அறிக்கைகள்

காது கிழிபடும் பிரதமரின் வாய்ச்சவடால், தமிழக  மீனவர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது படகும் மீன்பிடி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி இரவு கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காது கிழியப் பேசிய மோடியின் வாய்ச் சவடால் மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது. தனது ஆட்சியின் தோல்வியை மறைக்க இண்டியா கூட்டணி மீது பழி சுமத்துகிறது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையின் சட்டவிரோத செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் அரசியல் உறுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button