தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையான பாதிப்பு – கொள்முதல் அளவை உயர்த்துக!
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக !!

தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதால் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் மேற்கு பருவ மழை நிறைவுக்கு முன்பாக வட கிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது. வழக்கத்துக்கும் கூடுதலான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையாக பாதித்து வருகிறது. வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் செய்யப்பட்ட குருவை சாகுபடி, நல்ல விளைச்சலை தந்திருந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல் முழுவதும் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் மையங்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகளும் நனைந்து கொண்டிருக்கின்றன.
கொள் முதல் செய்த நெல் மூட்டைகளை ரயில் மூலம் வெளியே எடுத்துச் செல்ல போதுமான லாரிகள் கிடைக்காத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், அரசும் பெரும் இழப்பை சந்திக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது மாவட்டங்களில் இருந்து போதுமான பொருள் போக்குவரத்து வாகனங்களை வரவழைத்து, கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து, முளைவிட்டு சேதமடைந்து விட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
