தலையங்கம்

மன்னிப்பு கேட்க வேண்டுமா கமலஹாசன்?

தலையங்கம்

வடபுலத்தில் வல்லாண்மை செய்தாலும், தென் மாநிலங்களில் ஒதுக்கப்படுவது பாஜகவைப் பெரிதும் உறுத்துகிறது. மதத்தால் பிளவுபடுத்தும் வடமாநில உத்திகள் இங்கு பலிக்கவில்லை.

‘உறவாடிக் கெடுப்பதே சிறந்த வழி’ என்று மகாராஷ்டிரா, பீகார் வழிமுறையை, இப்போது இங்கு செயலாக்கத் தொடங்கிவிட்டது.

தெலுங்கானாவில் அதிகார உச்சத்தில் இருந்த டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகரராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை சாராய வழக்கில் கைது செய்தது. ஐந்து மாதம் சிறையில் இருந்தார்.

தான் சிறையில் இருந்த போது, அவரது சகோதரரும் கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவும் வேறு சிலரும், கட்சியை பாஜகவுடன் இணைக்க முயன்றதாக கவிதா குற்றம் சாட்டியிருக்கிறார்.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சியில் இருக்கின்றன. இங்கு கால் பதிப்பதற்காக, தனது வழக்கமான இந்துத்துவ மேலாதிக்கத் தோரணையை கைவிட்டு, கிறித்துவர் அடர்த்திமிக்க மாவட்டங்களில், கிறித்தவர்களைத் தனது மாவட்டச் செயலாளர்களாக பாஜக நியமித்துள்ளது.

காங்கிரசின் புகழ் பெற்ற தலைவர் மறைந்த ஏகே அந்தோணியின் மகன் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார். கணிசமான பலம் கொண்ட ஈழவர் சமூகத்தின் கட்சியோடு கூட்டணி அமைக்கிறது.

ஆந்திராவில் ஆட்சி நடத்தியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். அங்கும் குடும்பத்தில் குழப்பம். ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரசுக்குப் போனார்.

பாஜகவின் அனைத்து மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தார். ஆந்திர மாநில நலன்களை விட்டுக் கொடுத்தார். பாஜகவுடன் ரகசியக் கூட்டணி வைத்திருந்தார் என்பதே அவர் சொன்ன குற்றச்சாட்டாகும்.

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மூத்த தலைவர் ராமதாஸ் பகிரங்கமாக அளித்த பேட்டி, பாஜகவின் பல திரை மறைவு வேலைகளை வெளிப்படுத்தியது.

பாஜகவுடன் கூட்டணியை தான் விரும்பாத போதிலும், தன் மகனும் மருமகளும் தனது காலைப் பிடித்துக் கொண்டு அழுததாகவும், அந்தக் கூட்டணியை ஏற்கவில்லை என்றால் எனக்கு நீங்கள் கொள்ளி வைக்க வேண்டி வரும் என்ற அளவுக்கு உணர்வுபூர்வமாக அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாலையில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கம் கேட்டு வெளியில் பார்த்தால், கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பாஜக தலைவர்கள் தன் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அரசியல் கட்சியைத் துவங்கிய கமலஹாசன், பலமொழிகளில் வெளியாகும் தனது படம் பற்றிய அறிமுக விழாவில். தமிழின் மகள் கன்னடம் என்று கூறிவிட்டார்.

திராவிட மொழிகள் அனைத்தும் சகோதர மொழிகள்தான். ஒருவேளை அச்சுமுறையும், பத்திரிகைகளும், திரைப்படமும் தோன்றி நம்மை இணைக்காமல் போயிருந்தால், இப்போது நெல்லையிலும், மதுரையிலும், கோவையிலும், சென்னையிலும் நாம் வேறு வேறு மொழிகளைப் பேசிக் கொண்டு இருந்திருக்கலாம்!

ஆனால் கமலஹாசன் பேசியதில் நாம் எல்லோரும் உறவுகள்தான் எனும் நல்லெண்ணம் தொனித்ததே தவிர, எந்த ஒரு மொழியையும் உயர்த்த வேண்டும் அல்லது தாழ்த்த வேண்டும் என்ற உள்நோக்கம் ஏதும் இல்லை.

ஆனால் இதை ஒரு ஆயுதமாக பாஜக பற்றிக் கொண்டது. கன்னட மொழியைத் தாழ்த்தி விட்டதாக ஆரவாரக் கூச்சல் எழுப்பியது.

காங்கிரஸ்காரரான கர்நாடகா முதல்வர் சித்தராமையாவைச் சிக்கலில் மாட்டியது. அவர் பேசாமல் இருந்தால், கன்னட மொழிக்கு எதிரானவர் என்று தூற்றலாம். கமலஹாசனைக் கண்டித்தால், தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்கெடுக்கலாம். ஏதொன்றும் பாஜகவுக்கு நல்லது.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டு முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை என்று இங்கும் சங்கிகள் கூக்குரலிடுகின்றனர். எப்படியேனும் தகராறு முற்ற வேண்டும். அடையாள அரசியல் முற்றினால், இப்படித்தான் அது எதிரியின் கைகளில் ஆயுதமாகும்!

இந்தியாவின் பன்மைத்தன்மையை ஒழித்துக் காவி பூசுகிற, மாநில உரிமைகளைப் பறித்து அதிகாரங்களை எல்லாம் டெல்லிக்குக் கொண்டு சேர்க்கிற பாஜகவின் வல்லாதிக்கத்தை, எதிர்த்து நிற்கும் சக்திகளிடையே உட்பகையை உருவாக்கி பலவீனப்படுத்தும் பாஜகவின் தொடர் முயற்சியின் இன்னொரு பக்கமே இது!

இது பற்றிய வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், நீங்கள் என்ன மொழியியல், வரலாற்றியல் வல்லுநரா என வினவி, மன்னிப்புக் கேட்டால் தீர்ப்பளிப்பதாகச் சொன்னது விசித்திரமாக இருக்கிறது. தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பதில் தயங்க வேண்டியதில்லை. ஆனால் தவறாகப் புரிந்து கொண்டோம் மன்னிப்பு கேள் என்பது கீழ்மைப்படுத்துவதாகும்.

மக்களை ஒன்றுபடுத்துகிற, அவர்களது விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் முன்னுரிமை தருகிற முற்போக்கு சக்திகள் பாஜகவின் இந்த நரித்தந்திரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button