அறிக்கைகள்

கோவை கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சிபிஐ வேண்டுகோள்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் வைத்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் தனியார் விடுதியில் தங்கி, உயர்கல்வி பயின்று வரும் 21 வயது கல்லூரி மாணவி, 02.11.2025 அன்று இரவு கோவை விமான நியைத்திற்கு பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளர் என்ற செய்தி பேரதிர்ச்சி தருகிறது.

பிருந்தாவன் நகர் பகுதியில் தனது ஆண் நண்பருடன் காருக்கு உள்ளே பேசிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அங்கு ஆயுதங்களுடன் வந்து, காரை உடைத்து, ஆண் நண்பரை சரமாரியாக வெட்டி விட்டு, மாணவியை கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் தாக்குதல் நடத்தி, மூர்ச்சடைந்த நிலையில், உடலை போட்டுவிட்டு தப்பித்துள்ளனர். இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட கொடுங்குற்றக் கும்பலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கொடுங்காயத்துடன் மாணவியின் ஆண் நண்பர் உயிர் ஊசலாடிய நிலையில் காவல்துறையின் அவசரப் பிரிவுக்கு பேசி, காவல்துறையின் உதவியுடன் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து காவல் துறையினர் தேடியதில் அதிகாலை 4 மணிக்கு, கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தால், கோவை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகள் பரவி வருகிறது.

காவல் துறையினர் குற்றாவளிகளை கண்டறிந்து, கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைத்து, தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும் விமான நிலையத்தின் பின்புறம் போதை பொருள் விற்பனை தாராளமாக நடப்பதாக தொடர்ந்து எழுந்து வருவதை காவல்துறை கருத்தில் கொண்டு காலத்தில் தீவிர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

உடனடியாக மாணவிக்கும், அவரது ஆண் நண்பருக்கும் தேவையான மருத்துவச் சிகிச்சைகள், மனநல மருத்துவம் உட்பட உயர் சிகிச்சை தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் ஏற்படும் சிகிச்சை செலவுகள் முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.

தனியார் விடுதிகளின் பாதுகாப்பை சரிபார்த்து, குறைபாடுகள் உள்ள விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button