அறிக்கைகள்

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்- சட்டசபையில் கண்டனத் தீர்மானம்

முதல்வர் அறிவிப்புக்கு சிபிஐ வரவேற்பு

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயக உரிமைக்காகப் பல பத்தாண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட பெருமைக்குரிய தலைவர் யாசர் அராபத், பாலஸ்தீன விடுதலை இயக்கம் மேற்கொண்டு வரும் விடுதலை இயக்கத்திற்கு ஆரம்ப நிலையில் இருந்து இந்தியா உறுதியான ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது.

உலகிலேயே முதன்முதலாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்து, அதன் அலுவலகத்தைத் தூதரகத் தகுதியோடு தலைநகர் புது தில்லியில் அமைத்துக் கொடுத்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டில் ஐநா அவையில் உள்ள 193 நாடுகளில் 157 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.

இந்நிலையில், பாலஸ்தீன இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் ஊறு செய்து, அதன் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்ள இனவெறி பிடித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது வன்தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம், இஸ்ரேல் தொடங்கிய, இன அழிப்புத் தாக்குதலை இன்றுவரை, தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக 67 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அழித்தொழிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்பது ஆற்ற முடியாத துயரமாகும்.

தாயக உரிமைக்குப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், அமெரிக்காவின் டிரம்ப் அரசு மட்டும் இஸ்ரேல் இனவெறி அரசுக்கு ஆதரவும், உதவியும் செய்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து, தலைநகர் சென்னையில் இஸ்ரேலைக் கண்டித்துள்ளதும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் முதலமைச்சர், சட்டமன்றப் பேரவையில் இஸ்ரேலைக் கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதும் உலகளவிலான விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாகும்.

முதலமைச்சரின் முன்முயற்சிகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதுடன், இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரின் வேண்டுகோளை, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வாகக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பாலஸ்தீன மக்களின் அமைதி வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button