உலகக் கோப்பையை வென்று கொடுத்த ‘கோட்டா’ வீரர்

பன்னாட்டு கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஸ் உலகக் கோப்பையை கைப்பற்றியது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பையை வென்று, டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்துள்ளது.
நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்காவில், அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி, அணியில் வெள்ளை இனத்தவர் அல்லாத 6 வீரர்களும் கறுப்பினத்தவர் இருவரும் இடம்பெற வேண்டும்.
இந்த விதியின்படி தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றவர்தான் டெம்பா பவுமா. பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாக செய்லபடக்கூடிய பவுமா, அவர் சிறிது சொதப்பினாலும் திறமை இல்லாதவர், கோட்டாவில் வந்தவர் என்று கேலி செய்து வந்தனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் தீவிரப் பயிற்சி மேற்கொண்ட பவுமா, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக உயர்ந்தார். தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரரும் அவர்தான்.
அதன் பிறகும் பவுமாவின் திறமையை யாரும் அங்கீகரிக்கவில்லை. அணி வீரர்களும் ஒத்துழைப்புத் தரவில்லை. இவற்றைக் கண்டு சோர்வடையாத டெம்பா பவுமா, அணியின் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து தீவிரமாக உழைத்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவிக்கத் தொடங்கியது. பவுமாவுக்கு வீரர்கள் ஆதரவு அளித்தனர். வெளியுலகம் அங்கீகரித்தது.
டெம்பா பவுமாவின் விடாப்பிடியான உழைப்பு, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பையை வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளது. உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அதிலும், இந்திய ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதனைக்கண்ட தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
ஆமா.. இந்திய கிரிக்கெட் அணிக்கும் கோட்டா முறை வருமா?



