கட்டுரைகள்

மார்க்ஸ் எனும் அறிவாயுதம்

தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின்  204 வது பிறந்தநாள் இன்று! முன் எப்போதுமில்லாத அளவிற்கு இன்று அவரையும் அவர் படைத்த  மார்க்சியம் எனும் தத்துவ ஆயுதத்தையும் கையில் ஏந்தி, சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல   வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.  அவர் உதித்த இந்த நாளில், அவர்தம் புரட்சிகர வாழ்க்கை சுருக்கத்தையும், மார்க்சியத்தின் சாரத்தையும் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்த வேண்டியது இன்றைய தேவை ஆகும். அந்த வகையில், யுகப்புரட்சியாளர் தோழர் லெனின் அவர்களின் “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்” என்ற கட்டுரையின் சுருக்க வடிவத்தினை நாளை முதல் (06.05.2022) வாசகர்களுக்குத் தொடராகத் தருகின்றோம்.

காரல் மார்க்ஸின் வாழ்க்கைச் சுருக்கம்  

காரல் மார்க்ஸ் ரைனிஷ் பிரஷ்யாவிலுள்ள டிரியர் நகரில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று வசதியான குடும்பத்தில் வழக்குரைஞரின் மகனாகப் பிறந்தார். டிரியரில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு சட்டவியலைப் படிக்க மார்க்ஸ் முதலில் பான் பல்கலைக்கழகத்திலும் பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஆனால் முக்கியமாக வரலாறும், தத்துவஞானமும் பயின்றார்.

1841ம் ஆண்டில் படிப்பை முடித்து, எபிக்யூரஸ் தத்துவஞானத்தைப் பற்றி பல்கலைக்கழகப் பட்டத்திற்கு வேண்டிய தமது ஆராய்ச்சியுரையைச் சமர்ப்பித்தார். அந்தக் காலத்தில் தமது கருத்துப் போக்குகளில் மார்க்ஸ்,  ஹெகல் வகைப்பட்ட கருத்துமுதல்வாதியாக இருந்தார். “இடதுசாரி ஹெகலியவாதிகளின்’’ குழுவில் மார்க்சும், பெர்லினில் இருந்தபோது சேர்ந்திருந்தார். ஹெகலுடைய தத்துவஞானத்திலிருந்து நாத்திக முடிவுகளுக்கும், புரட்சிகரமான முடிவுகளுக்கும் வர இந்தக் குழுவினர் முயன்று வந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மார்க்ஸ் பான் நகருக்குச் சென்றார். பேராசிரியராய்ப் பணியாற்றலாம் என்று நினைத்துத்தான் அவர் அங்குச் சென்றார். ஆனால், ஜெர்மன் அரசாங்கத்தின் பிற்போக்கான கொள்கையின் காரணமாக, மார்க்ஸ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றலாம் என்ற கருத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல்வாதக் கருத்துக்கள் ஜெர்மனியில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. குறிப்பாக, 1836ம் ஆண்டுக்குப் பின் லுட்விக் ஃபாயர்பாஹ் இறையியலை விமர்சிக்கவும், பொருள்முதல்வாதத்தின் பக்கம் திரும்பவும் தொடங்கினார்.

1841ல் அவரிடம் பொருள்முதல்வாதம் மேலோங்கி விட்டது. எதிர்காலத் தத்துவஞானத்தின் கோட்பாடுகள் என்று தலைப்பிட்ட அவருடைய நூல் 1843ல் வெளியாயிற்று. இந்த நூல்களைப் பற்றி ஏங் கெல்ஸ் பின்னால் எழுதும் போது, “இவை தளை அறுத்து விடுவிப்பனவாய் இருந்ததை அவரவர் தாமே அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்” என்று எழுதினார். “நாங்கள் எல்லோரும் (அதாவது, மார்க்ஸ் உள்ளிட்ட இடதுசாரி ஹெகல்வாதிகள்) உடனே ஃபாயர்பாஹ்வாதிகளானோம்” என்கிறார் ஏங்கெல்ஸ்.

அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகலியவாதிகளுடன் சில விஷயங்களில் நெருங்கியிருந்த தீவிரவாத ரைனிஷ் முதலாளித்துவ வர்க்கத்தினர் (பூர்ஷ்வாக்கள்) கொலோன் நகரில் ஓர் எதிர்க்கட்சி “ரைனிஷ்’’ பத்திரிகையை நிறுவினர். அதில் முக்கிய விஷயதானம் அளிப்பவர்களாக இருக்கும்படி மார்க்சும், புரூனோ பௌவரும் அழைக்கப்பட்டார்கள். 1842 அக்டோபர் மாதத்தில் மார்க்ஸ் அதன் தலைமை ஆசிரியராகி பான் நகரிலிருந்து கொலோன் நகருக்குப் போனார்.

மார்க்ஸ் ஆசிரியராய் இருந்த போது அந்தப் பத்திரிகையின் புரட்சிகரமான -ஜனநாயகப் போக்கு மேலும் வெளிப்படையாயிற்று. அரசாங்கம் அந்தப் பத்திரிகையை இரட்டைத் தணிக்கைக்கும், மும்முறைத் தணிக்கைக்கும் முதலில் உட்படுத்தி, பிறகு 1843 ஜனவரி 1ம் தேதியன்று அதை அடியோடு தடை செய்து விடுவதென்று முடிவு செய்தது. அந்தத் தேதிக்கு முன்பே மார்க்ஸ் தமது ஆசிரியர் பதவியை விட்டு விலக வேண்டியதாயிற்று.

1843ம் ஆண்டில் கிரைட்ஸ்நாக் நகரில் ஜென்னியை  மார்க்ஸ் மணம் புரிந்தார். குழந்தை பருவ காலத்திலிருந்தே இருவரும் நணபர்களாக இருந்தனர்.

1843 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பாரிஸ் நகருக்குச் சென்றார். அர்னோல்டு ரூகே என்பவருடன் சேர்ந்து தீவிரப் போக்குள்ள ஒரு சஞ்சிகையை வெளிநாட்டில் வெளியிடுவதற்காகத்தான் மார்க்ஸ் பாரிசுக்குப் போனார். அந்த ஜெர்மன்-பிரெஞ்சு சஞ்சிகையின் முதல் இதழ் மட்டும்தான் வெளியாயிற்று.

ஜெர்மனியில் இரகசியமாக அந்தச் சஞ்சிகையை வினியோகம் செய்வதிலிருந்த காரணமாகவும், ரூகேயுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாகவும் அந்தச் சஞ்சிகை நிறுத்தப்பட்டது. அதில் மார்க்ஸ் வரைந்த கட்டுரைகள் அவர் ஏற்கனவே ஒரு புரட்சியாளராக இருந்தார் என்பதைக் காட்டின.

“போராட்டம் மூலம் விமர்சனம்” செய்ய வேண்டும், “நடப்பில் இருந்து வருகிற எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்ய வேண்டும்” என்று அவர் வாதிட்டார்; பாட்டாளி வர்க்கத்துக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

1844 செப்டம்பர் மாதத்தில் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பாரிசுக்கு வந்தார். அன்றிலிருந்து அவர் மார்க்சின் உயிருக்குயிரான நண்பரானார். பாரிசில் இருந்த புரட்சிகரக் குழுக்களின் கொந்தளிப்பான அன்றைய வாழ்வில் இருவரும் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டார்கள். அந்நாளில் புரூதோனின் போதனை சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது; 1847ல் வெளிவந்த “மெய்யறிவின் வறுமை” என்ற தமது நூலிலே மார்க்ஸ் இதைத் தகர்த்தெறிந்தார்.  

குட்டி முதலாளித்துவ சோஷலிசத்தின் பல்வேறு போதனைகளைத் தீவிரமாக எதிர்த்துப் போர் புரிந்தபடியே அவர்கள் புரட்சிகரமான பாட்டாளி வர்க்க சோஷலிசத்தின் அல்லது கம்யூனிசத்தின் (மார்க்சியத்தின்) தத்துவத்தையும் போர்த்தந்திரங்களையும் உருவாக்கினார்கள். பிரஷ்ய அரசாங்கத்தின் விடாப்பிடியான கோரிக்கையின் பேரில் மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ல் பாரிஸ் நகரிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பிரஸ்ஸெல்ஸ் நகரம் போய்ச் சேர்ந்தார்.

1847 வசந்த காலத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் “கம்யூனிஸ்ட் லீக்” என்ற இரகசியமான பிரச்சார சங்கத்தில் சேர்ந்தார்கள். லண்டன் மாநகரில் 1847 நவம்பர் மாதத்தில் நடந்த அச்சங்கத்தின் இரண்டாம் பேராயத்தில் இருவரும் மிக முக்கியமான பங்கு கொண்டு, அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் புகழ்பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை எழுதி முடித்தனர். அது 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியாயிற்று.

இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும், பெருந்திறமையுடனும் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விவரிக்கிறது; சமுதாய வாழ்வுத் துறையை அணைத்து நிற்கும் முரணற்ற பொருள்முதல் வாதம், வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமையான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, புரட்சிகரமான பாத்திரத்தைப் பற்றியும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலகக் கண்ணோட்டத்தில் அடங்கும்.

1848 பிப்ரவரி புரட்சி மூண்ட போது மார்க்ஸ் பெல்ஜியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பாரிசுக்குத் திரும்பி வந்து, மார்ச் மாதப் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து ஜெர்மனியின் கொலோன் நகருக்குப் போனார். அங்கே 1848 ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து 1849 மே 19ஆம் தேதிவரை ‘‘புதிய ரைனிஷ் பத்திரிகை” என்ற பத்திரிகை வெளியாகியது. மார்க்ஸ்தான் அதன் தலைமை ஆசிரியர்.

1848-49ஆம் ஆண்டுகளில் நடந்த புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு இப்புதிய தத்துவத்தை மிகச் சிறந்த முறையில் நிரூபித்து உறுதிப்படுத்தியது. அது போல் அக்காலம் முதல் உலக நாடுகளனைத்திலும் நிகழ்ந்த பாட்டாளி வர்க்க, ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் அதை மெய்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளன. வெற்றி பெற்ற எதிர்ப்புரட்சியாளர்கள் முதலில் மார்க்ஸ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தூண்டிவிட்டார்கள். பிறகு அவர் ஜெர்மனியிலிருந்து 1849 மே 16ம் தேதியன்று நாடுகடத்தப்பட்டார். மார்க்ஸ் முதலில் பாரிசுக்குச் சென்றார். அங்கே 1849 ஜூன் 13ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் மீண்டும் நாடுகடத்தப்பட்டார். பிறகு அவர் லண்டன் நகருக்கு வந்தார். மறைவெய்தும் நாள்வரை அவர் லண்டனிலேயே வாழ்ந்து வந்தார்.

அரசியலுக்காக நாடுகடத்தப்பட்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடுமையானது. 1913ல் வெளியான மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்து இதைத் தெளிவாகக் காட்டுகிறது. மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் சிக்கித் துன்பப்பட்டார்கள். ஏங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, ஒருவேளை அவர் வறுமையால் மடிந்திருப்பார். மேலும் குட்டி முதலாளித்துவப் போக்குடைய சோசலிசத்தின், பொதுவாகவே பாட்டாளி வர்க்கச் சார்பற்ற சோஷலிசத்தின் போதனைகளும், தத்துவப் போக்குகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலைமையில் மார்க்ஸ் ஓர் இடையறாத, ஈவிரக்கமற்ற போரை நடத்திக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்; சில சமயங்களில் தமக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான, வெறித்தனமான தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும் அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. அரசியலுக்காக நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் வட்டாரங்களிலிருந்து ஒதுங்கி இருந்து கொண்டு மார்க்ஸ் தமது பொருள்முதல்வாதத் தத்துவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களில் விவரித்தார்; அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவதில் முதன்மையாகத் தமது முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இந்த விஞ்ஞானத்தை மார்க்ஸ் புரட்சிகரமானதாக்கினார். அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்குச் செலுத்தும் ஒரு பங்களிப்பு (1859) என்ற நூல் வாயிலாகவும், மூலதனம் (முதல் தொகுதி, 1867) என்ற நூல் வாயிலாகவும் இதைச் செய்தார்.

1850-60 வருடங்களின் இறுதிக் கட்டமும் 1860-70க்கும் இடைப்பட்ட காலகட்டமும் ஜனநாயக இயக்கங்கள் புத்தெழுச்சி பெற்ற ஆண்டுகளாகும். அவை மார்க்சை மறுபடியும் நடைமுறை இயக்க வேலைகளில் ஈடுபடும்படி செய்தன.

1864ல் செப்டம்பர் 28ம் தேதி லண்டன் நகரில் “சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு” (இதுதான் முதலாவது அகிலம் என்று பரவலாக அறியப்பட்ட அமைப்பு) மார்க்ஸ் இச்சங்கத்தின் இதயமாகவும், ஆன்மாவாகவும் விளங்கினார். அதன் முதல் அறிக்கையையும் எண்ணற்ற தீர்மானங்களையும், பிரகடனங்களையும், கொள்கையறிக்கைகளையும் அவர்தான் வரைந்தார். பல்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியும், பாட்டாளி வர்க்க ரீதியில் அமையாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களைக் கூட்டு நடவடிக்கைப் பாதையில் செயல்வழிப்படுத்த முயற்சித்தும், இந்தப் பிரிவுகள், போக்குகள் ஆகிய யாவற்றின் தத்துவங்களை எதிர்த்துப் போராடியும், பல்வேறு நாடுகளிலும் உள்ள பாட்டாளி வர்க்க போராட்டத்திற்குரிய ஒரே மாதிரியான போர்த்தந்திரங்களை மார்க்ஸ் உருவாக்கினார்.

பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியுற்றதை (1871) அடுத்தும் -இக்கம்யூனைப் பற்றி மார்க்ஸ் 1871ல் வெளிவந்த பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் ஆழமாகவும், தெட்டத் தெளிவாகவும், ஒப்பற்றவகையிலும், பயன்மிக்கதான புரட்சிகரப் பகுத்தாராய்வை அளித்தார். பக்கூனின் முதலாவது அகிலத்தைப் பிளவுபடுத்தியதை அடுத்தும் இச்சங்கம் ஐரோப்பாவில் இருப்பது சாத்தியமில்லாமற்போயிற்று.

1872ல் ஹேக் நகரில் நடந்த அதன் காங்கிரசுக்குப் பிறகு மார்க்ஸ் அதன் பொதுக் குழுவை நியூயார்க் நகருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். முதலாவது அகிலம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை நிறைவேற்றிவிட்டது. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கம் அளவிடற்கரிய முறையில் மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கான காலப்பகுதிக்கு அது வழிகோலிவிட்டது. இந்தக் காலப்பகுதி உண்மையிலேயே தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வளர்ந்த காலப்பகுதியாகும்; தனித்தனி தேசிய அரசுப் பகுதிகளில் திரளான சோஷலிச தொழிலாளர் கட்சிகள் நிறுவப்பட்ட காலப்பகுதியாகும்.

அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய கடுமையான பணியும், அதைவிடக் கடுமையாக அவர் தத்துவத் துறையில் ஆற்றிய பணிகளும் அவருடைய உடல்நிலையை அடியோடு பலவீனப் படுத்திவிட்டன. அவர் அரசியல் பொருளாதாரத்துக்குப் புத்துரு அளித்திடும் பணியையும், மூலதனம் நூலை எழுதி முடிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவற்றுக்காக ஏராளமான புதிய விவரங்களைச் சேகரித்தார். பல மொழிகளைப் பயின்று வந்தார். ஆனால், அவரது மோசமான உடல்நிலை மூலதனம் நூலை முழுமை செய்ய முடியாதபடி தடுத்துவிட்டது. எனினும் ஏங்கல்சின் முயற்சியால் அவை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

1881ம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று அவருடைய மனைவியார் காலமானார். 1883 மார்ச் 14ஆம் தேதியன்று நாற்காலியில் சாய்ந்தவாறே  மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். லண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அவர் தம் மனைவியின் கல்லறைக்கருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மார்க்ஸ் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டாலும், அவரது தத்துவம் வர்க்கப் போராட்டத்தின் மூலம்  உலகை மாற்றி அமைப்பதற்கான பேராயுதமாகத் திகழ்ந்து வருகிறது.  

நன்றி: சரவணன் வீரைய்யா

தொடர்புக்கு: 9488752879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button