வரலாறு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட முதல் செயலாளர்

ப.பரமசிவம்

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட முதல் செயலாளர் கே.செல்வராஜ் அவர்களின் போராட்ட வரலாறு.

தோழர்.கே.செல்வராஜ் சேலத்தின் ஒன்றுபட்ட மாவட்டமான நாமக்கல் ஒடுவம்பட்டியில் 30.08.1916-ல் கண்ணையா நாயுடு நாமகிரி அம்மாளுக்கு செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் 16 பேர்களில் இவர்தான் மூத்த மகன். இவரது குடும்பம் தேசபக்திமிக்க குடும்பமாகும்.

பள்ளியில் மாணவப் பருவத்தில் ஏற்காட்டில் மான்போர்டு மெட்ரிகுலேசன் படித்தவர் 14 வயதில் AMIE என்கிற மெக்கானிக்கல் என்ஜினீரிங் பட்டப்படிப்பைப் படிக்க பம்பாய் சென்றார். அங்கு திலகரின் தீவிரவாதப் போராட்டங்களையும், காந்தியை வார்தா சென்று சந்தித்ததிலும் டாக்டர் அம்பேத்கர். டாக்டர் ஜின்னா போன்றோரின் உறையைக் கேட்டும், பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்டதிலும் புத்துணர்வு பெற்றார்.

பின்னர் மின் பொறிஞர் (AMIE) பட்டபடிப்பை முடித்து பாபநாசத்தில் இளநிலைப் பொறியாளராகப் பொறுப்பேற்றுப் பணியில் சேர்ந்தார். இவர் பணி காலத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்கு மலை முகடுகளில் சாலை போடவும் மின் கம்பங்கள் இணைக்கவும் இரவு பகலாகப் பணியாற்றியதில் அங்கிருந்த விவசாயிகள் கொசுக்களுக்குப் பலியாகி வயிறு வீங்கியும் யானைக் கால் நோயிற்கு ஆட்பட்டும் பலியாவதைக் கண்ட இவர் அவர்களுக்காகப் போராடியதின் விளைவாய் வெள்ளை துரை அதிகாரிகளால் வேலை நீக்கப்பட்டார்.

அதன் பிறகு விக்ரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஹார்வி மில் தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்து அவர்களைத் திரட்டிப் போராடத் தொடங்கியுள்ளார். அங்கும் ஆலை அதிபர்கள் இவரை பிடிவாரண்டுடன் கைது செய்ய முயன்றதில் தலைமறைவாகிவிட்டார்.

இவர் நெல்லையில் தலைமறைவாக வாழ்ந்த போது கேரளம் புன்னப்புரா வயலாறு போராட்ட வீரரும் சிறந்த மார்க்சிய அறிஞருமான ராமச்சந்திர நெடுங்காடி என்பவரைச் சந்தித்துள்ளார். அவரிடம் மார்க்சியக் கல்வி பயின்றுள்ளார். அந்நேரத்தில் தேடிக் கொண்டிருந்த சி.ஐ.டி. பாண்டியனிடம் அகபட்டுக் கொண்டார். 8 மாதம் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இவரோடு சிறையிலிருந்த காங்சிரசார் பலரை கம்யூனிஸ்ட் ஆக்கியுள்ளார். குறிப்பிடத்தக்கவர்கள் அனந்தகிருஷ்ணன் தூக்கு மேடை மீனாட்சிநாதன், நல்லசிவம் ஆகியோர்கள் விடுதலையான பின் சென்னையில் பி.ராமமூர்த்தி சீனிவாசராவ், ஜீவா, ஏஎஸ்கே ஆகிய தலைவர்களைச் சந்தித்து 1939-60 கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார்கள். அதன் பிறகு சேலம் வந்திருக்கிறார்.

சேலதிற்கு வந்ததும் சாதாரண சொந்தமாக நெசவுநெய்யும் நெசவாளர்கள் நூல் கிடைக்காமல் திண்டாடுவதைக் கண்டார். வேலை இல்லை சாப்பிட உணவில்லை இனி சாவதைத் தவிர வேறு வழி இல்லை என அறிந்த கைத்தறியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளிமாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினர். இதைக் கண்ட தோழர் கே.செல்வராஜ் நெசவாளர்களை ஒன்று திரட்டினார். கூட்டுறவுச் சங்கங்களை அமைத்து ரேஷன் முறையை அமல்படுத்து என கோஷமிடத் தொடங்கினார்.

1940-ல், 41- கைத்தறியாளர்களுக்கும் போலீசுக்கும் பலநாள் மோதல் ஏற்பட்டது. இறுதியில் நெசவாளர் சங்கம் அமைத்து ரேஷன் முறையும் அமல்படுத்தச் செய்ய வைத்தார். உடன் இருந்து செயல்பட்டவர்கள் சேலம் குகை தோழர் கே.எஸ்.உத்தமலிங்கம், கதிர்ராசு, கருங்கல்பட்டி ராமதாஸ், தாதகாபட்டி பெருமாள் முத்து ராமசாமி, அம்மாபேட்டை வி.வடிவேல்.

அடுத்து மில் தொழிலாளர்களின் அவலநிலையைப் பார்த்து அத்த கூலிகளாக இருப்பதைக் கவனித்த தோழர் கே.எஸ்.சேலம் ஜவஹாமில் ராஜேந்திராமில் புள்ளிகார்மில் மேட்டூர்ப் பகுதிக்குச் சென்று சங்க அமைப்பை ஏற்படுத்திச் சம்பள உயர்வு கோரி 80 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. இதன் விளைவாக தமிழக முழுதும் போராட்டம் வெடித்தது. அன்றைய நீதிபதி வெங்கட்ராமையா ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.26 பஞ்சபடியும் 26.ரூ சம்பளமும் ஆக மொத்தம் ரூ.52/- வழங்க வேண்டுமென்று தீர்ப்பு வழங்கினார். இது பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இவருக்குத் துணைபுரிந்தவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பக்ரூதின், சுப்புரூ மாரப்பக் கவுண்டர் ஆகியோர்.

அந்தக் காலகட்டத்தில் சேலத்தில் சுண்ணாம்பு கரடு என அழைக்கப்பட்ட சுரங்க ஆலைகள் (மேக்னசைட்) இரண்டு செயல்பட்டன. 40 கிராமங்களைச் சார்ந்த வி.ச கூலித் தொழிலாளிகள் பல்லாயிரக்கணக்கில் ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அனைவரும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக நடத்தப்பட்டனர். ஆணுக்கு 3 அணா முதல் 5 அணா வரை பெண்களுக்கு 2 அணா முதல் 3 அணா வரை கொடுத்து வந்தார்கள். தினக்கூலி இவர்களை மறைமுகமாகச் சந்தித்து சங்கம் அமைத்தார். போராட்டத்தில் இறக்கினார். ஆத்திரமடைந்த ஆங்கில அதிகாரி ஹாராப்கின்ஸ் செல்வராஜைப் பார்த்துத் துப்பாக்கியால் சுட ஒரு குண்டு அவரது கீழ்த் தாடையைத் துளைத்துச் சென்றது. பின்னர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு எஸ்.எம்.ராமையா, எம்.கல்யாண சுந்தரம் வழிநடத்தினர்.

நிலமீட்புப் போராட்டம்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் பஞ்சத்தால் பலநூறு உழவர்கள் தங்கள் நிலங்களை அடமானம் வைத்தும் வட்டிக்குப் பணம் பெற்றும் அதனைத் திருப்ப முடியாமல் பெரிதும் அவதிபட்டனர். சுமார் 2100 ஏக்கர் நிலங்களைப் பறிகொடுத்த விவசாயிகள் அதனை அபகரித்த சேலத்து செட்டியார்களையும் துணை நின்ற காவலர்களையும் எதிர்க்கத் துணிந்தனர். -தோழர் அர்த்தனாரி வாத்தியார் துணையோடு தோழர் கே.எஸ் வழிகாட்டுதலின் பேரில் அங்குள்ள இளைஞர் விவசாயிகளுக்குக் கவண்கல் எறியும் பயிற்சி கொடுத்து எதிரிகளைத் தாக்கத் தயாராக்கினர்.

1948 ஜீலை 15-ந் தேதி திடீரென போலீசார் விவசாயிகளைத் தாக்கி நிலத்திலிருந்து வெளியேற்ற முன்னேறுகையில் பயிற்சி பெற்ற 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கவண் கற்களால் தாக்கத் தயாராகினர்.

குருசேத்திர போராக மாறிய சோரகை பூமி யுத்த பூமியாக மாறியது. கவண்கல் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போலீஸ் பட்டாளம் பின் வாங்கியது. பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காவலரின் துப்பாக்கி தோழர் கே.செல்வராஜுக்குக் குறிவைக்க அவரைக் காப்பாற்ற முனைந்த தோழர் சோரகை பெருமாள் அதனைத் தாங்கி தன் உயிரை ஈந்தார். நீண்ட சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நிலம் பிரித்தளிக்கப்பட்டது. அதில் ஒருபங்காக கே.செல்வராஜுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் தன் உயிர் காத்த பெருமாள் குடும்பத்திற்கே கொடுத்துவிட்டார்.

சேலம் சதிவழக்கு

ஏற்கெனவே நெல்லை சதி வழக்கைச் சந்தித்த செல்வராஜுக்கு மீண்டும் சோதனை 1949-ல் தொட்டம்பட்டி கல்லாவி (தர்மபுரி) ரயில் நிலையத்திற்கு இடையே சரக்கு ரயில் கவிழ்க்கப்பட்டது. இதைக் கம்யூனிஸ்ட்கள்தான் செய்தார்கள் எனப் பழி சுமத்தி அன்றைய அரசு பி.ராமமூர்த்தி எம்.கல்யாண சுந்தரம் எஸ்.எம்.ராமையா, கே.செல்வராஜ் டாக்டர் தெய்வம் டேப்சடையப்பன் உள்பட 33 பேர்கள் சிறையில் அடைத்தார்கள். பலர் தலைமறைவு. இதில் சிலருக்கு 5 ஆண்டு, சிலருக்கு 7 ஆண்டுகள், சிலருக்கு உச்சபட்சமாக 21 ஆண்டுகள் விதிக்கப்பட்டன. தோழர் கே.செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் விதிக்கப்பட்டது. பின் 1952-ல் அரசியல் சூழ்நிலையில் முதல்வராக இருந்த ராஜாஜி அனைவரையும் விடுதலை செய்துள்ளார்.

கே.செல்வராஜ் சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திர நாட்டிலும் பலதரப்புத் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி இந்தியக் கம்யூனிட்ஸ் கட்சிக்கும் முதல் மாவட்டச் செயலாளராக இருந்து செயல்பட்டனர். பல வீர தியாகிகளால் உருவாக்கப்பட்ட சேலம் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெறுகிறது. அத்துணைபகுதி மக்களும் மாநாடு சிறப்புற நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button