கட்டுரைகள்

போரும், போலி தேசபக்தியும்!

த.லெனின்

‘போர் என்பது அரசியலின் வேறு வடிவம்’ என்றார் ஜெர்மன் நாட்டின் புகழ்பெற்ற ராணுவக் கொள்கையாளர் கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்.

அதாவது, போர் என்பது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, இராணுவ பலத்தால் வகைப்படுத்தப்படும் அரசியல் உறவின் ஒரு வழிமுறையாகும் என அவரது புகழ் பெற்ற புத்தகமான ‘ஆன் வார்’ என்பதில் கூறியுள்ளார்.

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்

காஷ்மீர் பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி இந்தியச் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை ஒட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.

சுமார் 5,00,000 இந்திய வீரர்கள் காஷ்மீர் பிரதேசத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த இடம் மூன்று அடுக்குப் பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது. இருந்தும் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது இந்தியப் பாதுகாப்புக் குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை, பிரிவு 370ஐ ரத்து செய்ததிலிருந்து பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், வன்முறைகள் குறைந்துள்ளதாகவும் மோடி அரசு கூறுகிறது. ஆனால், இன்னும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது உண்மை.

பகல்காம் தாக்குதலுக்குப் பின்னர் எல்லையில் தொடர்ந்து 10 நாட்களாக அங்கு துப்பாக்கிச் சூடு அதிகரித்து வந்தது. கடந்த ஏப் 22ம் தேதியில் நடந்த பகல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தொடர்ந்து ஒன்பது நாட்களாக எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வந்தது. கடந்த 10 நாட்களில் இது மிகப்பெரிய மோதலாக உருவாகவில்லை என்றாலும் ஏற்கெனவே 2001, 2003 ஆம் ஆண்டுகளில் போட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியே இத்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்கள், குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ராஜவுரி, மெந்தர், நவ்ஷேரா, சுந்தர்பனி மற்றும் அக்னூர் பகுதிகளில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் தரப்பு இந்திய நிலைகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் உடனடியாகப் பதிலடித் தாக்குதல் கொடுத்தது என்று கூறப்படுகிறது.

பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் பெருமளவு அதிகரித்து வருவதால், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது, அட்டாரி எல்லையை மூடியது, பாகிஸ்தானியர் களுக்கான விசா ரத்து என்பது போன்ற பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிகம் மழை பெய்த காரணத்தால் இந்திய அணைகள் இரண்டு முறை திறக்கப்பட்டு சிந்து நதியில் தண்ணீர் விடப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில், இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று கணித்தது. ஐ.நா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளையும் போர்ப் பதற்றத்தைத் தணிக்குமாறு வலியுறுத்தியுள்ளன.

இருப்பினும், இந்தியா எதிர்பாராத பதிலடிகளைக் கொடுக்கும்‘ என்று அப்போதே பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

எந்நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்கிற பதற்றச் சூழலும் உருவானது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்குள்ளும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தன்னுடைய அதிரடியைக் காட்டியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன என்று இந்தியா அறிவித்தது. கடந்த பத்து நாட்களாக இந்தியா அறிவித்த பிறகும் பயங்கரவாதிகள் முகாம்களிலேயே இருந்திருப்பார்களா? எனக் கேட்டால், நமது தேச பக்தி சோரம் போய்விட்டது என்பார்கள். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகத் தெரிய பட்டியலையும் வெளியிட்டது. ஆனால் இதன் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதாகவே இன்றுவரை உள்ளது.

தேர்தலுக்கான கருவியாகும் போர்

இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை வைத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் தங்களது மதவெறி அரசியலைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மத வன்முறையைத் தூண்டும் வகையில் ஊர்வலம், வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு இந்துவால் நடத்தப்படும் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான ‘கராச்சி’என்ற பெயரில் உள்ள உணவகத்தை பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் அடித்து நொறுக்கியது. அதே போல பஹல்காம் தாக்குதல் நடந்த நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு இசுலாமிய இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள், வணிகர்களை “பாகிஸ்தான் நாட்டின் கைக்கூலி” என முத்திரை குத்தி அரசின் உதவியோடு இந்தக் கும்பல்களால் வெளியேற்றப்பட்டனர்.

குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொருளாக பாஜக பயன்படுத்தி வருகிறது. சவுதியில் இருந்து பயணத்தை ரத்து செய்து வந்த பிரதமரே இந்தத் திருப்பணியைத் துவக்கி வைத்து விட்டார். ஆக இவர்களுக்குப் போர், தேர்தலுக்கான ஒரு கருவியாகவே பார்க்கப்படுகிறது.

வெளியுறவு அதிகாரி மீது விஷமத் தாக்குதல்

போர்ப் பதற்றத்தைத் திறம்படக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிவைத்து, ‘’நீங்கள் எப்படி பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தலாம்” எனச் சமூக வலைத்தளங்களில் ஆபாச அவதூறு பரப்பி விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர் தனது எக்ஸ் தளத்தையும் முடக்கி வைத்து விட்டார். ஒன்றிய பாஜக அரசு எடுக்கும் முடிவை அறிவித்ததற்கே இந்த நிலை என்றால் இவர்கள் நோக்கம் என்ன?

போர் என்பது திரைப்படம் அல்ல

அதேபோல கொண்டாடப்பட வேண்டிய விஷயமும் அல்ல. போர் எவ்வளவு மோசமானது, ஒரு நாட்டிற்கு எவ்வளவு இழப்பை ஏற்படுத்தும் என எனக்கு நன்றாகத் தெரியும். போரால் எண்ணற்ற உயிர்ச் சேதங்கள் ஏற்படும். குழந்தைகள் பெற்றோர்களை இழப்பர். குடும்பங்கள் உணர்வு ரீதியான அதிர்ச்சிகளைப் பல தலைமுறைகளுக்குச் சுமப்பர். ஒரு ராணுவ வீரராக எனக்கு உத்தரவிடப்பட்டால் போரை முன்னெடுப்பேன். ஆனால், அது என் முதல் தேர்வாக இருக்காது, முதல் நடவடிக்கை எப்போதும் பேச்சு வார்த்தைதான்” எனக் கூறி இந்துத்துவா கும்பல்களுக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார் முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே.

மதவெறிக்கு ராணுவத்தை இழுப்பதா?

ஒரு பக்கம் தேச பக்தி பற்றி அனைவருக்கும் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் பாஜகவும், சங்கப் பரிவார் அடிபொடிகளும் இந்த செந்தூர் ராணுவ நடவடிக்கைக்குக் காரணமான கர்னல் சோபியா கொரேஷி குறித்து சர்ச்சை கிளப்பி வருகின்றனர். அவர் பாகிஸ்தானியர்களின் சகோதரி என்றும் பேசி வருகின்றனர். அதாவது, நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா கூறியிருந்தார். கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைத் பயங்கரவாதிகளின் சகோதரி எனச் சித்திரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் பிறகு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா இதற்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

விஸ்வகுரு பிம்பம் உடைந்தது!

விஸ்வகுரு என்று கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் வெற்று அரசியல் பிரச்சாரமே என்பது வெளிப்பட்டு விட்டது. இந்தப் பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் பிரதமர் மோடி பங்கேற்று டொனால்ட் ட்ரம்புக்காகப் பிரசாரம் செய்தார். ஆனால் அது பாதகமாக முடிந்தது. இப்போது இவை எல்லாமே கூனிக் குறுக வைத்து விட்டது. எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பிறகு இப்போது அமெரிக்காவை மிஞ்சுவது போல மோடி பேசி இருக்கிறார். போரை நிறுத்தவில்லை என்றால் இரண்டு நாடுகள் மீதும் வரி விதிப்புக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவேன் என்றார் ட்ரம்ப். அதற்குப் பதிலளிக்கும் முகமாக மோடி பயங்கரவாதத்தையும், வரிவிதிப்பையும் ஒன்றாகக் கருத முடியாது என்று ஓரம் சாரமாக பேசியிருக்கிறார். இந்தியாவில் பலரும் இதைக் கேள்விக்கு உள்ளாக்கிய போதுதான் இப்போது மூன்றாவது நாடு இந்த பேச்சுவார்த்தையில் இருக்க வேண்டியதில்லை என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலைப் பயன்படுத்தி அதனை சர்வதேசச் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு போர் என்றதால், இப்படி பிரச்சினையாகிவிட்டது. இரண்டு நாடுகளுமே அணுஆயுத நாடுகள். உணர்ச்சிவயப்பட்டால் அழிவு இருவருக்கும்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஊடகங்களில் ..

நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு எல்லையில் தாக்குதல் தொடர்ந்ததாக தகவல்கள் வந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை ஒப்புகொண்டதாக கூறி, இது அமெரிக்காவின் மத்தியஸ்தால் நடந்தது எனக் கூறினார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை உறுதிப்படுத்தினர். ஆனால் பாகிஸ்தான் மட்டுமே அமெரிக்காவின் பங்கை ஒப்புக்கொண்டது என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டன் ஊடகங்களின் கருத்து என்ன?

கடந்த 2016 – 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான மோதல்கள் காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த முறை இரு நாடுகளுக்கும் இடையே மோதல் மிகவும் கடுமையானதாக இருந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் டிரோன்களை ஏவியும், விமானத் தளங்களைக் குறிவைத்தும் சண்டையிட்டன என்கிறது பைனான்சியல் டைம்ஸ்.

அரபு ஊடகங்கள் கூறியது என்ன?

நான்கு நாட்கள் ஆளில்லா விமானம், ஏவுகணைகள் மற்றும் ஜெட் போர் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுக்குமான மோதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். எல்லையில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருந்தாலும், சண்டை நிறுத்தத்தை அறிவித்தது டொனால்ட் டிரம்ப் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது என அரபு நியூஸ்.காம் குறிப்பிட்டுள்ளது.

வங்கதேச ஊடகத்தில் வந்த செய்தி

சண்டை நிறுத்த புரிதல் மேற்கொள்ளப்பட்டதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடைக்கால அரசின் வங்கதேசத் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் பாராட்டுகளைத் தெரிவித்தார் என்று டெய்லி ஸ்டார் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டதற்காக டொனால்ட் டிரம்பிற்கு முகமது யூனுஸ் நன்றி தெரிவித்தார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள ஊடகங்களில் வந்த செய்தி

தெற்காசிய மையத்தின் அட்லாண்டிக் கவுன்சிலின் உறுப்பினர் ஷுஜா நவாஸ், எதிர்வரும் நாட்களில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்று கூறுகிறார். அப்போது, இரு நாட்டு அரசாங்கங்களும், இந்தச் சண்டையில் தாங்கள் சாதித்தவை குறித்து பெருமைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனப் போர் விமானங்கள்

சீனாவின் அதிநவீன ஜே -10 சி மற்றும் ஜேஎஃப் -17 தண்டர் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஜே -10 சி சீன நிறுவனமான செங்டு ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷனால் தயாரிக்கப்படுகிறது. ஜேஎஃப் -17 தண்டர் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்து இந்த நிறுவனங்களின் உலக பங்குச் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. உலக அளவில் வெளியிடப்பட்ட முதல் 10 உயர் ரக போர் விமானங்களில் இந்த வகை அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது, ஏழாவது இடத்தில் இருப்பது என்பதும் கவனிக்கத்தக்கது.

பொய்த்துப் போன ரஃபேல்

இந்திய, பாகிஸ்தான் போரின் போது சர்வதேச ஊடகத்தினர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் பலரும் இந்தியாவின் ரபேல் உள்ளிட்ட பல போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்திய சீன J- 17, J – 10 ஆகிய போர் விமானங்கள் அழித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்திய விமானப் படையோ இதனை மறுக்கவில்லை. பாகிஸ்தான் சீன விமானங்களுக்குக் கொடுத்த தொகையை விட நான்கு மடங்கு அதிக விலை கொடுத்து ரபேலை இந்தியா வாங்கியுள்ளது எனில் இந்த ஒப்பந்தத்திற்காக மிகவும் பாடுபட்ட மோடி ஆட்சி இதற்காகப் பொறுப்பேற்க வேண்டும். அதில் நடைபெற்ற ஊழல் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button