கட்டுரைகள்

சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு மார்க்சியமே தீர்வு காணும்

அருண் நெடுஞ்செழியன்

அண்மைக்கால சூழலியல் சிக்கல்களை மார்க்சிய விமர்சன நோக்கில் அணுகும் போது, நமது சூழலியல் வாதிகள் மார்க்சியர்களை நோக்கி சில விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவற்றில் முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.

முதலாவதாக, மார்க்சிய தத்துவமானது ஐரோப்பிய சமூகத்தை ஆய்வு செய்து முன்வைத்த கோட்பாடு; அது இந்தியாவிற்குப் பொருந்தாது.
இரண்டாவதாக, மார்க்சின் முதலாளித்துவ பகுப்பாய்வானது, வர்க்கப் போராட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதனால் மார்க்சியத்தின் வழியே சமகால சூழலியல் சிக்கல்களை பாகுப்பாய்வு செய்ய இயலாது என்பதாகும்.

இவ்வாறாக  மார்க்சை முன்வைத்தும், மார்க்சியத்தை முன்வைத்தும் நவீன பொருளாதார அறிஞர்கள், சூழலியல் வாதிகள் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவோ இவர்களின் கூற்றுக்கு நேர்மாறாக உள்ளது. அதாவது முன்பை விட மார்க்சின் வாதங்கள் தற்போதைய நெருக்கடி நிலையில் முக்கியத் தேவையாக உள்ளது. மார்க்சியத்தின் எதிரிகளே தற்போது மார்க்சை ஏற்றுக்கொள்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது உலகின் புதிய அடுக்கை குலைப்பதாக  அமைந்தது. பொதுவாக சந்தையின் உள்ளார்ந்த விதிகளே மாய வித்தைகள் செய்து அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடும் என கட்டியம் கூறி வந்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் விழித்துக்கொண்டு நின்றனர்.

மார்க்ஸ் ஏன் தேவை

இன்றைய முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது உழைப்புச் சுரண்டலிலும் இயற்கை வளச் சுரண்டலிலும் முன்னைபைவிட மிக வலுவாக கொள்ளையடிக்கிற அமைப்பாக முன்னேறிவிட்டது. இதில் ஐரோப்பிய கண்டமோ, ஆசியா கண்டமோ, ஆப்பிரிக்க கண்டமோ விதிவிலக்கல்ல. நாட்டின் கனிமவளங்களை வரைமுறையற்ற வகையில் கொள்ளையடிப்பது, ஆபத்தான நச்சுக் கழிவுகளை நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலந்து சூழலுக்கு கேடு விளைவுப்பது ஆகிய சூழலியல் சீர்கேடுகளை இன்று அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகள் ஆகும்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை என்றால், இத்தாலியில் இல்வா ஆலை; இங்கே கூடங்குளம் அணு உலை என்றால் ஜப்பானில் புகுசிமா அணு உலை. இந்தியாவிலே அதானி நிறுவனம் காடழித்து நிலக்கரி எடுக்கிறது என்றால், ஆஸ்திரேலியாவில் ரியோ டின்டோ நிறுவனம் அதைச் செய்கிறது. ஆக, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை சுரண்டுவதிலும் கேடு விளைவிப்பதிலும் ஒரே விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக அமேசான் காடுகளைக் காப்பாற்றப் போராடிய சூழல் போராளிகளும் இந்தியாவில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய  சூழலியல்வாதிகளும் ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். உலகெங்கிலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் கோர வடிவம் ஒரே விதமாகத் தான் உள்ளது.

மார்க்சின் முக்கிய பங்களிப்பே முதலாளித்துவ அமைப்பின் இந்தக் கோர முகத்தை, அதனது அராஜகத்தை அறிவியல் பூர்வமாக அம்பலப்படுத்தியதாகும். முதலாளித்துவத்தைப் பற்றிய திறனாய்வை மார்க்சைத் தவிர்த்து வலுவாகவும், ஆழமாகவும் இதுவரை எவரும் முன்வைத்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். முதலாளித்துவ அமைப்பு குறித்த மார்க்சின் பகுப்பாய்வு மட்டும் நமக்கு இல்லாமல் போனால், முதலாளித்துவ அமைப்புக்குள் வாழத் தளைப்பட்ட மக்களுக்கு அது குறித்த புரிதல் இல்லாமலே போயிருக்கும். குறிப்பாக முதலாளித்துவத்தின்  ‘பொருளாதார இயக்க விதிகளை’ மூலதனம் நூலின் வாயிலாக மார்க்ஸ் விளக்காமல் விட்டிருந்தால், முதலாளித்துவ அமைப்பின்  முக்கியப் போக்கான அதன்  ‘இயக்கத்தை’ புரிந்துகொள்வது என்பது, நவீன மனித சமூகத்திற்கு சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம்.

மார்க்சியம் மற்றும் மார்க்ஸ் மீதான விமர்சனங்களுக்கான நமது பதில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலானது. அது வர்க்கச் சுரண்டல் மற்றும் சூழலியல் சிக்கல்களைப் பேசுவதாகும். அப்பதிலை நாமொரு பொருளாதார மார்க்சியரின் வழி நின்று சொன்னால் இன்னும் பொருத்தமுடையதாக இருக்கும். “மூலதனத்திற்கு அப்பால்” எனும் தனது நூலின் முதல் பகுதியே “மார்க்ஸ் எதற்காக?” என்ற தலைப்பில் மூலதனத்தின் வரலாற்றை, பொருளாதார மார்க்சியரான மைக்கேல் லெபோவிட்ஸ் விரிந்துரைக்கிறார்.

மார்க்சியத்தை நாம் பொருளாதாரக் கோட்பாடு என்ற அளவோடு சுருக்கக் கூடாது. சுரண்டலை மையப்படுத்திய சமூகத்தையோ, முழு வளர்ச்சியை நோக்கிய மனித ஆற்றலைக் கட்டுப்படுத்தும் விதத்திலான சமூகத்தையோ மார்க்சியம் நிராகரிக்கும். மனிதனின் தேவைக்காக அல்லாமல் தனியாரின் லாபத்திற்கான வர்க்க சார்பாக எடுக்கப்படுகிற சமூக முடிவுகளுக்காக முதலாளித்துவத்தை மார்க்சியம் எதிர்க்கிறது. அதன் லாப நோக்க உற்பத்தி முறைக்காக இயற்கை வளங்களை, மனித வளங்களை சிதைப்பதும், பாலின, மொழி  பாகுபாட்டினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்வதும் முதலாளித்துவத்தின் இயல்பான போக்காக மார்க்சியம் பார்ப்பதால் மட்டுமே அதற்கெதிராகப் போராட வலியுறுத்துகிறது.

முதலாளித்துவத்தின் பொருளாதார ‘வளர்ச்சி மாதிரி’

இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உலக நிதி மூலதனமே திகழ்கிறது. பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற உலகு தழுவிய கட்டமைப்புகள் மூலமாக எந்த நாட்டிலும் தலையிட முடிகிறது. நலிவடைந்துள்ள நாடுகளோ தனது நாட்டின்  பொருளாதார கட்டுப்பாட்டை உலக நிதி மூலதனத்திடம் இழந்து, அதற்கிசைவான நோக்கத்திற்காகச் செயல்படும் அளவோடு சுருங்கிவிட்டது.

ஆகவே, இன்றைய சமூகம் மற்றும் சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக இருகின்ற முதலாளியத்தின் லாப நோக்க உற்பத்தி முறையை, அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை. அதனால்தான்  ஐ.நா.வின் காலநிலை மாநாட்டுத் தீர்மானங்களால் சூழலியல் அழிவுகளை தடுத்து நிறுத்த இயலவில்லை. இதை மார்க்சியர்களால் மட்டுமே உள்ளது உள்ளவாறு விளக்க முடியும்.

இன்றைய நவீன முதலாளித்துவக் கட்டத்தில் பொருளாதாரமே, அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்துள்ளது. இதற்கு முந்தைய சமூகக் கட்டங்களில் அரசியல் அதிகாரமே பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது. அதாவது ஒரு பேரரசுக்கு திறை செலுத்தும் சிற்றரசுகள் போன்ற மையப்படுத்தப்பட்ட அரசமைப்பில் பொருளாதாரம் அரசியல் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. அதன் பின்னான வணிக மூலதன காலகட்டத்திலும் இதுவே தொடர்ந்தது. ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறான நிலையே நிலவுகிறது. அதனாலேயே இன்று உழைக்கும் வர்க்கமும், இயற்கை  வளங்களும் முதலாளித்துவத்தின் லாப நோக்க உற்பத்தி முறைக்காக சுரண்டப்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தால்  வளர்த்தெடுக்கப்பட்ட  இப்பொருளாதார அம்சம் குறித்து, பொருளாதார  மார்க்சியரான சமீர் அமீன் கூறுவதாவது,

‘‘பொருளாதாரம் என்னும் வார்த்தைக்கு அதிக அழுத்தம் முதலாளியத்தால் வழங்கப்பட்டதாகும்; முதலாளியத்திற்கு முந்திய சமுதாய அமைப்புகளில் அரசியலும், சித்தாந்தமும் ஆதிக்க நிலையில் இருந்தன. ஆனால் முதலாளியம் பொருளாதாரத்திற்கு ஆதிக்க நிலையை அளித்தது. அதாவது முந்தைய அமைப்புகளில் அரசியலும், சித்தாந்தமும் ஆதிகத்தின் மூலாதாரங்களாக அமைந்தன. ஆனால் முதலாளியத்தில் செல்வமே அதிகாரத்தின் அடிப்படை. வேறு வகையில் கூறினால், மதிப்பு விதி முதலாளியத்தின் பொருளாதார அம்சத்தை மட்டும் அல்லாமல் அதனுடைய சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆள்கிறது.”

இதனால்தான் சொல்கிறோம், முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராட, முதலாளித்துவத்துக்கு மாற்றான சமூகத்தைக் கட்டியெழுப்ப நம்முன் உள்ள ஒரே வாய்ப்பு மார்க்சியம் மட்டுமே. ஏனெனில், மார்க்சியம் மட்டுமே மனித இனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான மாற்று முகாமை காட்டுகிற தத்துவமாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button