
இலக்கிய மாமணி விருது பெற்ற பேராசிரியர் இரா.காமராசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னோடியும், தலைசிறந்த ஆய்வாளரும், படைப்பாளருமான பேராசிரியர் இரா.காமராசு, தமிழ்நாடு அரசின் இலக்கிய கலைமாமணி விருது பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவப் பருவத்தில் இருந்தே இலக்கிய பேராசான் ஜீவா, நாட்டார் இலக்கிய ஆய்வறிஞர் பேராசிரியர் நா.வானமாமலை போன்றோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களது சிந்தனை வழியில் வளர்ந்து தலைசிறந்த படைப்பாளர், கவிஞர் இரா. காமராசு. அவர் நாட்டார் இலக்கியம் தொடங்கி, நவீன இலக்கியம் வரையிலும், தமிழர் வாழ்வின் பண்பாட்டு தளங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து, பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ளவர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி, அதன் துறைத் தலைவராக உயர்ந்தவர்.
பல்வேறு அமைப்புகளின் விருதுகளை பெற்ற பேராசிரியர் இரா.காமராசு தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது பெற்றமைக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
