பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை கொண்டாட, பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடிய ரசிகர்கள், கூட்ட நெரிசல் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதும், 47 பேர் வரை படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தோர் அனைவரும் 40 வயதுக்கும் குறைவான இளைஞர்கள், பெண்கள் என்பது பெரும் வேதனையாகும். 35 ஆயிரம் இருக்கைகள் கொண்ட சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் மூன்று லட்சம் பேர் திரண்டது இந்தத் துயரச் சம்பவத்துக்கு காரணமாகும்.
தொடர்ந்து நடந்து வரும் போட்டி, நேற்று முன்தினம் அகமதாபாத், நேற்று பெங்களூரு என நடந்த விளையாட்டு போட்டியில் ரசிகர்கள் திரளுவது குறித்து முன் எச்சரிக்கையுடன் மதிப்பீடு செய்து, விளையாட்டு போட்டி நடத்திய ஏற்பாட்டாளர்கள் அரசுடன் பேசி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
நடந்த சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக மாநில அரசு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகை அறிவித்திருப்பது ஆறுதல் படுத்தும் எனினும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் உத்திகள் வகுத்துக் கொள்வது அவசியமாகும்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என விழைகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.