அறிக்கைகள்

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026ன் மூலம் கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, செஸ் மற்றும் பிற வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கப்படுகிறது. இச்சட்டத்திருத்தம் மாநிலங்களின் வருவாய் உரிமையை பறிப்பதுடன் நிதி சுயாட்சியையும் கடுமையாக பாதிக்கச் செய்யும்.

இச்சட்டம் வெறும் கனிம வளம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையும், நிதி உரிமைகளையும் படிப்படியாக பறிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் பெரு நிறுவனங்களுக்கு இச்சட்டத்திருத்தம் வாய்ப்பளிக்கும். இயற்கை வளங்களை ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் மையப்படுத்த இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.

2026 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அரியவகை கனிமங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலி அதற்கான முதலீடு மற்றும் கடல்சார் வளங்களை வேகமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகளாக அறிவித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஆகஸ்ட் 12 அன்று மக்களவையும், ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையும் இந்த சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு தீர்ப்பு, மாநிலங்களுக்கு உள்ள கனிம உரிமைகள் தொடர்பான வரி அதிகாரத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இத்தகைய சட்டக் கட்டுப்பாட்டை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருவது, மாநிலங்களின் அதிகாரத்தை நயவஞ்சகத்தை சட்டத்தின் மூலம் குறைக்கும் செயலாகும்.

மத்திய அரசு இதனை சமச்சீராக்குதல், சுரங்கத்துறை முதலீட்டுக்கு உதவுதல் என நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்திற்காக மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிப்பது தேச விரோதச் செயலாகும்.

கனிம வளம் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டின் வருவாயை மிகப்பெரிய அளவிற்கு இச்சட்டத்திருத்தம் பாதிக்கும். மாநில இயற்கை வளங்கள் மீது கொள்கை ரீதியான முடிவெடுக்கும் உரிமையையும், கனிம வளங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநில மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் பொருளாதார மற்றும் நிதிசார் தன்னாட்சியையும் இச்சட்டத்திருத்தம் பாதிப்படையச் செய்யும்.

கனிம வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான லாபத்திற்கானது அல்ல; அவை இயற்கையான மக்களின் பொதுச் சொத்து ஆகும். அவற்றின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், உள்ளூர் மக்களின் உரிமைகள், மாநில நலன் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இச்சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் நிலம், வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும். இயற்கை வளங்களின் மீதான அவர்களின் உரிமைகளை பாதிக்கும். குறிப்பாக வன உரிமைகள் சட்டம் 2006 வழங்கும் சமூக மற்றும் தனி நபர் வன உரிமைகள், கிராம சபையின் ஒப்புதல் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை பாதுகாக்காமல், சுரங்க திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் அரசியலமைப்புச் சட்டரீதியான உரிமைகளுக்கும், வாழ்வாதார பாதுகாப்பிற்கும் எதிரானதாகும்

எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இச்சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button