இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26வது மாநில மாநாட்டுப் பேரணியால் செம்மயமானது சேலம்

“கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது” என்று ‘’தவழ்ந்து’’ சொன்னவர்களின் முகத்தில் அறையும்படி, நாங்கள் யானை பலம் கொண்டவர்கள் என்று நிரூபித்தது செங்கொடிப் புதல்வர்களின் பேரணி.

செங்கொடியை தாங்கி, சீருடை அணிந்து, பயிற்சி பெற்ற இளைஞர்கள், இளம் மகளிர் அணிவகுப்பு முகப்பில் செல்ல, ஆண்களும் பெண்களுமாய், செங்கொடிகளையும் பதாகைகளையும் ஏந்திக்கொண்டு பேரணி புறப்பட்டது.
கொம்புகள் ஊத, பறையதிர, சங்குகள் முழங்க, சிலம்பு சுற்ற, ஒவ்வொரு மாவட்ட பதாகை முன்னரும் பாரம்பரிய பண்பாட்டு கலை நிகழ்வுகளோடு ஊர்வலம் நகர்ந்தது. தஞ்சையில் இருந்து காவிரி படுகையின் நெல் நாற்றையும், தம் வாழ்வை பாதுகாத்த செங்கொடியையும் ஏந்தி கொண்டு பெண்கள் நடை போட்டனர்.

போஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியச் செயலாளர்கள் அமர்ஜித் கவுர், ஆனி ராஜா, டாக்டர் கே நாராயணா, தேசிய நிர்வாக குழு உறுப்பினர் இரா. முத்தரசன் ஆகியோர் பேசினர். முன்னதாக சின்ன பொண்ணு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தனது தாய் மருத்துவமனையில் இதயச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போதும், தான் ஏற்ற பணியை செம்மையாக நிறைவேற்ற சுழன்று பணியாற்றிய மாநாட்டின் வரவேற்பு குழு செயலாளர், சேலம் மாவட்டச் செயலாளர் அ. மோகன் மற்றும் வரவேற்புக் குழுவினருக்கு துண்டு அணிவித்து இரா.முத்தரசன் பாராட்டு தெரிவித்தார்.