சுதந்திரப் பாலஸ்தீனம் – 25வது பேராயத்தில் தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயத்தில், பாலஸ்தீன மக்களுடனான ஒற்றுமையை உறுதிப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தின் முக்கியப் பகுதிகள்..

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயம், பாலஸ்தீன மக்கள் தேசிய விடுதலை, நீதி மற்றும் இறையாண்மைக்காக நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கான தமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுகள், இராணுவ முற்றுகை மற்றும் தாக்குதல்களால் செத்துமடிந்தும், வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தும் தவிக்கும் பல லட்சம் பாலஸ்தீனர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை பேராயம் தெரிவித்துக்கொள்கிறது. ஆக்கிரமிப்பு, நிறவெறி கொள்கைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நிற்கிறது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, முற்றுகை, குடியேற்ற விரிவாக்கம், இனவெறி நடைமுறைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகக் கண்டிக்கிறது. 1967 எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திரமான, இறையாண்மை மிக்க பாலஸ்தீன அரசை நிறுவவும், ஐ.நா. தீர்மானம்-194ன் படி பாலஸ்தீன அகதிகள் திரும்புவதற்கான உரிமையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பாலஸ்தீனத்தின் விடுதலை ஏகாதிபத்தியம், காலனித்துவம் மற்றும் இனவெறிக்கு எதிரான உலகளாவிய போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிக்கிறது. பாலஸ்தீன மக்கள் தங்களின் நியாயமான உரிமைகளை, அதாவது சொந்த மண்ணுக்குத் திரும்பும் உரிமை, இறையாண்மைக்கான உரிமை, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியவற்றை அடையும் வரை பாலஸ்தீனத்துடனான ஒற்றுமை தொடரும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயம் உறுதியளிக்கிறது.

