வரலாறு

சேலம் சீலநாயக்கன்பட்டி தோல்சாப் போராட்டம்

ப.பரமசிவம்

சேலம் மாநகரத்திற்கு ஒட்டிய பகுதி சீலநாயக்கன்பட்டி கிராமம். காட்டூர், கரட்டூர், நாட்டாமங்கலம், கொண்டலாம்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நாளிக்கல்பட்டி, கொழிஞ்சிபட்டி, வெடிகாரந்தெரு, சந்தயூர், மல்லூர் இந்த கிராமங்களில் அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் இருந்தன.

இந்தக் கிளைகளை ஒன்றுபடுத்தி சீலநாயக்கன்பட்டி பிரதேச கமிட்டியாகச் செயல்பட்டது. இப்போது சீலநாயக்கன்பட்டி சேலம் மாநகராட்சிக்குள் வந்துவிட்டது. மீதி கிராமங்களை ஒன்றிணைத்து பனமரத்துப்பட்டி ஒன்றியக் குழுவாகச் செயல்படுகிறது.

1960-க்கு முன்னாள் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் தோல்சாப் ஒன்று செயல்பட்டது. காரைக்குடியைச் சார்ந்த நாகப்ப செட்டியார் நடத்தி வந்தார். அவர் தமிழ்நாட்டில் பெரிய தொழிலதிபர்.

அந்தத் தோல்சாப் மன்னர்கள் காலத்து கோட்டையைப் போல் ஒழுங்குபடுத்தபட்ட கருங்கல்லில் கட்டப்பட்டிருந்தது. அந்தத் தோல்சாப்பைப் பார்த்து அன்றைய மக்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். இந்தக் கோட்டையைக் கட்டிய முதலாளி பொண்டாட்டி, ஒரு முறை இந்த தோல்சாப்பை பார்த்துவிட்டு இதென்ன எனது அப்பா வீட்டுக் குதிரைக் கொட்டாய் மாதிரியல்லவா இருக்கு என்று கூறினாராம். அப்ப இந்த முதலாளியினுடைய மாமனார் வீடு எவ்வளவு பெரும் முதலாளியாக இருப்பார் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள்.

மேலும் அந்தத் தோல்சாப்பில் பணிசெய்யத் தெரிந்தவர்கள் சேலத்தில் யாரும் இல்லை, திண்டுக்கல்லில் இருந்துதான் தொழிலாளர்களை இறக்குமதி செய்வார்கள். அந்த பேக்டரியில் 100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தார்கள். அனைவரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். அதில் 50 பேர்கள்தான் நிரந்தரத் தொழிலாளர்கள் 50 பேர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். அவ்வளவு பேரும் அந்தத் தோல்சாப்புக்கு முன்னால் குடிசை போட்டு வாழ்ந்தார்கள். அவர்களோடு சேர்ந்து ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர் ஆர்.பி.அந்தோனி சாமியும் குடும்பத்தோடு குடியிருந்து அந்தத் தொழிலாளர்களைத் திரட்டி கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தவர்.

ஒரு காலகட்டத்தில் உழைத்துக் கொடுக்கும் தொழிலாளர்கள் குடிசையில் வாழவா? உழைப்பை உறிஞ்சும் முதலாளி கோட்டை கட்டி வாழவா? என்று கோஷம் போட்டு போராட்டத்தைத் தொடங்கிக் கடுமையாக ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதமென்று பல போராட்டங்கள் நடத்தினார். அதற்கெல்லாம் தோழர்கள் எஸ்.எம்.ராமையா, கே.செல்வராஜ், சிபிஐ சீலநாயக்கன்பட்டி பிரதேச கமிட்டி தோழர்கள் கே.கே.கருப்பண்ணன், பி.ஆனந்தன் சின்னமுத்து, இ.மாரியப்பன் போன்ற தலைவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அந்தப் போராட்டத்தின் விளைவாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும் தோல்சாப் தொழிற்சாலையைப் போன்றே கருங்கற்களாலே 50 ரூம்கள் கட்டி அந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

15 -ஏக்கர் நிலப்பரப்பில் அந்தத் தோல்சாப் செயல்பட்டது. தோல் ஊறவைக்கும் தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. தோல் ஊரவைக்க உப்பு, ஆவாரம்பட்டை, கடுக்காய் மற்றும் கெமிக்கல் கலந்து தண்ணீரில் ஊறவைப்பார்கள். அதன் பிறகு அதை எடுத்து அதன் மேல் உள்ள மயிர்களைத் தேய்த்து எடுத்து விடுவார்கள். உள்பகுதியில் இருக்கும் ஜவ்வுப் பகுதிகளையும் கத்தியால் சீவி எடுத்துவிடுவார்கள். அதன் பிறகு சட்டத்தில் உள்ள கொக்கியில் தோலை மாட்டிக் காய வைப்பார்கள். அந்தத் தொட்டித் தண்ணீரைத் திறந்துவிட்டு அங்கேயே பெரிய குட்டையில் விட்டு விடுவார்கள். தோலில் இருந்த ஜவ்வுகளைக் குட்டைக்குப் பக்கத்தில் குவித்து வைத்திருப்பார்கள். இந்த ஜவ்வுகளைச் சாப்பிடச் சுற்றுவட்டாரத்தில் 10 கி.மீ தூரத்திலுள்ள கிராமத்துத் தெருநாய்கள் வந்து சாப்பிட்டுச் செல்லும், முதலில் அந்த நாய்கள் கொழு கொழு வென்று இருக்கும். அதன் பிறகு சொறி பிடிக்கும் மயிரெல்லாம் கொட்டிச் சொட்டையாகி பார்க்கவே அருவருப்பாயிடும். பிறகு இறந்தே போய்விடும்.

தோல் ஊரவைத்த தண்ணீர் நிலத்தில் ஊரி அந்தப் பகுதியில் 10 கி.மீ துரத்திற்கு நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. அந்தத் தண்ணீர் குடிக்க முடியாது, வெலக்கெண்ணெய் மாதிரி இருக்கும், தண்ணீரோ இளம்சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது. அந்தத் தண்ணீரில் குளித்தால் மயிர் உதிர்ந்துவிடும், பலவிதமான நோய்களும் வந்து மக்கள் அவதிப்பட்டார்கள்.

அந்தத் தோல்சாப் நிலத்திற்குப் பக்கத்தில் பச்சாயி என்ற குலதெய்வக் கோயில் இருந்தது.
கோயிலைக் கும்பிடும் சீலநாயக்கன்பட்டியைச் சார்ந்த மண்டச்சியூட்டு குடும்பம் பெரிய குடும்பம். அவர்களில் சின்னமுத்து கந்தசாமி, வாமலை, ஆனமுத்து போன்றோர் கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து அந்தத் தோல்சாப்பை மூட வேண்டும் கோரிக்கை வைத்துப் போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தில் எஸ்.எம்.ராமையா, செல்வராஜ், சாமுவேல் வழிகாட்டுதல்படி அந்தப் பகுதி முழுவதுமுள்ள பச்சியம்மன் குலதெய்வக் கோயில் குடும்பம் சீலநாயக்கன்பட்டி பிரதேசக் கமிட்டியைச் சார்ந்த பி.ஆனந்தன், பி.பழனி ஆர்.பி.அந்தோனிசாமி, இ.மாரியப்பன், பி.ராஜீ, கரட்டூர் கிருஷ்ணன் காட்டூர் முதலாளி குடும்பத்தைச் சார்ந்த பழனிசாமி, கந்தசாமி, சண்முகம், கே.பி.கல்யாணசுந்தரம், கே.பி.விஷ்வநாதன் கட்சியைச் சார்ந்த காந்தி, கிரிகட்டி கருப்பண்ணன் திண்ணக்காரமுத்து ராமையன் நகரைச் சேர்ந்த இ.கந்தசாமி, ஆ.நடராஜன், மணி, மாரியப்பன் இவர்களெல்லாம் ஒன்றிணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்படி தோல்சாப்பை அகற்ற ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து மனுகொடுப்பது போன்ற பல வகையான போராட்டங்கள் செய்தும் எதுவும் நடக்கவில்லை. அந்த அளவிற்குத் தோல்சாப் முதலாளி காரைக்குடி நாகப்ப செட்டியார் மத்திய மாநில அரசுகளின் ஆட்சியாளர்களிடம் செல்வாக்குள்ளவர்.

இத்தனை போராட்டங்கள் நடத்தியும் தோல்சாப்பை எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மக்கள் கோபமடைந்து ஒன்று திரண்டு கம்பிவேலி போட்டிருந்த காம்பவுண்ட்டை உடைத்துச் சேதபடுத்தி உள்ளே நுழைந்து தோல் ஊரவைக்கும் தொட்டிகளைச் சேதபடுத்த முற்படுகிற பொழுது காவல்துறை பறக்கும்படை வந்து மக்களை லத்தியால் அடித்து நொறுக்கியது. மக்களுக்கும் போலீசுக்குமான போராக மாறியது. பலபேருக்கு மண்டை உடைந்து கைகால் முறிவு கண்ணில் பட்டவர்களைக் கைது செய்தது மட்டுமல்லாமல் அந்தப் பகுதி கம்யூனிஸ்ட் தோழர்களைத் தேடித் தேடி பிடித்துக் கைது செய்து சிறையில் மாதக் கணக்கில் அடைத்துவிட்டார்கள்.

அந்தக் குடும்பங்கள் சாதாரண ஏழைக் குடும்பங்கள் தினம் வேலைக்குப் போனால்தான் வீட்டு அடுப்பு எரியும். கைது செய்யப்பட்ட குடும்பங்கள் பட்டினியால் வாடியது போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அந்தப் பகுதி முழுதும் சேலம் நகரம் முழுதும் தினமும் உண்டியல் குலுக்கி அதில் வரும் பணத்தைச் சிறையில் உள்ளவர்கள் குடும்பத்தாருக்குக் கொடுத்து பகசியைப் போக்க உதவினார்கள்.

இந்தப் போராட்டம் பற்றி மாநிலக் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டது. மாநிலக் கட்சித் தலைவர்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாராளுமன்ற நமது கட்சி உறுப்பினர்களிடத்தில் கூறி, இந்திராகாந்தி பிரதமராக இருந்த பொழுது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் எஸ்.ஏ.முருகானந்தம் இந்தப் போராட்டம் பற்றியும் அந்தத் தோல்சாப் கழிவுகளால் சுற்றுபுறச் சுகாதாரம் கெட்டு நீர் மற்றும் மண் மாசடைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனால் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்டி அந்தப் பகுதியில் மண், காற்று, நீர் மாசை ஏற்படுத்தி மக்களைப் பல நோய்களுக்குச் சித்தரவதையாக்கி அதன் மூலம் கொள்ளை லாபமடைந்து தோல்சாப் முதலாளி நாகப்ப செட்டியார் தமிழ்நாட்டில் தொழில் நடத்தி அதில் வரும் லாபங்களை நமது நாட்டு வங்கிகளில் இருப்பு வைக்காமல் சுவிஸ் வங்கியில் ரூ.120 கோடி ரூபாயைப் போட்டு வைத்துள்ளார் என்று பேசினார்,

உடனே பிரதமர் இந்திராகாந்தி சுவிஸ் வங்கியில் போட்டுள்ள பணத்தை உடன் உள்நாட்டு வங்கியில் போட வேண்டும் இல்லையேல் அவர் நடத்தும் தொழில்களை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் பிரதமர் அறிவித்தபடி நடக்காததால் சேலம் சீலநாயக்கன்பட்டி தோல்சாப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்ததின் மூலம் தோல்சாப் மூடப்பட்டது.

அந்தப் பகுதி மக்கள் பெருமூச்சு விட்டார்கள். அதனால் அந்தப் பகுதி முழுதும் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியடைந்தது. தற்சமயம் இளைஞர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியாக உள்ளது. காரணம் அந்தப் பகுதியில் கைத்தறியாளர் போராட்டம், பெட்ஷீட் தறி நெசவாளர்கள் போராட்டம், சாயத் தொழிலாளர்கள் போராட்டம், தோல்சாப் போராட்டம் போன்று சுற்றுப்புறச் சுகாதாரத்தையும், நீர் மாசு, நில மாசு ஏற்படாதவாறும் பல போராட்டங்களை நடத்தியதால் அந்தப் பகுதியில் கட்சி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26-வது மாநாடு ஆகஸ்டில் 15, 16, 17, 18 ல் நேரு கலையரங்கில் நடக்கிறது. மாநாடு சிறப்பிக்க அதன் செலவிற்காக அந்தப் பகுதி இளைஞர்களும் மாவட்ட முழுவதுமுள்ள கட்சிக் கிளைகளும் வீடு வீடாக மாநாட்டு நோட்டீஸ் கொடுத்து உண்டியல் வசூல் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுதும் உள்ள கட்சி அணிகள் 26-வது மாநாட்டிற்கு அணி அணியாகத் திரண்டு வர வேண்டுகிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button