
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் ரூ 3 ஆயிரம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர் வரும் தைப் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை உள்ளடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க சில நாட்களுக்கு முன்பு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனையொட்டி, வழக்கமாக வழங்கப்படும் ரொக்க தொகை சென்றாண்டு வழங்கப்படாததால், இந்த ஆண்டு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதனைப் பரிசீலித்து, குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகையாக தலா ரூபாய் 3000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
அத்துடன், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கும் பரிசுத் தொகுப்பும், தொகையும் வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
