தமிழகம்

2023 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

நடப்பு 2022 ஆண்டு நிறைவு பெற்று, 2023 ஆம் ஆண்டு பிறக்கிறது. அடுத்து வரும் புத்தாண்டை நாம் நம்பிக்கையோடு வரவேற்போம்!

கௌரவக் கொலைகள் என்ற பெயரில், சாதி வெறி ஆதிக்கத்தின் ஆணவக் கொலைகள் அரங்கேறும் கொடூரங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஏழாண்டு சட்டப் போராட்டத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்குக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இவ்வழக்கில், சாதிவெறி நிர்பந்தத்தில் உருவான பிறழ் சாட்சியத்தின் மனச்சாட்சியை எந்தச் சட்டத்தாலும் உண்மை பேச வைக்க முடியவில்லை. அந்த அளவில் சாதி செருக்கு செறிவாகி நிற்கிறது. அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த சம்பவத்தால் ஒட்டு மொத்த சமூகமும் தலை கவிழ்ந்து நிற்கிறது.

மனிதனை மனிதன் நேசிக்கும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தொன்மை நல்மரபுகளுக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைக்கும் விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை பேரிடராக வந்த மாண்டோஸ் புயலை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை சாத்தியமானது. சமூகத்தில் தொடர் கொந்தளிப்பை உருவாக்கி, பெரும் மனித உயிர் சேதாரங்களை ஏற்படுத்தி வரும் கேடு நிறைந்த சூழல் அழிந்து, அனைவரும் கூடி வாழும் நல்லிணக்க சூழலை உருவாக்க, ஜனநாயக இடதுசாரி, மதச்சார்பற்ற, மனித நேய சக்திகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் வெற்றி பெறும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டை அமைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றுபடுவோம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button