
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 10 அன்று நாடு முழுவதும் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
‘1942 – வெள்ளையனே வெளியேறு’ போராட்ட நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்றன. இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகினர். தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற மறியலில், பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு கைதாகினர்.
நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்.
தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும்.
தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை 42 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்;
விவசாயி மற்றும் தொழிலாளர் விரோத வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை கைவிட வேண்டும்.
தனியார் மயமாக்கும் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
வி பி ஜி ராம் ஜி திட்டத்தை கைவிட வேண்டும்.
கட்டுமானம் முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பொது கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும்.
அரசியலமைப்பையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
