோடு நடத்த வேண்டிய தேர்தல் கமிஷனும் பக்க சார்பு எடுப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதையெல்லாம் எதிர்த்து நிற்க வேண்டிய, போராட வேண்டிய இந்திய சிவில் சமூகமும் வாய் மூடி மௌனியாக இருப்பது, இவைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போல தெரிகின்றது.
    ஜனநாயக நிறுவனங்களை நிலை குலையசெய்யும், அரசியலமைப்புச் சட்டத்தை துச்சமெண மதிக்கும், ஒன்றிய அரசின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 ஆவது மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய போக்கை எதிர்த்து போராட தமிழ் நாட்டு மக்களையும் ஒட்டு மொத்த இந்திய உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கின்றது.
    10.நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் “நீட் மசோதாவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசு உடனடியாக பெற்றிட வேண்டும்.
    மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான,நீட் நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
    மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கிறது.
    அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது.
    கிராமப்புற மாணாக்கர்களுக்கும், தமிழ் வழியில் படிக்கும் மாணாக்கர்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும்,முதல்தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கும் எதிராக உள்ளது.
    சிறந்த தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற வசதி, வாய்ப்புகள் இல்லாத மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது.
    எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டிற்குரிய மருத்துவ இடங்களுக்கு விலக்கு வேண்டும் எனக் கோரி தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
    நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற உறுதியான நடவடிக்கைகளை கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சி மேற்கொள்ளவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டிற்குரிய இளநிலை மருத்துவ இடங்களுக்கு , நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெற சட்ட முன்வரைவு , நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. மேல் நடவடிக்கைகளுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
    ஆளுநர் ஆர்.என். ரவி, அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பாமல் கிடப்பில் போட்ட நடவடிக்கையை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.அதன் காரணமாக ,அம்மசோதாவை ஆளுநர் சட்டமன்றத் தலைவருக்கே சில காரணங்களைக் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
    இந்நிலையில் ,சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் மூலம் அந்த மசோதா மீண்டும் 2022 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
    நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு ,ஆளுநர் ஆர்.என்.ரவி ,அந்த மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பினார்.
    தற்பொழுது ஒன்றிய அரசு சில விளக்கங்களை மாநில அரசிடம் கேட்டுள்ளது. மசோதாவை கிடப்பில் போட முயல்கிறது.
    இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறக்கூடாது என்ற நோக்கத்துடன் ஒன்றிய அரசும், அதன் முகவர் போல் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரும் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
    இது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான போக்காகும். தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.அதன் அதிகாரத்தை கேள்விக்குரியதாக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
    எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, “நீட் சட்ட முன்வரைவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும் என ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
  10. அரசே.. உறுதி அளித்தபடி விவசாயிகளின் கோரிக்கைகளைஉடன் நிறைவேற்று..
    ஒன்றிய அரசு 3 வேளாண் விரோத சட்டங்களை நாடாளுமன்ற கூட்டத்தில்நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் அரசு விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல் உத்தரவாதம் என்ற பொறுப்பில் இருந்து விலகி தனியார் வியாபாரிகள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வேட்டைக்கு வழி வகுக்கும் சட்டமாகும் என இந்தியா முழுவதும் கடந்த 2020 நவம்பர் முதல் நாடு தழுவிய 200க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்சார்பில் இந்தியா முழுதும் தொடர் போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியதுடன் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தை திரும்ப பெற்றது. மேலும் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளை செயல்படுத்துவோம் என்று உறுதி ஒப்பந்தம் செய்து 7 மாதங்கள் கடந்தும் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என்பதுடன்.. மின்சார திருத்த மசோதா2022ஐ மீண்டும் சட்டமாக்கிட ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்து இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு மின் மசோதாவை கைவிட வேண்டும். விவசாயிகளின் போராட்டக் குழுவுவிடம் ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.
  11. ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நூல் விலை உயர்வு.
    நாட்டின் மொத்த துணி நூல் உற்பத்தியில் தமிழ்நாடு 20% உற்பத்தி செய்கிறது. ஜவுளி தொடர்பான வர்த்தகத்தைப் பொருத்தவரை மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த நூற்பாலைகளில் சரி பாதி தமிழ்நாட்டில்தான் உள்ளன. பனியன், ஆயத்த ஆடை, தையல், திரைகள், போர்வைகள், விசைத்தறி, கைத்தறி என பல்வேறு வகைகளில் 20 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஜவுளி துறையில் பணிபுரிந்து, தமது வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றனர். பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் டாலர் சிட்டியான திருப்பூரில், பனியன் ஆயத்த ஆடைத் தொழில்களில் மட்டுமே 10 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர். இதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஆவர்.
    ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் இரண்டு சதம் மட்டுமே தமிழ்நாட்டில் விளைகிறது.
    அண்மை ஆண்டுகளில் பஞ்சு விலை உயர்ந்து கொண்ட போகிறது. இதற்கு ஏற்ப நூல் விலையும் உயர்கிறது. ஒரே ஆண்டில் 150 சதவீதத்திற்கும் அதிகமாக நூல் விலை உயர்ந்தது. ஆனால் நூல் விலை உயர்வுக்கு ஏற்ப பனியன், ஆயத்த ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை. ஏற்கனவே உற்பத்தியானவை விற்பனை இல்லாமல் சந்தையில் தேங்கி கிடக்கின்றன.
    மேலும் பெருமளவிலான ஆர்டர்களைப் பெறும்போது மூன்று மாதத்தில் இருந்து, அதற்கு ஆறு மாதத்திற்கு முன்னதாகவே விலை நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்குள் நூல் விலை பலமுறை ஏறி விடுவதால், நட்டத்திற்கு உற்பத்தி செய்ய நேர்ந்து தொழில் சீரழிவுக்கு ஆளாகிறது.
    பஞ்சு விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாகும். உள்நாட்டு தேவைக்கு பஞ்சு பற்றாக்குறை இருக்கும்போது, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அரசு அனுமதி தந்திருக்கிறது. பஞ்சு வணிகம், வட இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட் குடும்பங்களிடம் உள்ளது. வேண்டுமென்றே பஞ்சைப் பதுக்கி, பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி, திட்டமிட்டு விலையை உயர்த்துகிறார்கள். இது ஒன்றிய அரசுக்கு நன்கு தெரிந்தே நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கப் பயன்படுத்தும் பல வழிகளில் இதுவும் ஒன்றாக அமைகிறது.
    தமிழ்நாட்டின் தாய் தொழிலாக இன்றும் ஜவுளி தொழில் திகழ்வதால், ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளாலும், வட இந்திய பஞ்சு வணிகர்களின் லாப கொள்ளை லாபப் பேராசையாலும், தமிழ்நாடு படுமோசமான பாதிப்புக்கு ஆட்படுகிறது. பனியன், ஆயத்த ஆடை உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை இழப்பு அதிகரித்து மூடப்படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீதும் சமூக வாழ்வின் மீதும் இது பெரும் எதிர்முனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
    ஏற்கனவே பருத்தி விளைந்து குவிந்த தமிழ்நாட்டில்,‌ இப்போது பருத்தி விவசாயம் நடைபெறாத நிலை உருவாகிவிட்டது. இதற்கான காரணங்களை கண்டறிந்து தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்கேற்ற வகையில் விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு திட்டங்கள் கொண்டு வரவும், உரிய வேளாண் ஆய்வு மையங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஒன்றிய அரசு உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உள்நாட்டு தேவைக்கு தட்டுப்பாடு இன்றி பஞ்சு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஜவுளி தொழிலைப் பாதுகாக்க, ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அழுத்தம் தந்து நூல் விலையை கட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    13.சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்
    சமூக வாழ்வில் பிரச்சனைகள் கூடிக்கொண்டே செல்கின்றன. இது சட்டம் ஒழுங்கு, குற்றவியல் நடவடிக்கைகளால் தீர்த்துக் கொள்ளப்படக் கூடாது என்பதற்காகவே, வலுவான நீதிமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் குறை இருப்பதாக கருதுபவர்கள், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உயர் நீதிமன்றங்களின் பல தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது, மேல்முறையீட்டின் அவசியத்தை உணர்த்துகிறது.
    நாட்டின் வடகோடியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு பயணப்பட்டு வர முடியாததாலேயே, பல வழக்குகளில் நியாயம் இருந்தும் மேல் முறையீடு செய்ய முடியவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெருஞ்செலவைச் செய்ய இயலாத சாதாரண குடிமக்களே ஆவர். பணமும் அதிகாரமும் கொண்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து, சாமானியர்களைப் பாதுகாக்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும்.
    டெல்லிக்கு வெளியிலும் உச்ச நீதிமன்றம் செயல்பட, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆவது பிரிவு வழி தருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை, மற்றும் நான்கு சட்ட ஆணையங்களின் அறிக்கைகளில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய ஊர்களில், உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.
    சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைந்தால், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து சாதாரண மக்களும் பயன்பெறுவார்கள்.
    சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க பொருத்தமான நடவடிக்கைகளைத் துவக்குமாறு ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநாடு வலியுறுத்துகிறது.
    14.மதுரையில் எய்ம்ஸ்
    15.கச்சத்தீவை மீட்க வேண்டி…
    இந்திய நாட்டிற்கு சொந்தமான இலங்கை யாழ்ப்பாணம்‌ அருகில்‌ உள்ள கச்சத்‌ தீவு 1.15 சதுர கிலோமீட்டர்‌, 285 ஏக்கர்‌ பரப்பளவு கொண்டது. இந்தியா இலங்கை இடையே உள்ள பாக்‌ நீரிணையில்‌ அமைந்துள்ள இந்தியாவிற்கு உரிமையான கச்சத் தீவை இலங்கைக்கு இந்திராகாந்தி தலைமையில்‌ இருந்த காங்கிரஸ்‌ அரசு சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில்‌ 1974 ஜூலை 8-ம்‌ தேதி வழங்கியது. கச்சத்தீவு மிகச் சிறிய தீவு. இங்கு மனிதர்கள்‌ வாழவில்லை. மீன்பிடி வலைகளை காயவைக்கவும்‌, மீனவர்கள்‌ தங்கி ஓய்வு பெறவும்‌ உதவிகரமாக உள்ளது. புனித அந்தோனியார்‌ கோவில்‌ திருவிழாவில்‌ ஆண்டுதோறும்‌ இரு நாட்டு மக்களும்‌ பங்கு பெற உரிமை உள்ளது. வங்காள விரிகுடா, மன்னார்‌ வளைகுடா பகுதியில்‌ அமைந்துள்ள இத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்துக்‌ கொடுக்கப்பட்டதால்‌ மீனவர்களின்‌ கடல்‌ உரிமைகள்‌ பாதிக்கப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச்‌ சட்டப்பிரிவுக்கு விரோதமாக கொடுக்கப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றத்தில்‌ இந்திய அரசு உறுதி செய்துள்ளது. 1983-ல்‌ புனித அந்தோணியார்‌ ஆலய திருவிழா நிறுத்தப்பட்டுவிட்டது. இருபதாண்டுகள்‌ தமிழர்கள்‌ பிரச்சினை காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு மீனவர்கள்‌ ஆளாகியுள்ளனர்‌. மீன்‌ பிடிக்கும்‌ உரிமை மறுக்கப்பட்டுள்ளதுடன்‌, இலங்கை இராணுவம்‌ மீனவர்களை கைது செய்வதும்‌, சித்திரவதை செய்வதும்‌ தொடர்கிறது. பல மீனவர்களின்‌ உயிரும்‌ பறிக்கப்பட்டு இருக்கின்றது. எல்லை தாண்டி வந்ததாக தேவையற்ற பல பொய்‌ வழக்குகளும்‌ இலங்கை கடலோரப்‌ பாதுகாப்புப்‌ படையால்‌ போடப்படுகின்றது. எனவே கச்சத்தீவை மீட்க வேண்டும்‌ என்று மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்‌ நீதிமன்ற முறையீடுகள்‌ போன்ற நடவடிக்கைகள்‌ பலனளிக்காத நிலை தொடர்கின்றது. அவதிகளுக்கு உள்ளாகும்‌ இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசின்‌ கடமையாகும்‌.
    எனவே, இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்‌ என இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ தமிழ்நாடு மாநில இருபத்தி ஐந்தாவது மாநாடு ஒன்றிய அரசை கேட்டுக்‌ கொள்கிறது.
    16.அஞ்சல் துறையை பாதுகாப்போம்
    இந்தியா முழுமையும் கிராமங்கள் துவங்கி பெருநகரங்கள் வரை 1,55,000 அஞ்சலகங்கள் மக்களுக்கு சேவை செய்து வரும் அஞ்சல் துறையை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து தனியார் மயமாக்கும் நடவடிக்கையை அஞ்சல் துறையும் ஒன்றிய அரசும் தீவிரப்படுத்தியுள்ளது.
    ஒன்றிய அரசு அமைத்த சுப்ரமணியம் கமிட்டி அஞ்சல் துறையை சேமிப்பு வங்கி, ஆயுள் காப்பீடு, பார்சல் சேவை, பாரம்பரிய மணியார்டர் மற்றும் கடிதப் போக்குவரத்து என பகுதிகளாகப் பிரிக்க பரிந்துரைத்துள்ளது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களில் மக்களுக்கு செய்யும் சேமிப்புப் பிரிவு பணியையும் இருப்பில் உள்ள தொகையும் ஏற்கனவே துவங்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக்கு மாற்றுவது என முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
    இதுகாறும் கிராமங்களுலும், நகரங்களிலும் அஞ்சல் ஊழியர்களின் கடும் உழைப்பால் சேகரிக்கப்பட்ட சேமிப்பு கணக்குகளை மாற்றுவதாலும் ஆயுள்காப்பீடு தனியே பிரிக்கப்படுவதாலும் வேலைப்பளு குறைவு, ஆட்குறைப்பு, அலுவலக மூடல் போன்றவற்றாலும் அஞ்சல் ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவதுடன் பொதுமக்களுக்கும் இடர்ப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    இப்போதே, குறையும் வருவாயை சரிகட்ட அஞ்சல் துறை சாராத பாஸ்போர்ட் வழங்குதல், ஆதார் சேவை, தங்க பத்திர விற்பனை, இட்லி, தோசை மாவு விற்பனை போன்ற அலுவல்களை கமிசனுக்காக செய்யச் சொல்லி ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
    கிராமம் முதல் பெருநகரம் வரை 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்பழுக்கற்ற சேவையை வழங்கி வரும் பாரம்பரியமிக்க அஞ்சல் துறை அதன் அடையாளத்தை தொலைத்து விடாதவாறு தக்க வைத்து மக்களுக்கான சேவையை தொடர்ந்து வழங்குவதுடன் அஞ்சல் ஊழியர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
    17.மின்சார திருத்த சட்டத்தை கைவிடுக !
    மின்சாரத் திருத்தச் சட்டத்தை பரிசீலிப்பதாக விவசாயிகள் போராட்டத்தின் போது ஒன்றிய அரசு வாக்குறுதி தந்த போதிலும், சட்டத்தை நிறைவேற்றி செயலாக்குவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது. திருத்தச் சட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தி, விநியோகம் உள்ளிட்டவை தனியார் மயமாகும். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீட்டுக்கு 100 யூனிட் இலவசம் மற்றும் விசைத்தறி கைத்தறி உள்ளிட்ட மின் கட்டணச் சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும். கட்டுப்பாடு இல்லாமல் மின் கட்டணம் உயர்த்தப்படும். மின் ஊழியர்கள் ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும்.மின்சாரத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறார்கள். நாட்டின் நலன், சாதாரண மக்களின் நலன் கருதி மின்சார திருத்த சட்டத்தை கைவிடுமாறு ஒன்றிய அரசை மாநாடு வலியுறுத்துகிறது.
  12. என் டி சி ஆலைகளை இயக்குக !
    தமிழ்நாட்டில் உள்ள தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகள் கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்தி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூல் விலை உயர்ந்து பஞ்சாலைத் தொழில் லாபம் தருவதாக மாறி இருக்கும் இச்சூழலில், உற்பத்தியில் ஈடுபடுவதற்கு தகுதியான எந்திரங்களை கொண்ட இந்த ஆலைகளை உடனடியாக இயக்க ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைகள் நிறுத்தப்பட்ட காலத்தில் 50 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்குப் பதிலாக முழு சம்பளம் வழங்க வேண்டும்.
  13. தொழிலாளர் சட்ட தொகுப்பை திரும்பப்பெறு !
    2019ல் ஊதிய சட்டத்தொகுப்பையும், 2020ல் மீதி மூன்று தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. சட்டத்துக்கான விதிகளையும் ஒன்றிய அரசு நிறைவேற்றி விட்டது. ஆனால் பல மாநில அரசுகள் நான்கு சட்ட தொகுப்புக்களுக்கும் மாநில விதிகளை இன்னும் இயற்றி முடிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு நேர் எதிராக இயங்க, அவை மிகவும் தயங்குகின்றன. கேரள அரசு “இந்தச் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் நலனுக்கு எதிரானவை. ஆனாலும் ஒன்றிய அரசு வலியுறுத்துவதால் மாநில விதிகளை முன் வைக்கிறோம்“ என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளது.
    முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும், தொழிலாளியின் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் விதத்திலும் இந்த சட்டங்கள் அமைந்துள்ளன. ஆர்எஸ்எஸ்ஸின் தொழிற்சங்க அமைப்பான பிஎம்எஸ் உள்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் இந்த சட்டத் தொகுப்புகளை எதிர்க்கின்றன.
    ஆகவே நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

VII – – தொழிலாளர் / பணியாளர்

  1. பணியாளர் / ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துக!
    வாழ்நாள் முழுக்க உழைத்தவர்கள், தமது முதுமைக் காலத்தில் கௌரவமாக வாழ்வதற்காகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசுப் பணியில் இருந்தால் ஓய்வூதியம் உண்டு என்பதனாலேயே அந்த பணிக்கு கூடுதல் மதிப்பு இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு 2004 ஆம் ஆண்டில் இருந்தும், மாநில அரசு ஓராண்டு முன்னதாக 2003 ஆம் ஆண்டிலிருந்தும் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அறிவித்து விட்டன.
    பணியாளர்கள் தாங்களாகவே பணத்தை சேமித்து வைத்து, அதன் மூலம் ஓய்வூதியம் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அது பணியாளர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை.
    ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியம் நடைமுறைப் படுத்தப்படும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்திருந்தது. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க தொடங்கி விட்டது. இந்த முன்னுதாரணத்தை கவனத்தில் கொண்டும், ஒன்றிய அரசும் தனது ஆசிரியர்களுக்கு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் தரும் வகையிலும், தமிழ்நாடு அரசு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது தமிழ்நாடு மாநில மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
  2. நிரந்தரத் தன்மையுள்ள பணியிடங்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்தாதே!
    இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் படிப்படியாக நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதிலாக நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளிலும் கூட காண்ட்ராக்ட், கேஷ§வல் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என சட்டம் இருந்தாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் வலியுறுத்தினாலும், இந்த நிரந்தரமற்ற தொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது. காண்ட்ராக்ட் தொழிலாளர் (ஒழுங்கு படுத்துதல் மற்றும் அகற்றுதல்) சட்டம் என ஒன்று இருந்தும் அதனை அமலாக்குவது பற்றி ஒன்றிய மாநில அரசுகள் கவலை கொள்வதில்லை.
    தமிழ்நாடு அரசு சட்டத்தின் படி 480 நாட்கள் தொடர்ந்து பணிபுரிந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுள்ள நிலையான சட்டத் திருத்தங்களை உடனடியாக அமலாக்க வேண்டும். அதன்படி ஒரு தொழிற்சாலையில் பத்து சதவீதத்திற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இருக்கக்கூடாது; ஆறு மாதத்துக்கு மேலும் ஒரு தொழிலாளியை பயிற்சியாளர் என்று கூறக்கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது.
    முதலாளிகளின் எல்லையற்ற சுரண்டலுக்கு தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஆட்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசுப் பணியில் உள்ள மதிப்பூதிய, தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் 21,000 ரூபாய்க்கு குறையாத சம்பளம் வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
  3. உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியங்கள்
    கட்டிடம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் நல வாரியங்களில் ஆன்லைன் மூலமாக உறுப்பினர் பதிவு நடத்த தொடங்கி இருப்பது காலத்துக்கேற்ற மாற்றமாகும். ஆனால் இதற்கென நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், ஆன்லைன் இணைப்புப் பணியை சரிவர செய்யவில்லை. தொழிலாளர்கள் கணினி மையங்களில் சென்று மணிக் கணக்கில் சில சமயம் நாள் கணக்கில் கூட காத்திருக்க வேண்டிய அவலம் நேர்கிறது.
    17 வகையான உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் இருந்தும், அந்தந்த தொழிலுக்கு ஏற்ற வகையில் வாரிய விதிகள் இல்லை. ஒரே மாதிரியான வாரிய விதிகளில் தலைப்பு மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது. இது அந்தந்தத் தொழில்களைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு போதிய பலன்களை வழங்கவில்லை.
    ஒன்றிய அரசு நான்கு சட்டத் தொகுப்புகளின் வழியாக, நலவாரியங்களில் தனது பிரதிநிதியை நுழைக்கவும், வசூலிக்கப்படும் நல வரியை தனது ஆளுகையில் கொண்டு வரவும், தனது அனுமதி இல்லாமல் புதிய நலத்திட்டங்களை மாநிலங்கள் உருவாக்கக்கூடாது என்றும் உறுதிப்படுத்துகிறது. இது போதாது என்று, மாநில நல வாரியங்களுக்கு போட்டியாக அமைப்பு சாரா தொழிலாளர்களை இ-ஷ்ரம் என்ற திட்டத்தில் பதிவு செய்து வருகிறது. மாநில அரசாங்கத்தை முற்றாகப் புறக்கணித்து விட்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை கொண்டு 77 லட்சம் பேரை தமிழ்நாட்டில் மட்டும் பதிவு செய்துள்ளார்கள். மத்திய தொழிற்சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்தும் மாநில அரசும் இதனை கண்டு கொள்ளவில்லை. இது ஒரு அரசியல் பிழையாகும்.
    எனவே மாநில நல வாரியங்கள், மாநிலச் சட்டப்படி தொடர்ந்து செயலாக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். ஆன்லைன் முறை சரியாக ஒழுங்குபடுத்தப்படாத வரையில், நேரடியாக தொழிலாளர்களிடம் மனு பெற்று, அவர்களை உறுப்பினர்களாக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு தகுந்தவாறு ஏற்கனவே வழங்கிவரும் நலத்திட்ட நிதி பலன்களை உயர்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.
  4. புலம் பெயர்ந்த தொழிலாளர்
    நாட்டின் சமச்சீர் அற்ற வளர்ச்சி காரணமாக, ஓரளவு வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட தென் மாநிலங்களை நோக்கி வட மாநில தொழிலாளர்கள் படையெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் வரையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இது குறித்த சரியான தரவுகளை இதுவரை திரட்டவில்லை.
    பொதுவாகவே சொந்த ஊரில் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தால் தங்களுடைய உரிமைகளை வலிமையாக வலியுறுத்துவார்கள் என்பதற்காகவே, வெளியூர் / வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் முறை அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அயல் மாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் போது, தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை தேட வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. பெருமுதலாளிகளின் வரையறையற்ற லாப வேட்டையும், கொடூர சுரண்டலும்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர் முறைமையை அதிகரிக்கின்றன.
    மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் ஒன்று இருக்கிறது. பற்றி ஆனால் அதைப் பற்றி அரசுகளோ, வேலையளிப்பவர்களோ கவலைப்படுவதில்லை. குறைந்த சம்பளம், மிகக் கூடுதலான வேலை நேரம் என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு கொடூரமாக சுரண்டப்பட்டு வருகிறது.
    புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை உயிரோட்டத்தோடு அமலாக்குவதற்கும், சம வேலைக்கு சம சம்பளம், குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை அமலாக்குவதற்கும் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, புலம்பெயர் தொழிலாளர் முறை மூலம் வேலை இழப்பு ஏற்படாதவாறு பொருத்தமான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  5. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கக் கோரி
    7515 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்திய கடற்கரையில் 1076 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் உள்ளடங்கியுள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த மீன்கள் இந்தியாவிற்கு பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகின்றன. மீனவர்களுக்கு எதிராக அரசு கொண்டு வரும் திட்டங்களாலும், கடல் மாசடைந்து வருவதாலும் , உரிய பாதுகாப்பு இன்மையாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளது .
    மீன்பிடித் தடைக்காலம், மழை, புயல், இயற்கை பேரிடர்கள், கடற் பஞ்சம், பண்டிகை, திருவிழாக்கள் போன்ற நாட்களை எல்லாம் கழித்துவிட்டால் மீனவர்கள் தொழில் செய்வது ஆண்டுக்கு 100 நாட்கள் தான். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. புயல், மழை, இயற்கை சீற்றம் நிகழும் பொழுது, தகவல் பரிமாற தகுந்த உபகரணங்கள் மீனவர்களுக்குக் கிடையாது. படகுகள் மோதுவது, கடற்கொள்ளையர்கள், கப்பல்கள் மோதுவது, ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்பு இன்மை போன்ற அவலங்களினால் ஆண்டுக்கு 50 மீனவர்கள் வரை உயிரிழப்புக்கு ஆளாகிறார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டும், நோய்வாய்ப்படுதலுக்கும் ஆளாகிறார்கள் . இலங்கை அரசிடம் இருந்தும், பன்னாட்டு நிறுவன கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்தும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை. இலங்கை கடலோர ராணுவத்தால் கைது செய்யப்படுவதும், சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப் படுவதும், சமயங்களில் கொல்லப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கல் கொள்கைகள் நமது கடற்பரப்பை பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டன. அரசால் அறிவிக்கப்படுகின்ற பல திட்டங்கள் அடித்தட்டு மீனவர்களுக்கு கிடைப்பதில்லை.
    எனவே ஒன்றிய, மாநில அரசுகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை தருகின்ற மீனவர்களின், வாழ்வுரிமை மற்றும் வேலை உரிமை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு கேட்டுக் கொள்கிறது.
    6.கிராம ஊராட்சி தொழிலாளர்களை முழுநோ தொழிலாளர்களாக அறிவித்திடுக!
    தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லை. 10 இயக்குநர், தூய்மை காவலர்கள் நேரம் காலம் இல்லாமல் வேலை வாங்கப்படுகின்றனர். கால் விடுமுறைகள் ஙிலி வார விடுமுறை. பண்டிகை வழங்கப்படுவது வேலை வாங்கப்படுகிறது. ஆனால் பகுதிநேர தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். மணி நேரம் வரை 20 ஆண்டுகளை கடந்து பணிபுரியும் கால நிர்ணய ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளிக்கு கூட அதிகபட்சமாக ரூபாய் 6000 தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிகாலை மணிக்கு வேளையை தொடங்கி. இரவு இருட்டும் நேரம் வரை இடுப்பொடிய பணி புரியும் இத்தொழிலாளர்களை பகுதி நேரத் தொழிலாளர்கள் என்று அரசு கூறுவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.
    70 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற ஊராட்சி தொழிலாளர்கள் தங்களை முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இது கோரிக்கையாகவே நீடிப்பது. சமூக நீதியின் முன்னத்தி ஏறாகத் நிகமும் தமிழ் நாட்டின் பெருமைக்கு உகந்தது அல்ல. மேலும், “ஒரு தொழிலாளி வாழ்நாள் முழுவதும். ஒவ்வொரு நாளும் பாதிநாள் வேலை பார்த்துவிட்டு மீதி நாள் வேலைக்கு எங்கே போக முடியும். அப்படியான பாதிநேரம் கூட வரையறுக் கப்படவில்லை. முழு நேரத்தை தாண்டி இத்தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதே பகுதி நேரப் பணியாளர்களாக வைக்கப்பட்டிருந்த ஊராட்சிகளின் எழுத்தர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முழு நேரப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
    அதன் விளைவாக அவர்களது ஊதியம் பட்சமாக அதிக உயர்த்தப்படுள்ளது. ஆனால் சமூகத்தின் கடைகோடியில் வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், 20 மடங்கு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களையும் வஞ் சிப்பது பொருத்தமானதன்று.
    ஒரு வேளை பகுதி நேரப்பணியாளர்கள் ஒப்புக்கொண்டாலும். உள்ளாட்சிகளில் மாற்றுப்பணி வழங்கும் நடைமுறை உள்ளது. அதன்படி கிராமப்புற ஊராட்சிகளில் பகுதிநேர தொழிலாளர்கள் தொழிலாளர்களுக்கு என வரையறுக்கப்பட்ட இத் வேலை நேரத்தை வரையறுத்து. எஞ்சிய நேரத்திற்கு மாற்றுப்பணி வழங்கலாம். எனவே. கிராமப்புற தொழிலாளர்கள் அனைவரையும் முழுநேர தொழிலாளிகளாக அறிவித்து பணி நிரந்தரம் செய்து, கால நிர்ணய ஊதியம் வழங்கி, அவர்களின் 75 ஆண்டு கோரிக்கைகளை தீர்க்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
    7.நகர்ப்புற உள்ளாட்சி தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து பதுகாக்க வேண்டும்
    தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில்தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையின் நிர்பந்தம் காரணமாக அற்ப ஊதியம் பெற்று பல ஆண்டுகளாக, ஒப்பந்தம், வெளிச்சந்தை தினக்கூலி, சுய உதவிக்குழு போன்ற பல பெயர்களில் பணிபுரிந்து அரசியல் அமைப்பு சட்டம் வருகின்றனர். அரசியல் வழங்கியுள்ள சுரண்டலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமையும் கூட மறுக்கப்படுகிறது.
    இந்தியாவில் எந்த மாநிலத்தினும் இல்லாத ஒரு வினோதமான சுரண்டல் முறை வேலைக்கு தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. ச சம ஊதியம் பெறும் சட்ட பூரவமான உரி மறுக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ரூ.2000/ சட்ட விரோதமானது என்று தெரிந்தே மாவட்ட ஆட்சியர்கள் ஊதியம் நிர்ணயிக்கிறார்கள். அதற்கும் குறைவாக ஒப்பந்தம் 3000/- வரை பறித்துக் கொள்கின்றனர். அது செய்யப்படுகிறது. முதல் ரூ மட்டுமல்ல இபிஎஃப். ஒப்பந்ததாரர்களோ அதிலும் இஎஸ்ஐ போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு தொழிலாளிகளிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகையும் உரிய நிறுவனத்தில் அதனால் தொழிலாளிகள் செலுத்தப்படுவதில்லை. சமூக பாதுகாப்புக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தியும் அதன் பலனைப் பெற முடியவில்லை.
    இதன் விளைவாக தொழிலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பகிரங்கமாக உரிய அவர்களிடமிருந்து பறிக்கப்படிகிறது. தீர்வு செய்யும் பொறுப்புள்ள அதிகாரிகள் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர். அல்லது தலையிட மறுக்கின்றனர். தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து, தாண்டவமாடும் கொடூரமான சுரண்டலும் முறைகேடுகளும், தடுக்கப்பட வேண்டும். பணிப்பாதுகாப்பு, பணியிடபாதுகாப்பு, பணிநிரந்தரம், சட்டப்படியான ஊதியம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட சட்டப்படி கிடைக்க வேண்டிய தொழிலாளர்களின் நீண்ட நாளைய நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
  6. கையால் துப்புரவு செய்யும் தடைச் சட்டத்தை முழுமையாக அமலாக்க வேண்டும்
    உலகில் எந்த நாட்டிலும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றீ கையால் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள் இல்லை.
    இந்த நிலையில் 1993 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கையால் துப்புரவு செய்வதற்கு தடை மற்றும் மறுவாழ்வு கையால் துப்புரவு செய்தல் அளிப்பதற்கான இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1993 பற்றிய வரையறை கையால் மலம் அள்ளுதல் என்ற அளவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. இரண்டாவது சட்டத்தில் இது விரிவுபடுத்தப்பட்டன.
    2013 சட்டத்தின்படி எந்த ஓர் அசூயையான கழிவையும் கையால் எடுக்க சொல்லக்கூடாது. அப்படி அவசியம் நேர்ந்தால் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் முதல் உதவி பெட்டி வழங்க வேண்டும். வைக்க வேண்டும். 44 விதமான பாதுகாப்பு உபகரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஆனால் இந்தச் சட்டத்தை அமலாக்குவதில் மிகுந்த அலட்சியம் காட்டப்படுகிறது.
    தொழிலாளிகளை அடையாளம் காண்பதினும் இத்தகைய அலட்சியமே நீடிக்கிறது. சட்டத்தை அமலாக்க கூட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தாங்கள் சரியாகத்தான் செய்கிறோம் என்று கருதிக்கொண்டு. பாதுகாப்பு உபகரணங்கள் தந்தால் தொழிலாளிகள் பயன்படுத்துவதில்லை என்று தொழிலாளிகள் மீது பலியை போட்டு பொறுப்பை தட்டிக் கழிப்பவர்களாக உள்ளனர். அதற்கு உடைந்தையாக மக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
    இந்திய குடிமகனின் சராசரி வயது 60 ஆக உள்ள நிலையில், துப்புரவுப்பணி செய்யும் தொழிலாளர்களின் சராசரி வயது 40 எத்தனை முக்கியமான என்பதை கவனிக்கும் போது இது கடமை என்பதை அறியலாம். ஆனால் தமிழ்நாடு கையால் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளிகள் விசவாயு தாக்கி மரணமடைவதில் கூட மற்ற பல மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதும், இறந்த பிறகும் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதல் மிகவும் பின்தங்கி இருப்பதும் தமிழ்நாடு காலம் காலமாக கடைபிடிக்கும் கொள்கைக்கு பொருத்தமானதல்ல.

எனவே, கையால் துப்புரவு செய்வதற்கு தடை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டம் 2013 முழுமையாக தமிழ்நாட்டில் அமுல்படுத்தவும். நமது நிலைமைகளுக்கு ஏற்ற சிறந்த மறுவாழ்வுப் பணி மற்றும் பாதுகாப்பான துப்புரவுத் தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடுகள் செய்வதற்கும் தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும்.
9.ஒப்பந்த முறையில் சீரழிக்கப்படும் தொழிலாளர்கள் வாழ்க்கை.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கு பார்த்தானும் நிரந்தரமற்ற ஒப்பந்த வெளிச்சந்தை தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆண்டுகளில் உலகமயமாக்கல் கொள்கையின் பின்னணியில் தொழிலாளர்களுடைய ஊதியம் செலவை ஏற்படுத்துவதாக அந்தச் செலவினங்களை குறைக்க பரவலாக பெயர்களில் தொழிலாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். தனியார் மட்டுமல்ல, தமிழ்நாடு பல்வேறு துறைகளில் இந்த தொழிலாளர்களுடைய எண்ணிக்கை பலுகிப் பெருகி உள்ளது.
நிறைவேற்றுகிற மருத்துவத் துறையிலும். உள்ளாட்சித் துறையிலும் இதுதான் நிலமை. நீதிமன்றம் சம வேலைக்கு சம வழங்க வேண்டும் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச குறைந்தபட்ச அரசு வேலை ஊதிய சட்டப்படி பல்வேறு தொழில்களுக்கும் ஊதியம் நிர்ணயம் செய்து அறிவுக்கிறது அளிப்போர். தொழிலாளிகள் அடங்கிய முத்தரப்பு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு முழுமையாக ஆய்வு செய்து விவாதித்து வழங்குகிற பரிந்துரை அடிப்படையில் இந்த குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் இருக்கிற எந்த ஒரு மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்படுகிற குறைந்தபட்ச ஊதியம் குறைவு என்றாலும் இந்த குறைந்தபட்ச ஊதியந்தை கூட பெரும்பாலும் வழங்குவதில்லை என்ற நிலை நீடிக்கிறது
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமை ஒரு தொழிலாளி குறைந்தபட்ச ஊதியம் பெறுவது. ஆனால் ஒப்பந்த, வெளிச்சந்தை முறையில் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துகிற போது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக அரசின் அமைப்புகளே ஒப்பந்தம் போடுகின்றன. ஒப்பந்ததாரர்கள் அதற்கும் குறைவாக ஊதியம் தருகிறார்கள். தொழிலாளர் சட்டப்படி ஒப்பந்ததாரர் உரிய ஊதியத்தை ஒப்பந்தத் தரவில்லை என்றால் அதை தருகிற பொறுப்பு முதன்மை வேலை அளிப்பவரை சார்ந்தது. ஆனால் அது தங்களுடைய பொறுப்பு என்று உணர்ந்த கடினமாக உள்ளது. அதிகாரிகளை கண்டறிவது
இபிஎப். இஎஸ்ஐ தொகை உரிய நிறுவனத்தில் செலுத்தி தொழிலாளிகளுக்கு அதனுடைய பலன் கிடைக்கச் செய்வது இல்லை. குறிப்பாக இத்தகைய கொடூரமான சுரண்டலுக்கு ஆட்படுகிற தொழிலாளிகள் பெரும்பாலும் கடைநிலைப் பணியாளர்களாகத் தூய்மை பணியாளர்களாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஒப்பந்த முறை செலவை குறைக்கும் என்ற வாதமும் உண்மை அல்ல என்பதை கடந்த 20 ஆண்டுகால அனுபவம் நிரூபித்திருக்கிறது.
மாறாக கடைநிலை தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்களாக சட்டங்கள் உள்ளூர் ஆறிக்க சக்திகளும், மாநில, மாவட்ட, தேசிய, உலக அளவிலான நிறுவனங்களும் உள்ளன. இவை அனைத்தையும் மீறும் வாய்ப்பும் செல்வாக்கும் பெற்று இன்று இருக்கின்றன. கூடிய கடை நிலையிலும் கடை நிலையில் இருக்க தொழிலாளர்களை கொடூரத்தின் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயங்காத ஆதிக்க சக்திகளின் கரங்களில் ஒப்படைப்பது எந்தவகையில் சரியானது. மாநிலத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிற மனித வளத்தை சீரழித்து விட்டு எப்படி நாம் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று பெருமை அடைய முடியும். எனவே. தமிழ்நாடு அரசு ஊழலுக்கும். முறைகேடுகளுக்கும். கொடூரமான சுரண்டனுக்கும் வழிவகைக்கிற ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
10.ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க
தமிழகத்தின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2700 ஆஷா பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் தமிழகத்தின் மலைப்பிரதேச கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தும் வேலையைச் செய்து வருகிறார்கள். இந்தியாவில் தாய் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் குறைந்ததற்கு ஆஷா பணியாளர்களின் பெரும் பங்களிப்பே காரணம் என்று பிரதமர் உட்பட அமைச்சர்களும் பல்வேறு கட்டங்களில் கூறியுள்ளார்கள். கொரனா பெருந்தொற்று காலத்தில் ஆஷா பணியாளர்களின் பெரும் பங்களிப்பைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு அவர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான உலக சுகாதாரத் தலைவர்கள் என்ற பெருமையை வழங்கி கௌரவித்தது.
ஆஷா பணியாளர்களுக்கு “ தொழிலாளி “ என்ற அங்கீகாரம் இல்லை. இவர்களை “ சுகாதார ஆர்வலர்கள் “ என்று கூறி மாதம் ரூ.2000/-க்கும் கீழ் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் தேசிய சுகாதார திட்டம் வழங்கும் தொகையோடு மாநில அரசின் பங்களிப்பை கூட்டி தொகுப்பூதியம் வழங்குகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் மாநில அரசு ஆஷா பணியாளர்களுக்கென்று எந்த ஒரு தொகையையும் வழங்குவதில்லை.
மாநில அரசின் சுகாதார நலத் திட்டங்களை கிராமங்களின் செயல்படுத்தி வரும் ஆஷா பணியாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ.21000/- தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11.ஆசிரியர் காலியிடங்களை நிரப்புக !
தமிழ்நாட்டின் பண்பாடு, அறிவு மேன்மை, பாரம்பரியத்தை உயத்திப்பிடிக்கும் வகையில் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:20 என்கிற அடிப்படையில் அமைய வேண்டும். அதற்கேற்ப ஆசிரியர் நியமனங்கள் செய்திடவும், பள்ளிகளில் காலியாக உள்ள 50,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதற்கட்டமாக 2012ல் தேர்வாகி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், தமிழ்நாட்டுக்கு ஏற்ற சிறந்த கல்விக் கொள்கையை உருவாக்கி அமுல்படுத்திட வேண்டுமெனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

  1. மாநில அரசு காலி பணியிடங்களை நிரப்புக,!
    படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். என தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    13.அங்கன்வாடி பணியாளர்களை முழு நேரப் பணியாளர்களாக்குக !
    அங்கன்வாடி பணியாளர்களின் பணிநேரத்தையும் பணி அளவையும் கருத்தில்கொண்டு அவர்களை முழுநேரப் பணியாளர்களாக மாற்றி அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்கப்பட வேண்டும். அதேபோல் சத்துணவு பணியாளர் களுக்கும் முறையான காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் என தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  2. அரசு மருத்துவப் பணியில் உள்ள ஊழியர்களை நிரந்தரப்படுத்துக !
    அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நிரந்தர காலிப் பணியிடங்களில் அரசு பணி நியமன விதிகளின் படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை பணி வரன்முறை செய்யும் அரசின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி சுமார் 3000 அடிப்படை பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும் என தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது
  3. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துக !
    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பணி நிரவல் திட்டத்தால் வெளியேற்றப் பட்ட பணியாளர்களை மீண்டும் பல்கலைக்கழகப் பணிக்கே எடுத்துக்கொள்ள உரிய உத்தரவுகள் அளிக்கப்படவேண்டும் என தமிழ்நாடு அரசை மாநாடு. கேட்டுக்கொள்கிறது
  4. இந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கு
    திருவள்ளூரில், மேல நல்லாத்தூர் கிராமத்தில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் துவங்கப்பட்டு இயங்கி வந்தது. இதற்கு நிலம் வழங்கிய குடும்பங்களின் வாரிசுகளுக்கு பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வேலை தரப்பட்டது. அண்மையில் அந்த நிலத்தோடு தொழிற்சாலையை பிசிஏ என்ற பிரான்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பங்கள் தனது நிலத்தையும், வாரிசுகளின் வேலையையும் ஒரு சேர இழ்ந்துள்ளன. மாண்புமிகு முதல்வர் வரையில் இப்பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வழியாகத் தலையிட்டு தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலையும், வேலை தராத நாடகளுக்கு சம்பளமும் வழங்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    VIII – மொழி / கல்வி
  5. தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக நிராகரித்திடுக!
    ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020 பொதுக்கல்வி கட்டமைப்பை முழுமையாக சிதைக்கிறது. பாடத்திட்டம் உருவாக்குவது, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொள்கிறது. மும்மொழி கொள்கையின் மூலம் இந்தி திணிப்பு, திறன் மேம்பாடு என்கிற பெயரில் குலக் கல்வியை திணிக்கிறது.
    கல்வியை வணிகமாக பாவித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய கல்வி சந்தையை திறந்து விடுகிறது. சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைக்கும் பொருட்டு பரவலாக்கலுக்கு பதிலாக மூடு திரையிடுகிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதியை புறந்தள்ளுகிறது. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துக்களையும், பன்மை நிறைந்த இந்திய பண்பாட்டையும், உண்மை வரலாற்றையும் பாடத்திட்டங்களில் மாற்றி வருகிறது.
    மேடு பள்ளமாக, ஏற்றத் தாழ்வுகள் நிரம்பி வழியும் சமூகத்தில் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, மனித மாண்புகளை வளர்த்தெடுக்கும் பண்பாட்டு கூறான கல்வியை தனது சனாதன கொள்கையை நிறுவுவதற்கான கருவியாக பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது.
    காவிமயம், வணிகமயம், ஒற்றை மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு முழுமையாக நிராகரிக்கிறது.
    தேசியக் கல்வி கொள்கையை நாடு முழுவதும் வேகமாக நடைமுறைப்படுத்தி வரும் வேளையில் தமிழ்நாட்டில் அமுல்படுத்த விடமாட்டோம் என்று தமிழக அரசு உறுதியாக இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிகிறது.
    ஒன்றிய அரசு ஆளுநரின் மூலமாக கல்விக் கொள்கையை நேரடியாக தமிழ்நாட்டில் அமுல்படுத்துவதற்கு தொடர்ந்து முயன்று வருவதை கண்டித்தும், எதிர்த்தும் வருகிற தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் மக்களாட்சி மாண்புக்கு எதிராக செயல்படும் ஆளுநரை எதிர்த்து போராடும் தமிழக அரசோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நிற்கும்.
    தமிழ்நாட்டிற்கென்று மாநில கல்விக் கொள்கை உருவாக்க உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
    மாநிலக் கல்விக் கொள்கையை அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து வேகமாக உருவாக்க வேண்டும். மாநில கல்வி கொள்கையில் பொதுப்பள்ளி, அருகாமைப்பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி கொள்கைகள் மையமாக வைத்து உருவாக்க வேண்டும். கல்வி வழங்கும் முழு பொறுப்பை அரசே ஏற்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
    2.அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளாக மாற்றப்படுவதைத் தடுத்திடுக!
    அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமீப காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் சுயநிதி கல்லூரிகளாக மாற்றப்படுவதற்கான முயற்சிகள் அதிகரித்து வருகிறது.
    தமிழ்நாட்டில் சுமார் 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகள் மற்றும் தனியார் சுயநிதி பாடப் பிரிவுகள் ஆகிய இரண்டு வகையான பாடப் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் ஆண்டுக்கு சுமார் ரூ.2000 கட்டணத்தில் கல்வி பயில முடியும். அதே கல்லூரிகளில் உள்ள தனியார் சுயநிதி பாடப் பிரிவுகளில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு சுமார் ரூ.40,000 கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், பணி நிரந்தரமும், பணிப் பாதுகாப்பும் உள்ளன.
    அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளுக்காக இக்கல்லூரிகள் அரசிடம் நிதி, இடம், பல்வேறு சலுகைகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு கல்லூரியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்கின்றன. ஆண்டுதோறும் பல்கலைக்கழக மானிய குழுவிடம் நிதியுதவியும் பெற்றுக் கொள்கின்றன.
    தனியார் சுயநிதி கல்லூரியாக செயல்பட்டால் இன்னும் கூடுதல் லாபம் ஈட்டவும், யாரும் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு கல்லூரியை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சுயநிதி கல்லூரியாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
    அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் ஆசிரியர் ஓய்வு பெறுகிற பொழுது உருவாகும் காலிப் பணியிடங்களில் பணி நியமனம் செய்யாமல் சொற்ப ஊதியத்தில் தற்காலிக பேராசிரியர்களை நியமித்து வருகின்றனர். அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
    சென்னை டி.பி.ஜெயின் கல்லூரி தனியார் சுயநிதி கல்லூரியாக மாற்றப்படுவதற்கு எதிராக கல்வியாளர்கள் பேராசிரியர்கள் மாணவர் அமைப்புகளோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போராடி வருகிறது. இக்கல்லூரி தனியார் கல்லூரியாக மாற்றப்பட்டால் பல அரசு உதவிபெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளாக மாறுவதற்கு தயாராக உள்ளன.
    எனவே, ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வழங்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் சுயநிதி கல்லூரிகளாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    3.தாய்மொழி வழிக் கல்வி.
    மொழி வழி தான் ஒரு சமூகம் உருவாகிறது. தாய்மொழி வழியில்தான் சிந்தனை எழும் என்பது அறிவியல். ஒரு எமூகம் வாழ் வளர. உயர தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. தமிழ்நாட்டில் தாய் மொழியான தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை. தமிழ் படிக்காமலேயே பட்டம் பெற்றுக் கொள்ளும் அவலம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பல்கலைக் கழகங்களில் கல்லூரிகளில் தமிழுக்கு இடமில்லை
    பள்ளிகளில் சிலவற்றில் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் இருக்கவில்லை. பயிற்று மொழி தமிழ் என்ற கட்டாயம் இல்லை. பாட மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருப்பதற்கான பேராற்றல் தமிழுக்கு இருக்கிறது அந்த ஆற்றலைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு உரிய அக்கறை காட்டவில்லை. தமிழ்ப் பயிற்று மொழியாக இருந்தால் தான் மக்களுக்கு தமிழின் மீது நம்பிக்கை ஏற்படும்.
    தமிழ்நாட்டு அரசு. தாய்மொழி அல்லது தமிழ் மொழி என்ற அரசாணை போட்டதால் எந்த மொழி பயிற்று மொழி என்று வினா எழுப்பி தமிழ்நாடு பயிற்று மொழி ஆணையை செல்லாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
    கர்நாடகத்தில் கன்னடம் பயிற்று மொழி என ஒரு மொழியை திட்டவட்டமாக குறிப்பிட்டு சட்டம் இயற்றியதால் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. பயன்பாட்டு மொழி என்பது பயிற்று மொழியின் வழி தான் அறியப்படும் உலகில் ஒரு அறிவியல் பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
    அதனை எதிர்கொள்ளும் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் தமிழுக்குஇருக்கிறது. அச்சு ஊடகங்கள் கணினி முதலான மின்னியல் ஊடகங்களில் தமிழ் மொழி எளிதாகவும் அழகாகவும் கையாளப்படுவது நம் மொழியின் ஆற்றலையும் திறனையும் புலப்படுத்துகிறது.
    எத்தனையோ படையெடுப்புகள் இடையூறுகள் இவற்றிற்கு இடையே தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியை அழிந்துவிடாமல் காத்து நமக்கு கையளித்துச் சென்றிருக்கிறார்கள். நம் முன்னோர்கள் அந்த தமிழை மேலும் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமை .
    எனவே தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து நிலைமொழியாக தமிழைக் கொண்டுவர விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  6. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்,
    தமிழ் ஆட்சி மொழி சட்டம் 1956-இல் அமலுக்கு வந்தது. ஆனால் நடைமுறையில் ஆங்கிலத்தின் ஆட்சி அதிகாரத்தை அகற்ற இயல வில்லை. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளிவரும் ஆணைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன மாவட்ட அளவிலும் ஆங்கிலம் இருப்பது கவலை அளிக்கிறது. மக்கள் தங்கள் தாய் மொழியில் அரசு இயங்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் என் ஜனநாயகம்.
    தமிழ்நாட்டு அரசு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை வலிமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அரசுப் பணியாளர்கள் மக்கள் மொழிகளில் எழுதுவதை தங்கள் கடமையாக உணர் வேண்டும்.
    ‘’தமிழால் முடியும்“ என்ற நம்பிக்கை தமிழர்களிடம்இருக்கிறது ஆனால் நடைமுறைப்படுத்துவதில் தயக்கமும்சுணக்கமும் காணப்படுகிறது. எனவே அரசின் அனைத்துநடவடிக்கைகளும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை உறுதியாக பின்பற்றுமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
    5.நீதிமன்றங்களில் தமிழ்
    ஒரு மாநில அரசு தன் மாநில ஆட்சி மொழியை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்குமாறு செய்ய மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றால் அம்மொழியை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்தலாம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 348(2) இல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதன் அடிப்படையில் தமிழ் மொழியை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி சட்டம் இயற்றி ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.
    அரசியல் சட்டப்படி செயல்பட வேண்டிய ஒன்றிய அரசு அச்சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்ற பார்வைக்கு அனுப்பி வைத்து விட்டது. அச்சட்டம் பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையாக இருக்கிறது. தங்கள் தொடர்புடைய வழக்குகள் தங்கள் அறிந்த மொழியில் நடைபெற வேண்டும் என்பது மொழிச் சனநாயகம்.
    எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகி தமிழ்நாட்டு அரசின் நீதிமன்ற அலுவல் மொழிச் சட்டத்தை அமுல்படுத்த உரிய ஆணை பெற தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.,
  7. தனியார் / அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை தமிழக அரசே நியமிக்கக்கோரி
    சமீப காலமாக மதிப்பெண் குறைபாடு. சாதி ரீதியான ஒதுக்கல்.பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மேலும் அரசு பள்ளி, கல்லூரிகளில் போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லாத பட்சத்தில் கழிவறைகளை மாணவ. மாணவியர்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்கள் சுகாதாரமற்ற முறையில் மாணவிகள் அங்கங்கே வீசப்படும் அவலமும் உள்ளது. சுகாதாரமான கழிவறைகள் பராமரிப்பிற்கு போதுமான தொழிலாளர்களை பணிக்கமர்த்த வேண்டும். பெண் குழந்தைகளின் கழிவறைகளில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தவும். அகற்றவும் தக்க
    வசதிகளை செய்ய வேண்டும்.சானிட்டரி நாப்கின்கள் எரியூட்டும் எந்திரங்களை நிறுவ வேண்டும். மேலும் மாணவிகளின் மன உளைச்சலை குறைத்து,படிப்பில் கவனம் செலுத்துவதற்கு உதவியாக அனைத்து தனியார் / அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உளவியல் ஆலோசர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்வதோடு,தன்னம்பிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது..
  8. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிடு!
    அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் கல்வி எந்த பட்டியலில் சேர்ப்பது என்ற விவாதம் வந்த போது மொழி வழி மாநிலங்கள், கலாச்சாரம், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பல அம்சங்களையும் விரிவாக விவாதித்து மாநில பட்டியலில் சேர்த்தனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1976ஆம் ஆண்டில் அவசரநிலையை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டம் 42 வது சட்ட திருத்தம் மூலமாக கல்வி பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது.
    தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி வழங்குகிற பெரும் பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது. மாநில அரசே அதிக நிதியையும் ஒதுக்குகிறது. கல்வி பண்பாட்டு கூறுகளில் ஒன்றாகும். பன்மை நிறைந்த நாட்டில் மாநிலத்திற்கு மாநிலம் வரலாறுகள், பண்பாடுகள் வேறுபடுகின்றன. மாநிலங்களுக்கான தேவைகளும், அதற்கான திட்டமிடல்களும் வேறாகும்.
    பொதுப் பட்டியல் என்றால் மாநில அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் சமபங்கு அதிகாரம் உண்டென்றாலும், முரண்பாடுகள் எழும்போது இறுதியாக ஒன்றிய அரசின் முடிவே இறுதி முடிவாகும். ஒன்றிய அரசின் விருப்பமும், நோக்கமுமே நிறைவேறும்.
    நீட், தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கொள்கைகள் பொதுப் பட்டியல் மூலமாகவே மாநிலங்கள் மீது திணிக்கப்படுகிறது.
    கல்வி மாநில அரசு அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் தேவைக்கான திட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்கிக் கொள்ளும் அதிகாரம் இருந்தால் தான் மாநிலம் முழுக்க சீரான, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி பரவலாக்கலை உருவாக்க முடியும்.
    கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
    8.மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் யர்கல்வியில் தமிழ் வழி மாணாக்கர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குகஞ்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புலிலும் பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லூரியிலும் 7 புள்ளி 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதும் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரியில் பயின்றால் அவர்களுக்கான கல்வி கட்டணம் விடுதி கட்டணம் கவுன்சிலிங் கட்டணம் போன்றவற்றை தமிழக அரசு ஏற்று இருப்பது வரவேற்கத்தக்கது இந்த நாள் இதனால் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த 2022-23 கல்வி ஆண்டில் 445 அரசுப்பள்ளி மாணாக்கர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பிலும், 110 பேர் பல்மருத்துவப் படிப்பிலும் சேர்த்துள்ளனர். இது மிகப்பெரும் சாதனையாகும். கடந்த 30 ஆண்டுகளில் இந்த அளவிற்கு அரசுப் பள்ளி மாணாக்கர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்ததே இல்லை . நீட்டுக்கு முன்பாக 1% மருத்துவ இடங்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது. நீட் வந்த பிறகு அது 0.1% ஆக வீழ்ச்சி அடைந்தது என்பது அதிர்ச்சியான விசயமாகும்.
    பொறியியல் படிப்புகளிலும் இந்த 7.5 % இட ஒதுக்கீட்டின் மூலம் 7800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டில் பயன் பெற்றுள்ளனர்.
    அரசுப்பள்ளிகளில் 85 விழுக்காடு கிராமப் பகுதிகளில் உள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 73% அரசுப் பள்ளிகளே.70% க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயில்கின்றனர்.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களில் 83 விழுக்காட்டினரின் தந்தைகள் தினக் கூலித் தொழிலாளர்கள்.அரசுப் பள்ளி மாணாக்கர்களில் 1 விழுக்காட்டினர் மட்டுமே முன்னேறிய வகுப்பினர். பெரும்பாலோர் ஷிசி/ ஷிஜி/ விஙிசி மாணவர்களே. அரசுப் பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி பெறாதவர்கள் ஆவர்.
    எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது கிராம்ப்புறங்களைச் சேர்ந்த பொருளாதார ரீதியிலும்,சமூக ரீதியிலும்,கல்வி ரீதியிலும் மிக மிக பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடாக அமைந்துள்ளது.
    எனவே,தற்பொழுது வழங்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடை 10 விழுக்காடாக நீதியரசர் கலையரசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் உயர்த்திட வேண்டும்.
    கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு ,தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
    9.அனைத்து தரப்பினரும் கல்வி பெறும் வகையில் உயர் கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
    ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்களுக்கான தன்னாட்சிக் கொள்கை, உயர்கல்வியை ஏழை, எளிய,நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாக்கி வருகிறது.
    ‘தன்னாட்சி’ வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள், ‘சுயநிதி’க் கல்வி நிலையங்களாக மாறி வருகின்றன. எனவே, ‘சுயாட்சி’ என்பது ‘சுயநிதி உதவி’ என்கிற வகையில் நடைமுறைப் படுத்தப் படுகிறது. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. உயர்கல்வி நம் நாட்டில் வணிகமயமாகி விட்டது என்று உச்ச நீதி மன்றமே கருத்து தெரிவித்து உள்ளது. ஒன்றிய அமைச்சர் உயர்கல்வி தாராளமயமாக்கப் படும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது உயர்கல்வி வழங்கும் உன்னதமான பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு விலகி வருவதையே சுட்டிக்காட்டுகிறது. IIT எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட, ஒன்றிய கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது. மிமிவி எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்களில், அதிக பட்சமாக 36% வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது, 20 லட்சத்திற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப் படுகின்றது. கல்விக்கட்டண உயர்வு, மாணவர்களை பெரும் கடன் சுமைக்கு ஆளாக்குகிறது.
    இந்தியாவிலேயே, அதிகமாக உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களை அதிகமாகக் கொண்ட மாநிலங்களில் நம் தமிழகமும் அடங்கும். உயர் கல்வியை விரிவாக்கும் பொருட்டு தமிழகத்தில் இயங்கும் 28 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிலையே உள்ளது. உயர் கல்வியில், Gross Enrolment Ratio எனப்படும், மொத்த பதிவு விகிதம், தமிழகத்தில் சுமார் 50% ஆக உள்ளது. இந்தியாவிலேயேமொத்த பதிவு விகிதம், அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் அடங்கும்.
    எனவே, தமிழக அரசு உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வி வழங்கக் கூடிய, IISc, IIT, IIM போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களை, நிறுவி அனைத்து தரப்பினரும் கல்வி பெறும் வகையில் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது..
    10. SC/ST மாணவர்களுக்கானPost matric scholarship முறையாக வழங்கப் படவேண்டும்
    பட்டியல் சாதிகள் / பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (Post matric scholarship) முறையாக வழங்கப்படவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் அஇஅதிமுக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தவில்லை.
    இந்த உதவித் தொகை முறையாக கிடைக்காததால் ஏராளமான மாணாக்கர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மாணாக்கர்கள் கல்லூரிகளில் சேரவும் தயங்கினர். பொறியியல் படிப்புகளில் எஸ்.சி,எஸ்.டி மாணாக்கர்களின் சேர்க்கை 50 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துது.
    இப்பிரச்சனை தற்பொழுதும் தொடர்கிறது. இந்த உதவித் தொகையை முறையாக வழங்கிட வேண்டும். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். இந்த உதவித் தொகையை அதிகரிப்பதோடு, இதைப் பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சபட்ச வரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
    11.தமிழக கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்திடக் கோரி..
    புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. லாப நோக்கத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கி வணிக நிறுவனங்களாக மாறி விட்டன. மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்முறை கல்வி பயில பயிற்சியளிக்கும் இடமாக மாணவர்களை மாற்றி, தங்கிப் பயிலும் கல்விக் கூடங்கள் பல மாற்றப்பட்டுவிட்டன. குறைந்த சம்பளத்துடன், வேலைப்பாதுகாப்பற்ற ஆசிரியர்களும் உருவாக்கப்பட்டுவிட்டனர். தேவையான உள் கட்டுமான வசதிகள் இன்றி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத கல்விக்கூடங்கள் பணம் சுரண்டும் கூடாரமாக மாறி உள்ளன. தங்கிப் பயிலும் மாணவர்களை துன்புறுத்துவதுடன் தங்கள் பாலியல் வக்கிரங்களுக்குக் கூட சில நிர்வாகங்கள் பயன்படுத்தும் அவலம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
    சமீபத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணமும் அதைத் தொடர்ந்து வேறு கல்வி நிலையங்களில் நிகழும் அவலங்கள் கல்வி முறையின் தரமற்ற தன்மைகளை வெளிப்படுத்தி வருகின்றன.
    எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும், மாணவர்களின் கல்வி, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்திடத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    13.அரசு கலை அறிவியல் கல்லூரிகளை புதிதாக உருவாக்குக !
    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.50 லட்சம் இருக்கைகளே உள்ள போது, 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போதுமான எண்ணிக்கையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை உருவாக்கி விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் கல்வி பெற வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 4,700 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    14.கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சியை தடுத்து நிறுத்துக !
    தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளில் தற்காப்பு கலை யோகா என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இயக்கம் வகுப்புக்களை நடத்தி வருகிறது. மாணவர்களின் இளம் நெஞ்சங்களில் மதவெறி விஷத்தை விதைக்கும் இந்த நடவடிக்கைகளை முற்றாக தடுக்க நிறுத்த தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  9. அறிவியலற்ற போதனைகளைத் தரும் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக !
    தமிழகத்தில் இயங்கி வரும் சில தனியார் பள்ளி நிறுவனங்கள் அறிவியலுக்குப் பொருந்தாத பல விஷயங்களை பாரம்பரியம், பண்பு என்ற பெயரில் திணித்து வருகிறார்கள். காயத்ரி மந்திரம், பிரார்த்தனை என்ற பெயரில் சொல்லித் தரப்படுகிறது. வணக்கம் சொல்லக்கூடாது நமஸ்தே என்று தான் சொல்ல வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். தமிழ் மொழி, பண்பாட்டை தகர்க்கும் எண்ணத்தோடு செயல்படும் இத்தகைய தனியார் பள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது
    மிஙீ – இளைஞர்
  10. வேலையின்மைக்கு தீர்வு காண…
    இந்தியா முழுவதும் வேலையின்மை நெருக்கடி அதிகரித்து வருகிறது. 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த மோடி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. தற்சமயம் இருக்கிற வேலை வாய்ப்புகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. “எங்கே எனது வேலை” என கேட்கும் இளைஞர்களிடம் பக்கோடா விற்கச் சொல்கிறது.
    பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பேரிடர் காரணமாகவும் ஒரு கோடிக்கும் அதிகமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர். எல்ஐசி உள்ளிட்ட லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளை மேலும் செல்வந்தர்களாக்கி வருகிறது. “சப்கா சாத் சப்கா விகாஸ்” எனும் மோடியின் அனைவருக்குமான வளர்ச்சி என்பது ஏமாற்று வித்தையாக மாறியுள்ளது.
    இந்தியாவில் நகர்ப்புறங்களில் உள்ள 23 சதவிகிதம் இளைஞர்கள் வேலையற்றவர்களாக உள்ளனர். 2021 நவம்பர் மாதம் மட்டும் மாதச் சம்பளம் பெற்றுவந்த 68 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கொரோனா காலத்தில் மட்டும் 20 கோடி பேர் வரை வறுமையில் வீழ்ந்திருக்கின்றனர்.
    வேலையின்மையால் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் 9140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வேலையின்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத ஆளும் அரசாங்கத்தின் திறமையின்மையையே இது காட்டுகிறது.
    தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 75 லட்சத்திற்கும் மேலாகும். டிசம்பர் 2021 இன் படி தமிழகத்தின் வேலையின்மை விகிதம் 6.8 சதவிகிதமாகும். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    தமிழகத்தின் நிதி அமைச்சர் கணக்குப்படி 6 லட்சத்திற்கும் மேல் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி மூலம் 2022 ஆம் ஆண்டு 11 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.
    பாசிச சிந்தனை கொண்ட ஆர்எஸ்எஸ்சினால் வழி நடத்தக்கூடிய ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகள் வேலை வாய்ப்பை மேலும் மேலும் அழித்து வருகின்றன.
    இளைஞர்களின் பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில் ஒன்றிய பாஜக அரசு, குடியுரிமை திருத்த சட்டம், மாட்டுக்கறி, ஹிஜாப், தலித் மக்கள் மீதான தாக்குதல் என வெறுப்பை விதைக்கும் பிரிவினை அரசியலை மேற்கொள்கின்றது. சாதிய, மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றது.
    வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வுகாண, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
    தமிழகத்தில் திமுக அரசாங்கம் வேலை வாய்ப்பில் சில புதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகம், முதல் தலைமுறை பட்ட தாரிகளுக்கும், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு, அரசுப் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கியது ஆகியவை வரவேற்கத்தக்கவை. இதில் முக்கியமாக தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகார அமைப்புக்களுக்கான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக அமர்த்துவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலமாக நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறும் என்பது வரவேற்கத்தக்கது.
    2.எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களின் ( ஙிஷிதி ) வாரிசுகளுக்கு அரசுப்பணி வழங்கிடு..
    இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்க இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி மற்றும் உயர்கல்வி பயில தனியாக இட ஒதுக்கீடு செய்து அரசு ஆணையை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
    3.வேலையின்மை நிவாரணத்தை உயர்த்தி வழங்குக
    தமிழ்நாட்டில் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு, பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் ரூ 300, மேல்நிலைப்பள்ளி முடித்தவர்களுக்கு ரூ 150, பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ 100 எனும் விகிதத்தில் வேலையின்மை நிவாரணம் வழங்கப்படுகிறது. நீண்ட காலமாக இது உயர்த்தப்படவில்லை. எனவே இத்தொகையை இரு மடங்காக உயர்த்தித் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    ஙீ- தொழில்
    1.நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கூடாது.
    நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வதற்காக தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்கான ஆய்வுக்கூடம் அமைக்க மலையைக் குடைவது, பாறைகளை வெடிவைத்து தகர்ப்பது போன்ற காரணங்களால் சுற்றப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். நிலநடுக்கம் ஏற்படும் பேராபத்துள்ளது. ஐ.நா. யுனெஸ் கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையைக் சுற்றிலும் 12 அணைகள் உள்ளன. மேலும் இயற்கை வளங்களும் முற்றிலுமாக அழிந்துவிடும். 5 மாவட்ட மக்களின் ஆதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தினசரி 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் தண்ணீர் பற்றாக் குறை மேலும் அதிரிக்கும். வன வளமும் அழிந்துவிடும் நிலையை கருத்தில் கொண்டு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை மறுபரிசீலலை செய்ய வேண்டும் என்றும் தேவை எளில் மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும் ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  11. குறுந்தொழில்களை பாதுகாத்திட
    தமிழ்நாடு தொழில்துறையில் குறிப்பாக குறு சிறு தொழில்களில் சிறந்து வளர்ச்சி கண்ட மாநிலமாக இருந்து வருகிறது. பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கி வருகின்றது. நமது மாநிலத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்தும் பதிவு இல்லாமலும் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஒரு கோடிக்கு மேல் தொழிலாளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழில் குறிப்பாக குறு சிறு தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக, பணம் மதிப்பிழக்க செய்தது, நிஷிஜி அமுலாக்கம், கொரோனா தொற்றால் பாதிப்புகள், மூலப்பொருள்கள் விலை ஏற்றம் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்கள் நசிவு அடைந்துள்ளன. கொரோனா பாதித்த காலத்தில் மத்திய அரசு பெரும் மற்றும் நடுத்தர தொழில் முனைவேர்களுக்கான கடன் திட்டம் அறிவிப்பு செய்து வழங்கிய போதும் நெருக்கடிகளுக்கு உள்ளான குறுந்தொழில்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. கடுமையான நெருக்கடியில் உள்ள குறு சிறு தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு குறு சிறு தொழில்களுக்கு என தனி கடன் திட்டத்தை அறிவித்து எவ்விதமான நிபந்தனைகளும் இல்லாமல் நீண்ட நாள் கடனாக தொழில் துறையின் உற்பத்திக்கு தக்கவாறு 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை நடப்பு மூலதன கடனாக 5% வட்டியில் வழங்கிட வேண்டும்.
    குறு சிறு தொழில்கள் நிஷிஜி அமுலாகத்திற்கு பின்பு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். நிஷிஜி -யில் குறு சிறு தொழில்களில் உள்ள பிரச்சனைகளை தீரக்க சம்மந்தப்பட்ட தொழில் அமைப்புகளுடன் கலந்து பேச கமிட்டி அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
    தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் தனி தொழில் தன்மையுடன் வளர்ச்சி கண்டுள்ளன. தொழில்களை பாதுகாக்கவும், விரிவாக்கம் செய்வதற்கும் தமிழக அரசு குறுந்தொழில்களுக்கென தொழில் பேட்டைகளை மாவட்டந்தோறும் உறுவாக்கிட தனி கவனம் செலுத்திட வேண்டும். தனி நிதி ஆதாரத்தை ஒதுக்கிட வேண்டும்.
    குறு சிறு தொழில்களால் வளர்ச்சி கண்ட கோவை மாவட்டம் நகரத்திலும் புற நகரிலும் லட்சக்கணக்கில் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி குறு சிறு தொழில்கள் இயங்கி வருகின்றன. நகர வளர்சி புற நகர வளர்சிக்கும் காரணமாக இருந்து வந்த குறு சிறு தொழில்களுக்கு தனி நபர்களால் கொடுக்கப்படும் புகார்கள் மூலம் குறுந்தொழில்களை முடக்கின்ற விதத்தில் கோவை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மாசுகட்டுபாடு வாரியத்தால் (நிக்ஷீமீமீஸீ நீணீtமீரீஷீக்ஷீஹ்) மாசு இல்லாத தொழில்கள் என அங்கிகரித்த இந்த நிலையிலும் மாநகராட்சி நிர்வாகம் குறுந்தொழில்களை முடக்கின்றன. தமிழக அரசு தலையிட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் தொழிற்சாலைகளின் மேல் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தனிசட்டத்தை இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்பாலும் மூலப்பொருள்களின் விலையேற்றத்தாலும் 2/3 தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன, இன்று வரை மீண்டுவர முடியாமல் தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. மத்திய அரசு 2020 முதல் 2023 வரை வங்கியில் வாங்கி உள்ள தொழில் கடன்களுக்கான வட்டிகள் அபராத வட்டிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் கடன் திருப்பி செலுத்த முடியாமல் நெருக்கடியில் உள்ள தொழில் முனைவோர்களை பாதுகாக்க வங்கிகள் 2024-ம் ஆண்டு வரை எவ்விதமான ஜப்தி நடவடிக்ககை எடுக்காமல் இருக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.
    தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்த அறிவிப்பு செய்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உள்ள கடுமையான தொழில் நெருக்கடியில் மின்கட்டணம் உயர்த்தப்படுமானால் அனைத்து தொழில்களும் நெருக்கடிக்கு உள்ளாகும், தமிழக அரசு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
  12. பேண்டேஜ் துணி உற்பத்தியை பாதுகாக்க..
    விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி வட்டாரத்தில் தயாரிக்கப்படும் நூலின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல போராட்டங்களை அங்குள்ள விசைத்தறியாளர்கள் நடத்தி வருகிறார்கள். மருத்துவத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பேண்டேஜ் துணி தூய பஞ்சினால் மெல்லிய வலை போல உருவாகும் இந்த துணிகள் காயங்களுக்கு கட்டுப்போட பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தேவைகளில் 80 சதவிகிதம் இங்கிருந்து செல்லும் பேண்டேஜ் துணிகளே பூர்த்தி செய்கின்றன. அந்நியச் செலவாணியை ஈட்டித்தருகின்றன. ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட மானியத்தை தொடர்ந்து வழங்கவும், பேண்டேஜ் துணிகளுக்கான ஜி.எஸ்.டியை ரத்து செய்யவும் ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    4.தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தை பாதுகாத்து தொழிலாளர்களை பாதுகாக்க கோரி…
    1968ம் ஆண்டு தமிழக அரசு நீலகிரியில் இலங்கையிலிருந்து மீள் குடியேறுபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாக 1975ம் ஆண்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகம் ஏற்படுத்தப்பட்டது. குளோனஸ் தேயிலைச் செடிகளின் மூலம் விரிவான பகுதியில் சாகுபடி செய்யப்பட்டது. தேயிலைத் தொழில் துறையில் தனித்துவமான சாதனை படைத்துள்ளது. டான் டீ ( ஜிகிழிஜிணிகி ) என்ற பெயரில் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. தற்போது 4,431.92 ஹெக்டேரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது. சுமார் 11000 தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இத்தொழில் சீரழிக்கப்படுகிறது. தொழிலாளர் குடியிருப்புகள் பழுதடைந்து விட்டன. ஊதியம் உட்பட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனமான டான்டீ நிறுவனத்தைப் பாதுக்காகவும், புணரமைக்கவும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    5.கடல்வள பாதுகாப்பும், மீனவர்கள் உரிமை பாதுகாப்பும்
    தமிழகம் நீண்ட கடல் வளம் கொண்ட மாநிலம். இந்த கடலை நம்பி மீனவர்கள் வாழ்க்கை அமைந்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்களால் உயிர், உடைமை, வாழ்க்கை பறிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது,
    வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 64 வகையான கடல் வாழ் உயிரினங்கள் அபூர்வமானவை என்று அறிவிக்கப்பட்டு, அவைகளை மீனவர்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதில் கடல் அட்டையும் ஒன்று. கடல் அட்டையின் ஆயுள் காலம் ஆறு வாரமே. இது பல்லாயிரக்கணக்கான கடல் அட்டைகளை இனப்பெருக்கம் செய்யும் உயிரினமாகும். மேலும் மீனவர்கள் இயல்பாக பயன்படுத்தும் வலைகளில் வந்து விடும் தன்மை கொண்டது. இந்த நிலையில் வனத்துறையினரும், கடலோர காவல்படையும் கடல் அட்டை பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து வரும் நிலை நீடிக்கிறது. இவ்வழக்குகளையும் உரிய காலத்தில் விசாரித்து முடிக்காமல் நீண்ட காலம் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிய வேண்டிய கட்டாயத்திற்கு மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆட்படுகின்றனர்.
    மற்றொருபுறம் ஒன்றிய அரசு பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் கடல் வளத்தை கொள்ளையிட்டு கொண்டு போக வழி ஏற்படுத்தும் சட்டங்களை நிறைவேற்றி சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும் இறால் பண்ணைகள், சாகர் மாலா திட்டம் போன்ற சூழலையும், மீனவர் வாழ்வையும் சீரழிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
    எனவே, ஒன்றிய அரசு இயற்கை கொடையாக வழங்கிய கடல் வளத்தை நம்பி வாழும் மீனவர்கள் வாழ்வைப் பறிக்கிற நடவடிக்கைகளை கைவிடுவதோடு, பாதுகாக்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    6.பட்டாசுத் தொழிலை பாதுகாத்திட
    விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழில் பட்டாசு தொழிலாகும். இந்த பட்டாசு தொழில் நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே 1938ம் ஆண்டுகளில் சிவகாசியைச் சேர்ந்த சண்முக நாடார், அய்யநாடார் ஆகியோர் கல்கத்தா சென்று பட்டாசு தொழிலை கற்று வந்து சிவகாசியில் பட்டாசு தொழிலை துவக்கினர். ஒற்றை அறை கொண்ட சீனி வெடி மட்டும் தயாரிக்கும் சிறிய தொழிலாக துவக்கப்பட்டது.
    தற்போது இந்த பட்டாசு தொழில் நாக்பூர் உரிமம் பெற்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலைகள். சென்னை உரிமம் பெற்ற நடுத்தர பட்டாசு தொழிற்சாலைகள், கலெக்டர் உரிமம் பெற்ற சிறிய பட்டாச்ய் தொழிற்சாலைகள் என மூன்று வகைப்பட்ட சுமார் 1070 பட்டாசு தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான நெல்லை,தூத்துக்குடி,தென்காசி,மதுரை என இந்த தொழில் வியாபித்து வளர்ந்து நிற்கின்றது. பட்டாசு தொழில் நேரிடையாக சுமார் நான்கு லட்சம் தொழிலாளர்களும், இதன் சார்பு தொழிலாக குழாய் கம்பெனிகள், அட்டைப்பெட்டி தயாரித்தல், லேபில் தயாரித்தல், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பதற்கான கடைகள் பல ஆயிரம், இந்த பட்டாசுக் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், விற்பனை ஏஜென்டுகள் என சுமார் நான்கு லட்சம் பேர் என இந்த தொழில் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இதே போன்று நாடு முழுவதும் பட்டாசு விற்பனை கடைகள். சென்னை போன்ற பெரு நகரங்களில் தீபாவளி பட்டாசு பண்டு என்ற பெயரில் பல ஆயிரம் பெண்கள் இந்த பட்டாசு விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் பட்டாசு தொழில் ஒன்றிய மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014 முதல் எட்டு ஆண்டுகளாக பட்டாசு தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணமதிப்பிழப்பு, நிஷிஜி வரிவிதிப்பு என தொடரும் நெருக்கடி. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்புலத்தில் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என தவறான கருத்தை சிலர் பரப்பி பட்டாசு உற்பத்திக்கு தடை கோரி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்த்துள்ளனர்.
    உலகின் எந்த நாட்டிலும் பட்டாசு உற்பத்திக்கு, வெடிப்பதற்கு தடையில்லை. உலக சுகாதார நிறுவனம் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் உச்சநீதி மன்றம் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும், சரவெடி உற்பத்தி செய்யக்கூடாது என கூறியுள்ளது.
    இதன் காரணமாக பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு என்ற பெயரில் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு கொடுக்கும் நெருக்கடிகளால் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பல லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே ஒன்றிய மோடி அரசு பட்டாசு தொழிலை பாதுகாக்க, மாசு பட்டியலில் இருந்து பட்டாசுக்கு விலக்களித்து, பட்டாசு உற்பத்திக்கு, விற்பனைக்கு, வெடிப்பதற்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, உரிய சட்டத் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    உலகத் தரம் வாய்ந்த நூற்றுக்கணக்கான பட்டாசு ரகங்கள், வாண வேடிக்கை காட்டும் பேன்சி ரக பட்டாசுகள் என நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், வெளிநாட்டு ஏற்றுமதியில் அரை சதம் மட்டுமே உள்ளது. ஏற்றுமதியில் 5 சதம் உயர்த்தினால் இன்னும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். ஏற்றுமதியை அதிகரிக்க, உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலைகளை மேம்படுத்தி, பட்டாசுத் ஏற்றுமதிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் தனிப்பிரிவு, பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தனியான சரக்கு கப்பல்கள் உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்க மோடி அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
    7.கல் குவாரிகள் அனுமதிக்கக் கோரி…
    தமிழ்நாட்டில் குத்தகை ஏலம் மூலமும், மகளிர் குழுக்களுக்கும் கல்குவாரி அனுமதியளிக்கப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. மலைக் குன்றுகளில் தான் கற்களை தூள் செய்து மணலுக்கு மாற்றான எம்.சாண்ட் உற்பத்தி நடைபெறுகிறது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஆதாரமான பொருளுமாகும்.
    எனவே, கல்குவாரி அமைக்க தடை செய்யப்பட்டதால் வேலையிழந்த கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வாழ்வைப் பாதுகாக்க பொருத்தமான வழிகளில் கல் குவாரிகள் அமைக்க அனுமதியளிக்க வேண்டும். கொள்ளை லாபமீட்டும் கனிம வள மாபியாக்களின் சட்ட விரோத கல் குவாரிகளை, எம்.சாண்ட் உற்பத்தியை தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    8.அரசு சிமெண்ட் ஆலைகளை நவினப்படுத்து
    சிமெண்ட் தயாரிப்புக்கான சுண்ணாம்புக்கல் எனும் கனிம வளம் தமிழகத்தில் ஏராளமாகக் கிடைக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும் சொந்தமாக அரியலூரிலும், விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திலும் சிமெண்ட் தொழிற்ச்சலைகள் 1978ல் துவக்கப்பட்டு, இயங்குகின்றன, ஆனால் நமது கனிம வளத்தைச் சுரண்ட கழுகுகள் போல பெரும் கார்ப்பரேட் சிமெண்ட் நிறுவனங்கள் வந்து சூழ்ந்துள்ளன. தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் தமக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, சிமெண்ட் விலையை உயர்த்துகின்றன. முன்பு தமிழ்நாடு அரசு தனது தயாரிப்பான “ அரசு சிமெண்டை “ சாமானியர்கள் தேவைகளுக்கு குடும்ப அட்டை மூலம் விநியோகித்தது.
    ஆனால், ஆலங்குளத்தில் “ வெட் பிராசஸ் “ என தண்ணீரில் கரைத்து சிமெண்ட் செய்யும் உற்பத்தி முறை காலம் கடந்த முறையாகும். இப்போது உலர் முறை எந்திரங்களே எங்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆலையை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு தவறுகிறது. மேலும் அரியலூரிலும் சிமெண்ட் எந்திரங்கள் பழைய காலத்தைச் சேர்ந்தவை. எனவே உற்பத்தி குறைகிறது. 2000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    சந்தையில் அரசு சிமெண்டை கொண்டு வருவதன் மூலம் விலையைக் குறைத்து தனியார் கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுக்க முன்னர் முடிந்தது. இப்போது அரசுத் தேவைக்கே தனியாரிடம் சிமெண்ட் வாங்கிக் கொண்டுள்ளனர்.
    எனவே தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான “ டான்செம் “ நிறுவனம் தாமதப்படுத்தாமல் ஆலங்குளம், அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைகளை உடனடியாக நவீனப்படுத்தி உற்பத்தியை அதிகரித்து, பொதுமக்களின் கட்டுமானத் தேவைக்கு அடிப்படையான சிமெண்டை அதிக லாபமின்றி விற்கவும், தொழிலாளர்களின் வாழ்வைப் பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
    9.வேலூரில் தொழில் நுட்ப பூங்கா அமைத்திடுக !
    சென்னை பெங்களுர் இடையில் வேலூர் மாநகரில் தொழில் நுட்ப பூங்கா (மிஜி றிணீக்ஷீளீ) அமைத்திட இந்திய சீன தொழில் நுட்பத் துறை ஆய்வுசெய்து அறிவிப்பு செய்தது. அதன் பரிந்துரைகளை ஏற்று வேலூர் மாநகரின் அருகில் அமைந்துள்ள 95 ஏக்கர் முந்திரித் தோப்பு பகுதியில் தொழில் நுட்ப பூங்கா அமைத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அதன் அடிப்படையில் தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை வேலூர் மாவட்டங்களின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில் தொழில்நுட்ப பூங்காவை அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    10.கே.வி.குப்பத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்குக
    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு கே.வி.குப்பம் பகுதியில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள 80 ஏக்கர் நிலப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொள்கிறது.
    ஙீமி – மாநிலம்
  13. கோவையில் – விடுதலைப் போராட்ட நினைவு சின்னம் அமைத்திடுக
    நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் 1800 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி கோவையில் கோட்டை அமைத்து முகாமிட்டிருந்த ஆங்கிலேயர்களின் கோவை கோட்டை தகர்த்து, ஆங்கிலேயர் படையை பலவீனப்படுத்தும் போராட்டத்தை நாடடின் முதல் விடுதலைப் போராட்டம் என வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வட பகுதியில் 1857ஆம் ஆண்டு நடந்த முதல் விடுதலைப் போராட்டத்திற்கும் முந்தைய போராட்டமான கோவை கோட்டை தகர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற புரட்சியாளர்கள் மத எல்லைகளையும், சாதி வேறுபாடுகளையும் கடந்து ஒன்றுபட்டு போராடியுள்ளனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் தாக்குதல் திட்டத்தை அறிந்த ஆங்கிலேயர்கள் புரட்சியாளர்களை கைது செய்து, கற்பனைக்கும் எட்டாத சித்திரவதை செய்து தாராபுரத்தில் எட்டு பேரும். சத்தியமங்கலத்தில் ஏழு பேரும். கோவையில் ஆறு பேரும் மற்றும் 21 புரட்சியாளர்கள் புரட்சியில் ஈடுபட்ட அந்தந்த இடங்களில் கொடூரமாக பொது மக்கள் மத்தியில் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த கோவை புரட்சியில் உயிர் ஈகை செய்தவர்களில் 32 பேர் இஸ்லாமிய சகோதரர்கள் என்பது நினைவு கூறத்தக்கது. நாட்டின் மதச்சார்பின்மையின் விதையாக, ஒற்றுமையின் உயிருள்ள அடையாளமாக, அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய தேசபக்தர்களாக விளங்கிய 42 புரட்சியாளர்கள் நினைவாக கோவையில் “முதல் விடுதலைப் போராட்ட நினைவு சின்னம்“ அமைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
  14. பட்டா வழங்க வேண்டி
    ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலையில் புலிகள் சரணாலம் உருவாக்கப் பட்டுள்ளது. இதனைக் காரணமாகக் கொண்டு மூன்று தலைமுறைக்கு மேலாக விவசாயம் செய்தும் குடியிருந்தும் வருகின்ற வனம் சார்ந்து வாழ்கின்ற மக்களை வன உரிமை சட்டம் 2006 வழங்கியுள்ள உரிமைகளுக்கு முரணாக சட்டத்திற்கு புறம்பாக வெளியேற்ற முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவர்களின் நிலங்களுக்கும் வீடுகளுக்கும் தமிழ்நாடு அரசு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
  15. மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி வேண்டும்.
    கால்நடை வளர்ப்பை ஆதாரமாகக்கொண்டுள்ள ஏழை எளிய விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் வகையில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    4.வீட்டுவரி உயர்வைத் திரும்பப் பெறுக..
    தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகளும், 142நகராட்சிகளும். 487பேரூராட்சிகளும்கொண்ட பெரும் நிர்வாக அமைப்பை கொண்டுள்ளது. இதில் குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி பகுதிகளில் 80சதவீதம் மக்கள் அடித்தட்டு. பின்தங்கிய, மத்தியதர மக்களே வசிக்கின்றனர்.இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கான வீட்டுவரியின் மூலமே மேற்கண்ட அமைப்புகளுக்கு பெருமளவு நிதி பெறப்படுகின்றது. இந்நிலையில் உயர்ந்துள்ள விலைவாசி.மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கபட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் தற்சமயம் தமிழக அரசு வீட்டுவரியை மேலும் 50சதவீதம் முதல் 150சதவீதம் வரை உயர்த்தியுள்ளதால் வேலையின்றியும்.விலைவாசி உயர்வினால் வாழ்வாதாரம் இழந்தும் வாழ வழியின்றி தவிக்கும் மக்களை மேலும் விரக்தியடையச் செய்துள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டுவரி உயர்வை திரும்ப பெற்றிடவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    5.பஞ்சமி நிலங்கள்
    இந்தியாவில் பஞ்சமிகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும் எனக் கருதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1892 செப்டம்பர் 30ல் பஞ்சமி நிலச்சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதில் அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர்களும் வழங்கப்பட்டது. இந்த நிலங்களை அதே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் விற்கவோ, குத்தகைக்கு தரவோ முடியும். ஆனால் இன்று 1,26,013 ஏக்கர் நிலம் மட்டுமே பட்டியலினத்தவரிடம் உள்ளது. 10 லட்சம் ஏக்கர் நிலம் ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களில் மிகச் சில மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    6.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை, தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுக… மக்கள் சேவையை மேம்படுத்துக..
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக நெல் கொள்முதல் மற்றும் பொதுவிநியோகம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பணிகளை திறம்பட செயல்படுத்தி வருகிறது. மக்கள் சேவை படிப்படியாக மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலேயே முன்னுதாரணமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் புதிதாக 10 அரைவை ஆலைகள் கட்டப்படு தனியார் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அரைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி சேமிப்பு நிலையங்கள் மற்றும் கூடாரங்களில் பல ஆண்டுகள் நேரடி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் பணி பறிக்கப்படும் விதமாக சுமைதூக்கும் பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. திறந்த வெளி சேமிப்பு நிலையங்கள் தனியார் பராமரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
    எனவே தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஏற்கனவே சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த படி 50 பெட்ரோல் பங்குகள், 50 மண்ணெண்ணெய் பங்குகள், சமையல் எரிவாயு மையம் திறக்க வேண்டுவதுடன், மக்கள் பயன்பாட்டிற்காக குறைந்தபட்சம் தாலுகாவிற்கு இரு அமுதம் பல்பொருள் அங்காடி திறக்கவும், பொது விநியோக முறையை சிறப்பாக செயல்படுத்தும் விதத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளையும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் கொண்டு வந்து செயல்படுத்தி மக்கள் சேவையை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    7.வாழ்விட உரிமை வழங்கப்பட வேண்டும்
    கோவில்‌ மனைகளில்‌ வசித்து வர ஒப்பந்தம்‌ பெற்றவர்கள்‌ தங்களது அயராத உழைப்பாலும் சொந்தமாக செலவழித்தும் வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர்‌. அடிமனைக்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திற்கு முறையாக செலுத்தி வந்ததுடன்‌, வீடுகள்‌ உட்பட அனைத்துக்‌ கட்டுமானங்களையும் தங்கள் வாரிசு தாரர்களுக்கு மாற்றித்‌ தாவும்‌, மூன்றாவது நபருக்கு உரிமை மாற்றம்‌ செய்யவும் உரிமை பெற்றிருந்தனர்‌. இந்த வசிப்பிட உரிமையை பறித்துக்‌ கொண்ட இந்துசமய அறநிலையத்துறை குடியிருந்து வருவோரின்‌ நில மேம்பாடு, கட்டுமானச்‌ செலவுகளை கருத்தில்‌ கொள்ளாமல் தற்போதுள்ள வசிப்பிடங்களை கோயிலுக்கு ‘’தானமாக’’ எழுதித்‌ தருமாறு நிர்பந்தித்து வருவதை கைவிட்டு, பழையபடி கோவில்‌ மனைகளில்‌ குடியிருந்து வருவோர்‌ வீடுகளையும்‌, கட்டுமானங்களையும்‌ எவ்வித அச்சுறுத்தலும்‌ இல்லாமல்‌ அனுபவித்து வருவதற்கான முறையில்‌ ‘“உரிமை’’யை உறுதி செய்யவும்‌, குடிநீர்‌ இணைப்பு, கழிவுநீர்‌ இணைப்பு, மின்‌ இணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையிடம்‌ தடையின்மை சான்று பெற வேண்டும்‌ என்ற நிபந்தனையை நீக்கி, அத்தியாவசிய சேவைகள்‌ பெற வழிவகை செய்யும்‌ முறையில்‌ அனுபவ “உரிமைப்‌ பட்டா’’ வழங்க வேண்டும்‌ என தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு ‌ கேட்டுக்‌ கொள்கிறது.
    8.ஆக்கிரமிப்பு நிலங்களை விடுவித்து பட்டா வழங்குக…
    சுயமரியாதை, சமதர்ம இயக்கங்களின்‌ தொடர்‌ போராட்டங்களால்‌ இனாம்‌ ஒழிப்பு, நில உச்சவரம்பு சட்டங்கள்‌ நிறைவேற்றப்பட்டன. இந்தச்‌ சட்டங்கள்‌ நடைமுறைக்கு வந்த காலங்களில்‌ கிராமநத்தம்‌,பட்டினநத்தம்‌, குடிக்காணி, சர்க்கார்‌ புறம்போக்கு போன்ற இனங்களில்‌ உள்ள நிலங்களில்‌ வாழ்ந்துவருவோர்‌ “அறியாமை’’யினால்‌ அரசிடம்‌ முறையிட்டு நிலப்பட்டா பெறவில்லை. இந்த வகையில்‌ உள்ள நிலங்களை எந்தவித ஆவணங்களும்‌ இல்லாமல்‌ இந்துசமய அறநிலையத்துறை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.
    அறநிலையத்துறையால்‌ ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில்‌ வசித்து வருவோர்களிடம்‌ கட்டணமும்‌ வசூலித்து வருகிறது. இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக கைவிட்டு, கோவில்களுக்கு முறையாக வழங்கப்படாத, நடைமுறையில்‌ ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து, அவைகளில்‌ வாழ்ந்து வருவோருக்கு மனை நிலத்தை சொந்தமாக்கும்‌ வகையில்‌ மனைப்பட்டா வழங்க வேண்டும்‌ மேலும்‌ 1971ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்‌ட இணைப்‌ பட்டாக்களை அங்கீகரிக்க வேண்டும்‌ என தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு ‌ கேட்டுக்‌ கொள்கிறது.
    9.நீதி பெறும்‌ உரிமை வழங்க வேண்டும்‌
    கோவில்‌ மனைகளில்‌ குடியிருப்போர்களுக்கும்‌, கோவில்‌ நிர்வாகம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறைக்கும்‌ இடையில்‌ முரண்பாடுகள்‌, தாவாக்கள்‌ எழும்போது, அது தொடர்பாக உரிமையியல்‌ நீதிமன்றங்களுக்கு செல்லும்‌ உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்களிடமே நீதி வழங்கும்‌ பொறுப்பை ஒப்படைத்திருப்பது இயற்கை நியதிக்கு மாறானது என்பதால்‌ இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கைகள்‌ தொடர்பாக உரிமையியல்‌ நீதிமன்றங்களில்‌ முறையிட்டு, நியாயம்‌ பெறும்‌ உரிமை வழங்க வேண்டும்‌ என என தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு ‌ கேட்டுக்‌ கொள்கிறது.
  16. “மலை மகளிர்க்கு மலைப்பகுதிப் பேருந்துகளில்,மலைப்பகுதிக்குள்
    இலவச பயணம் வழங்க வேண்டும்!”
    தமிழகத்தின் மலைப்பகுதிகளில் சுகாதார நிலையங்களுக்கு வரும் பெண்கள், பக்கத்து கிராமங்களுக்கு கூலிவேலைகளுக்கு செல்லும் பெண்கள்,முதியோர் உதவித்தொகை, நூறுநாள் வேலைத்திட்ட கூலி போன்ற அனைத்து வகையான பணப்பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகளுக்கு வரும் பெண்கள் ஆகியோருக்கு பேருந்து கட்டணம் ஒரு சுமையாக உள்ளது.
    சமவெளிப்பகுதியில் இயக்கப்படும் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கும் போது, மலைப்பகுதி பெண்கள் மட்டும் நகரப்பேருந்துகள் இயக்கப்படாததால், அந்த வாய்ப்பை பெற இயலாமல் இருப்பதற்கு அவர்கள் காரணமாக இருக்க முடியாது.
    மலைப்பகுதியில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகளில், மலைப்பகுதிக்குள் மட்டும் கட்டணமில்லாமல் பயணம் செய்ய பெண்களுக்கு வசதி ஏற்படுத்தித்தர மாண்புமிகு.முதல்வர் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
  17. ஊபா சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
    ஒன்றிய அரசானது, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை (ஹிகிறிகி) கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிற்சங்கவாதிகள் போன்றோரைக் கைது செய்துள்ளது. கிட்டத்தட்ட, இரண்டு ஆண்டுகளாக, இந்த சட்டத்தின் கீழ் பிணையின்றி, விசாரணை இன்றி இன்னமும் சிறையில் இருப்போர் உண்டு. 180 நாட்கள் வரையில் விசாரணை இன்றி ஒருவரை இந்த சட்டத்தின் கீழ் சிறையில் வைத்திருக்க முடியும். காவல் அதிகாரியிடம் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒருவரைத் தண்டிக்க முடியும். பொடா, தடா போன்ற சட்டங்கள் மக்கள் எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்டன. அதற்கு மாற்றாக இப்போது ஊபா சட்டம் உள்ளது. இதனை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது. ஜனநாயக விரோத, ஊபா சட்டத்தை அதுவரை, அமலாக்க மாட்டோம் என்ற நிலையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.
    12.நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் “நீட் மசோதாவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசு உடனடியாக பெற்றிட வேண்டும்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான,நீட் நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கிறது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது.
கிராமப்புற மாணாக்கர்களுக்கும், தமிழ் வழியில் படிக்கும் மாணாக்கர்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும்,முதல்தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கும் எதிராக உள்ளது.
சிறந்த தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற வசதி, வாய்ப்புகள் இல்லாத மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது.
எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டிற்குரிய மருத்துவ இடங்களுக்கு விலக்கு வேண்டும் எனக் கோரி தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற உறுதியான நடவடிக்கைகளை கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சி மேற்கொள்ளவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டிற்குரிய இளநிலை மருத்துவ இடங்களுக்கு , நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெற சட்ட முன்வரைவு , நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. மேல் நடவடிக்கைகளுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி, அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பாமல் கிடப்பில் போட்ட நடவடிக்கையை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.அதன் காரணமாக ,அம்மசோதாவை ஆளுநர் சட்டமன்றத் தலைவருக்கே சில காரணங்களைக் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் ,சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் மூலம் அந்த மசோதா மீண்டும் 2022 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு ,ஆளுநர் ஆர்.என்.ரவி ,அந்த மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பினார்.
தற்பொழுது ஒன்றிய அரசு சில விளக்கங்களை மாநில அரசிடம் கேட்டுள்ளது. மசோதாவை கிடப்பில் போட முயல்கிறது.
இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறக்கூடாது என்ற நோக்கத்துடன் ஒன்றிய அரசும், அதன் முகவர் போல் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரும் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான போக்காகும். தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.அதன் அதிகாரத்தை கேள்விக்குரியதாக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, “நீட் சட்ட முன்வரைவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும் என ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

  1. சர்ஆர்தர் காட்டன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
    இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் கடந்த 15.05.1803 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். இந்தியாவில் நீர்ப் பாசன வசதிகளை செய்து தரவும், கால்வாய்கள் அமைக்கவும், அணை கட்டுவதற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதிக்கு 1829- ஆண்டில் பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடு களால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார்.
    கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, “ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை பண்டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்” என்றார். கல்லணைக்கு ‘கிராண்ட் அணை கட்’ என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே.
    காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாக பாய்ந்து காவிரியில் உரிய நீர் வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு.கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த 1835-36 ஆண்டுகளில் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார்.
    இதனால் கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் பயனின்றி செல்வது தடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அணைக்கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட நீர்ப் பாசனங்களையும் கட்டியேழுப்பி பாசன நீரை முறைப்படுத்தினார்.ஆந்திராவில் கோதாவரி நதியின் தவ்லேஸ்வரத்தில் ஆர்தர் காட்டன் கட்டிய அணையால் தரிசாகக் கிடந்த 10 லட்சம் ஏக்கர் நிலப் பகுதியில் இன்று முப்போகம் விளைகிறது. அதற்கு நன்றிக் கடனாக அங்கு கிராமந்தோறும் ஆர்தர் காட்டன் சிலையை நிறுவியுள்ளனர். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ராஜமுந்திரியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர்.
    தஞ்சை மாவட்ட வேளாண்மை பணிகளுக்கு பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் ஆற்றியுள்ள பணிகளை போற்றும் வகையில் இவரின் பிறந்த தினத்தை (மே மாதம் 15-ஆம் நாள்) அரசு விழாவாக கொண்டாடிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம், கல்லனையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
    பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் பெரும்பணிகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்லனையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும், அணைக்கரை கீழணையில் சர்.ஆர்தர் காட்டன் அவர்களுக்கு சிலையும் அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
    14.அறவழிப்பட்ட போராட்டங்களை அடக்க முயலாதீர்..
    பொதுமக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துவதும், அறவழியில் போராடுவதும் அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளாகும். இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தராமலேயே விட்டுவிடுகிறது. இவர்கள் ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ) போன்றவற்றைக் கோரி விண்ணப்பிக்கும் போதுதான் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிகிறது. இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. காலனியாதிக்க காலத்தின் தொடர்ச்சியாக காவல்துறை இன்றும் இயங்கி வருகிறது. மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயகம் சார்ந்த சமூக நீதியை வழிகாட்டு நெறியாகக் கொண்ட தற்போதைய தமிழக அரசு, சாதரண அறவழிப்பட்ட போராட்டங்களுக்கு அனுமதி தராமல் அலைக்கழிப்பதை கைவிடவும், ஒழுங்குபடுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தவும், தேவையற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை தவிர்க்கவும் காவல்துறைக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும், இதுபோன்ற நிலுவையிலுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    15.அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு
    அரசு நிலத்தில் அல்லது புறம்போக்கில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி அரசு வெளியேற்றி வருகிறது. ஆனால் பெருமுதலாளிகளின் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ள அரசு நிலங்களை ( உதாரணத்திற்கு ஈஷா, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காருண்யா, சாஸ்த்ரா நிறுவனங்கள்) மீட்கத் தவறுவதுடன் பாராமுகமாய் இருந்து வருவது ஊக்கப்படுத்துவது போல இருக்கிறது. மேலும் அதற்கு ஆதரவாக தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலங்களுக்கு ஈடாக மாற்று இடம் கொடுத்து ஆக்கிரமிப்புகளை சொந்தமாக்கிக் கொள்ள வருவாய்த்துறை நிலையாணைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, ஏழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்று இரண்டு அணுகுமுறைகளைக் கொண்டிராமல் தனியார் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பை மீட்டு எடுப்பதுடன் மேலும் நடபெறாமல் தடுத்திட வேண்டும். அவர்களிடமிருந்து மாற்று நிலம் பெற்றுக் கொண்டு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் தொடர அனுமதிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    16.கடினமான மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வியில் தனி ஒதுக்கீடை உள்ஒதுக்கீடாக வழங்கிடுக.
    இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கு , சமச்சீரற்ற வளர்ச்சியை உருவாக்கிவருகிறது.
    நகர்புறங்களைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கடினமான மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் மாணாக்கர்களுக்கு கிடைப்பதில்லை. இப்பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தனியார் பள்ளிகளும் இதுபோன்ற பகுதிகளில் தொடங்கப்படுவதில்லை.இதனால் கடினமான மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் ,படிக்கும் மாணாக்கர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
    எனவே, இத்தகைய பகுதிப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடை மருத்துவப் படிப்புகளிலும், இதர தொழிற் படிப்புகளிலும், உயர் கல்வியிலும் வழங்கிட வேண்டும். இவ்வொதுக்கீட்டை அனைத்து ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளேயும் உள் ஒதுக்கீடாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
    17.மின் கட்டணத்தை உயர்த்தாதீர் !
    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்துவது மக்களின் மீது தாள முடியாத சுமையை ஏற்றுவது ஆகும். மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவதோடு, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மின் கட்டணக் கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    18.முந்திரி மீதான செஸ் வரியை ரத்து செய்க !
    கடலூர் மாவட்டத்தில் பதப்படுத்தப்பட்ட முந்திரி வியாபாரத்தில் 5% உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. மேலும் சந்தைப்படுத்தப்படும் போது ஒரு சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது. தற்போது இன்னும் கூடுதலாக ஒரு சதவீத செஸ் வரி மாநில அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இது முந்திரி தொழிலையும், முந்திரி உற்பத்தியாளர்களையும் வெகுவாக பாதிக்கிறது. எனவே புதிய செஸ் வரிவிதிப்பை நீக்குமாறு தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    ஙீமிமி – சமூகம்
  2. ஆணவ படுகொலைகள் தடுக்க சட்டம் இயற்றுக!
    அரசியல் அதிகாரத்துக்கு வருவதற்கான குறுக்கு வழியாக சாதி மத வெறியை எவ்வளவு தான் தூண்டினாலும் தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. சொந்த மகளை அவரை மணம் செய்தவரை வெட்டி கொலை செய்தாவது தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சாதிய சக்திகள் தயங்குவதில்லை.
    தமிழ்நாட்டில் ஆதிக்க சாதியினரை மணந்ததற்காக 300 க்கும் அதிகமான தலித்துகள் படுகொலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் நடந்திருக்கின்றன. இதில் 13 வழக்குகள் மட்டுமே முடிந்திருக்கின்றன. மற்ற வழக்குகள் முடிவதற்கு முன்பாகவே குற்றவாளிகளின் ஆயுளே முடிந்துவிடுகிறது. இது ஆணவப் படுகொலைகளைச் செய்வதற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.ஆணவப் படுகொலைகளை ஒடுக்கவதற்கு தனிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
    அதுபோலவே. கொலை நடந்த பிறகு தண்டிப்பதற்கு திலாக. சாதி மறுப்பு திருமணங்களை செய்தவர்களை காதுகாப்பதற்கான உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் குழந்தைகளை சாதியற்றோர் என வகைப்படுத்தி தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மாநாடு வலியுறுத்துகிறது.
  3. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி
    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது செலுத்தப்படும் பல்வகையான வன்முறையில் இருந்து பாதுகாக்க போதிய சட்டங்கள் இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் வன்முறை அதிகரித்து வருவதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தமிழகத்தில் 2019ம் ஆண்டு 1982 வழக்குகளும், 2020ம் ஆண்டு 2025, 2021ம் ஆண்டு 2421 வழக்குகள் என ஆண்டுதோறும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 2021ம் ஆண்டு பதிவான மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை (ஸிணீஜீமீ) வழக்கு 442, கணவன் மற்றும் உறவினர்கள் மூலமான கொடுமைகள் 875, பாலியல்ரீதியான தாக்குதல்கள் (னீஷீறீமீstணீtவீஷீஸீ) 1077 ஆகியவையும் உள்ளடங்கும். குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 2020ல் பதியப்பட்ட வழக்குகள் 3090. 2021-ல் அது 4469 ஆக அதிகரித்திருக்கிறது.
    காவல்துறை முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பதும், பாதிக்கப்பட்ட பெண்ணை 24மணி நேரத்திற்குள் தேர்ந்த அரசு மருத்துவரிடம் பரிசோதனை செய்து பாலியல் வன்முறை செய்யப் பட்டிருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருப்பதும் பாலியல் வழக்குகளில் பெண்கள் நீதி பெற பெரும் தடையாக உள்ளன. பொதுவாகவே பாலியல் வழக்குகளில் 30 சதத்திற்கும் குறைவானவர்களே தண்டனை பெறுகிறார்கள். இது குற்றவாளிகளுக்கு மீண்டும் குற்றமிழைப்பதற்கான தைரியத்தை தருகிறது. எனவே விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, முதல் தகவல் அறிக்கை பதியாத காவல்துறையினருக்கு சட்டபடியான தண்டனை, போதிய பணியாளர்களை நியமித்தல் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
    பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) 2013 சட்டத்தின்படி அனைத்துப் பணியிடங்களிலும் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழக அரசு அதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ள போதிலும் அவை முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து அனைத்துப் பணியிடங்களிலும் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 10-க்கும் குறைவாக பணிசெய்பவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாள பெண்கள் முறையிடுவதற்கு மாவட்ட அளவிலான புகார் குழுக்கள் அமைப்பதோடு இச்சட்டத்தை குறித்த விழிப்புணர்வையும் உருவாக்கி, பணியிடங்களில் பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைகள் எவையும் நிகழாத வண்ணம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
    மேலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பெண்கள் குறித்தான சட்டங்களை அரசு விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். பாலியல் குறித்த தவறான தகவல்கள், பெண்களை பண்டமாக சித்தரிக்கும் சினிமா, வியாபார நோக்கிலான விளம்பரங்கள் என அனைத்துமே பெண்களை ஆண்களின் பாலியல் பண்டமாக்கும் கருத்தியலை முன்வைப்பதும் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணமாகின்றன. எனவே அறிவியல் பூர்வமான பாலியல் கல்வியை மாணவர்கள் பெருகின்ற வகையிலும், பாலின சமத்துவ கருத்துகளைப் போதிக்கும் விதத்திலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வலியுத்துகிறது.
    3.மகளிருக்கான 33 சதவீத இட ஒதுகக்கீடுக்காக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிடக் கோரி.
    சுதந்திர இந்தியாவில் 1951–&1952 ல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்டது. சமூகத்தில் சரிபாதி பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்று விட்டாலும் 1952ல் மக்களவையில் 4.4% பெண்கள் தான் இருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு 74 ஆண்டுகள் கடந்துள்ள போதும் தற்போது நாடாளுமன்றத்தில் பெண்கள் 13% தான் உள்ளனர். ஆனால் சுதந்திரத்திற்கு முன்னதாகவே 1917ல் இருந்தே இட ஒதுக்கீடுக்காக பெண்கள் குரலெழுப்பி வருகின்றனர்.100ஆண்டுகள் கடந்தும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேறாத ஒன்றாக இருந்து வருகிறது. பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டிற்கான மசோதா முதன் முதலாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் 1996 செப்டம்பர் 12ல் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் 2010 மார்ச் 9ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 11ஆண்டுகள் கழிந்துவிட்டது. தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ள பாஜக அரசு 33% இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை இன்னமும் மக்களவையில் தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகிறது.
    பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறை, வேலையின்மை, சம்பளத்தில் பாகுபாடு என பெண்களின் பிரச்சனைகள் அதிகரித்து வரும் சூழலில் பெண்கள் சமத்துவம், சமூக நீதி, பொருளாதார மேம்பாடு, பெறுவதற்கு அரசியலில் அவர்கள் பங்கேற்பும், முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் இருப்பதும் இன்றியமையாத ஒன்றாகும். அதனால் பெண்களின் நலனில் அக்கறையுள்ள தமிழக. அரசு சட்டமன்றத்தில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டுக்காக தனித் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி அழுத்தம் தந்திட வேண்டும் எனவும் ஒன்றிய அரசு 33% இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக மக்களவையில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
    4.ணிறிஷி-95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூபாய் 6000 ஆக உயர்த்துக!
    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் இணைந்த, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்- 95 செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஓய்வூதியம் பெறும் சுமார் 60 லட்சம் பேரில், சரிபாதியான 30 லட்சம் பேர், ஆயிரம் ரூபாயும் அதற்கும் குறைவாகவும் பெறுகிறார்கள். வெறும் 40 ஆயிரம் பேர் மட்டுமே அதிகபட்ச அளவாக மாதம் 4000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.
    இன்றைய விலைவாசியில் ஆயிரம் ரூபாய்க்கு எந்த மதிப்பும் இல்லை. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துமாறு மத்திய அறங்காவல் குழுவில் மத்திய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. நீதிமன்றங்களும் கூட ஓய்வூதியக் கணக்கீட்டை மறுசீரமைக்குமாறு கூறுகின்றன. ஆனால் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கூட உயர்த்த மறுத்துவருகிறது.
    மேலும் காலதாமதமின்றி ணிறிஷி-95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் 6 ஆயிரம் என உயர்த்துமாறும், ஓய்வூதியத்தை அகவிலைப் படியோடு இணைக்குமாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
  4. ரயில்வே மூத்தோர் உள்ளிட்ட அனைத்து கட்டண சலுகைகளையும் மீண்டும் செயல்படுத்துக!
    60 வயதுக்கு அதிகமான ஆண்களுக்கும் 58 வயதைத் தாண்டிய பெண்களுக்கும், இந்திய ரயில்வேயில், மூத்த குடி மக்களுக்கான சலுகை கட்டணம் வழங்கப்பட்டு வந்தது.
    கோவிட் 19 பெரும் தொற்றை காரணம் காண்பித்து மார்ச் 2020ல் இச்சலுகை திரும்ப பெறப்பட்டது. இதனுடன் சேர்த்து ரயில்களின் இயக்கமும் பெருமளவு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது பல மாதங்களாக அனைத்து ரயில்களும் ஓடுகின்றன. ஆனால் மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தை திரும்ப தருவதில்லை என்ற முடிவுக்கு மோடி அரசு வந்துள்ளதாக தெரிகிறது.
    வயது முதிர்ந்து உடல் தளர்ந்த பொழுதில், வேலையின்றி வருமானமும் இழந்துவிட்ட சூழலில், மூத்த குடிமக்களுக்கு முழு கட்டணத்தை செலுத்தி பயணம் செய்வது மிகவும் கடினமானதாகும். இதை உணர்ந்து சலுகை கட்டணம் பல்லாண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது.
    ரயில்களை தனியார்மயப் படுத்த முடிவு செய்துள்ள மோடி அரசு, அரசாங்கம் ஏற்று வந்த சமூகப் பொறுப்புகளை முற்றிலும் அகற்றிவிட்டு, வெறும் லாபம் கொழிக்கும் அமைப்பாக மாற்றி தனியாரிடம் விற்க துணிந்து இருக்கிறது. மோடி அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது.
    சாதாரண பெட்டிகளில் மட்டும் 75 வயதை கடந்தவர்களுக்கு கட்டணச் சலுகை தருவது பற்றி பரிசீலிப்பதாக அரசு கூறியிருப்பது மூத்த குடிமக்களைக் கேலி செய்வதாகும். ‌இல்லை என்று சொல்வதை சுற்றி வளைத்துச் சொல்லும் தந்திரமாகும்.
    உடனடியாக ரயில்வேக்களில் மூத்த குடிமக்களுக்கு தரப்பட்டு வந்த கட்டணச் சலுகை உட்பர ஏற்கனவே வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து கட்டணச் சலுகைகளையும் உடனடியாக மீண்டும் அமலாக்குமாறு ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
    6.இரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்காதே!
    இந்திய அளவில், குறிப்பாக தமிழ்நாட்டில், ஓடும் விரைவு ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கவும், சாதாரண தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் போக்குவரத்து கட்டணம் பல மடங்கு உயரும். சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று மறுப்பது ஜனநாயகத் தன்மை கொண்ட ஆட்சிக்கான அடையாளம் அல்ல.
    எனவே சாதாரண தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு ஒன்றிய அரசின் இந்திய ரயில்வே துறையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
    7.காட்டு நாயக்கர், மலையாளி இன மக்களை பழங்குடியினராக அங்கீகரித்திடுக!
    தமிழகம் முழுவதும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள மலையாளி இன மக்கள், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பழங்குடியினராக அங்கீகரிக்கப்படாமல் உள்ளனர். சத்தியமங்கலம் மற்றும் அந்தியூர் வட்டங்களில் வாழும் சுமார் முப்பதாயிரம் மலையாளி இன மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
    தமிழக அரசு இதற்கான உரிய முன்மொழிவினை மத்திய அரசிற்கு உரிய முறையில் அனுப்பாமல் மெத்தனமாக உள்ளது. 25 ஆண்டுகளாக பலனளிக்காத கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது.
    அதேபோல பழங்குடியினரான காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை தென் மாவட்டங்களில் பழங்குடியினராக அங்கீகரிக்குமாறு பல பத்தாண்டுகளாக அரசாங்கத்தை கோரி வருகிறார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.
    தென் மாவட்டங்களில் வாழும் காட்டுநாயக்கர்களையும், ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.
    8.திண்டுக்கல் சபரி மலை அகல ரயில் பாதை திட்டம் அமைத்திடுக..
    திண்டுக்கல் தேனி மாவட்டங்கள் கேரள மாநிலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன. ஏராளமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. சர்வதேச அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நீண்ட கால கோரிக்கையான திண்டுக்கல் சபரி மலையை இணைக்கும் வகையில் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் வரை அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    9.காரைக்குடி – மதுரை ரயில் பாதை அமைத்திடுக !
    காரைக்குடியில் இருந்து, திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரை இணைப்பு அகல ரயில் பாதை திட்டம் நீண்ட நாள் கோரிக்கையாகும். மதுரை சிவகங்கை மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதியை பெரிதும் மேம்படுத்தும் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மாநாடு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.
    10.பட்டுக்கோட்டை-அரியலூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றுக !
    பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வழியாக, அரியலூர் ரயில் பாதையுடன் இணைக்கும் திட்டம் பட்டுக்கோட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் வரை ரயில் பாதைக்காக உரிய நிலஅளவை செய்தும், அதை நிறைவேற்றும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தாமதிக்காமல், நிதி ஒதுக்கீடு செய்து பட்டுக்கோட்டை- அரியலூர் இணைப்பு அகல ரயில் பாதைத் திட்டத்தை செய்து முடிக்குமாறு மாநாடு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.
  5. மது போதைப் பொருட்களிலிருந்து மக்களை பாதுகாத்திடுக ..
    போதைப் பொருட்களை தடை செய்யக் கோரி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என தமிழகத்தில் பெண்கள் சமூக ஆர்வலர்கள் முற்போக்கு இயக்கங்கள் அனைவராலும் 10ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற போதிலும் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை கூடுகிறதே ஒழிய கடைகள் மூடப்படாத நிலையே தொடர்கிறது ஆண்கள் குடி நோயாளிகளாக மாறும் குடும்பங்களில் குழந்தைகள் கடுமையாக மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். கணவரைப் பாதுகாக்க மருத்துவ செலவு உட்பட பொருளாதார. சுமையை பெண்கள் தனியாகச் சுமக்க வேண்டியுள்ளது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானதோடு கூடுதலாக போதை வஸ்துகளான கஞ்சா, ஹெராயின், ஆல்கஹால் அதிகம் உபயோகிப்பதால் இளம் வயதில் மலட்டுத்தன்மை அதிகரித்து இனப்பெருக்கம் அழியும் சூழல்,உருவாகிறது. திருமண வாழ்க்கையில் மணமுறிவுகள் அதிகரிக்கின்றன. விபத்துக்கள் அதிகரித்து இளம் விதவைகள் எண்ணிக்கை கூடுதலாகிறது. மோசமான. பண்பாடு, கலாச்சார சீரழிவிற்கும், வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சமுகக் குற்றங்களும் அதிகமாகிறது எனவே போதைப் பொருட்களை தடை செய்வதோடு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்
    பேருந்து நிலையங்கள் பள்ளி,கல்லூரிகள், வழிபாட்டுத்தளங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். 5000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடி உற்பத்தி ஆலைகளை நிரந்தரமாக மூடவேண்டும். டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் இளைர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும். மது விலக்கை அமல்படுத்துவதை அரசு கொள்கையாக அறிவிக்க வேண்டும். மாநில அரசு மதுபானக் கடை வருமான இழப்பை கருதாமல் வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களைப் பரிசீலிக்க வேண்டும். மேலும் இக்கொடிய பழக்கத்தின் தீமைகள் குறித்து விளம்பரங்கள் மூலமும் பிரச்சார இயக்கங்கள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மதுப்பழக்கத்தை விட்டொழிப்பதால் ஏற்படும் உடல் எதிர் விளைவுகளைப் போக்கி தைரியமூட்ட, ஆலோசனை நிலையங்களை அரசு அமைக்க வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் பெண்களின் துயர் துடைப்பதும் அரசின் கடமை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
    12.குப்பை மேலாண்மையை பரவலாக்குக
    கொடுங்கையூரில் உள்ள சென்னை நகரின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கில் சுமார் 30 ஆண்டுகளாக கொட்டப்பட்ட, 12 மில்லியன் கன மீட்டர் கழிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
    அங்கு ஏப்ரல் 2018ல் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதிவாழ் மக்களை சொல்லொணாத் துயருக்கு ஆளாக்கியது; அந்தக் குப்பையில் மீத்தேன் வாயு உருவானதால் தீ விபத்து ஏற்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது. நச்சுக் காற்று மற்றும் கண் எரிச்சல் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க அங்கு வாழும் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டியிருந்தது.
    அந்தப் பகுதியில் வாழ்வோருக்கு தாங்க முடியாத துர்நாற்றம் மட்டுமல்ல, புற்று நோய் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கிறது.
    ஆனால், அண்மையில் இந்த இரு குப்பைக் கூடங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது அந்தப் பகுதி வாழ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சதுப்பு நிலப் பகுதியாக இருந்த இந்தப் பகுதியை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக 1986 ல் சிறிய அளவில், அதாவது 65 ஏக்கர் பரப்பளவில் அன்றாட திடக்கழிவுகளை தற்காலிகமாக குவித்து, திடக்கழிவு மேலாண்மை செய்ய துவங்கப்பட்டது. ஆனால் 32 ஆண்டுகள் ஆன பிறகும் கொடுங்கையூரின் சரிபாதியான பகுதி இன்றைக்கு சென்னையின் பெரும்பாலான மக்களின் கழிவுகளை சுமக்கும் இடமாக மாறிவிட்டது.
    வட சென்னையில் கொடுங்கையூர் விளைவிக்கும் சுற்றுச் சூழல் கேட்டினைப் போலவே தென் சென்னைப் பகுதியில் பெருங்குடி கேடு விளைவிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இந்த நிலைதான் உள்ளது.
    எனவே, ஊரெங்கும் உருவாகும் குப்பையையே அந்த அந்த பகுதியிலேயே பிரித்துக் கையாளாமல் ஒரு பகுதியில் கொட்டிக் குவித்து வைக்கும் முறைக்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான திடக் கழிவு மேலாண்மையை தமிழக அரசு, தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில், விரைவு படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் கொள்ளை லாபமீட்டும், சமூக அக்கறை இல்லாத தனியாரிடத்தில் இந்த பணியை ஒப்படைக்க வழிகாட்டுகிறது. தமிழ்நாடு அரசு இதனை புறந்தள்ளா வேண்டும். குறிப்பாக, மக்கும் குப்பையை பக்குவப் படுத்துதல் அல்லது உரமாக்குதல் , மக்காதவற்றை மறு சுழற்சிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு குப்பை மேலாண்மை, மையப்படுத்துதலிலிருந்து உடனடியாக மாற்றப் பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    13.வனங்களைப் பாதுக்காக்க.. மக்கள் உரிமைகளை காக்க வேண்டி..
    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் சரணாலயம், அணில்கள் சராணாலயம், சுற்றுச்சூழல் மண்டலம் அமைத்தல் போன்ற காரணங்களால பழங்குடி மக்கள் வனத்தை விட்டு வெளியேற்றப்படுவதும். வனத்தையட்டியுள்ள கிராம மக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கக்கூடாது எனவும் வனத்துறையால் கெடுபிடிகள் செய்யப்படுவதுடன், வழக்குகளும் போடப்படுகின்றன. ரிசார்ட்டுகளை கட்ட அனுமதிக்கும் வனத்துறை மேலும் கால்நடைகளை மேய்ப்பதற்கு கூட அனுமதிக்க மறுப்பதும், வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என அருவிகளுக்கு குளிக்கச் செல்பவர்களிடம் கூட கட்டணம் வசூலிப்பதும், வனத்தில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதும் போன்ற பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆட்படுத்தப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு வனங்களில் மேய்ச்சல் உரிமையை தொடர்ந்து வழங்கவும், வனங்களில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றாமல் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ் மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது
    14.கல்விக்கடன் வட்டியை ரத்து செய்க
    உயர்கல்வி பெறுவதற்காக தேசிய வங்கிகளில் கல்வி கடன் பெற்ற மாணவர்கள் வேலையின்மையாலும் கொரோனா காலத்தில் வேலை இழந்ததாலும் வருவாய் இன்றித் தவிக்கின்றனர். கடன் தொகையை விட அதிக அளவிலான தொகையை, வட்டி, அபராத வட்டி என வங்கி நிர்வாகங்கள் விதித்து வருகின்றன. தனியார் ஏஜென்சி மூலம் மாணவர்களையும் பெற்றோர்களையும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் கடன் அசலைச் செலுத்திய மாணவர்களுக்கு வட்டியை முற்றாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக் கொள்கிறது.
    15.பழுதடைந்த வீடுகளை மாற்றி வழங்குக !
    வீடு வழங்கும் திட்டம் பற்றி பெரும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ஒன்றிய அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் வீடுகள் வழங்கி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு வழங்கப்பட்ட வீடுகள் தற்போது வசிக்க இயலாத நிலையில் பாழ்பட்டு உள்ளன. இவற்றை இடித்துவிட்டு புதிய வீடு கட்டி தருவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இதனை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button