
காசாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்துள்ளது. ஐ.நா மனிதநேய உதவிகளையும் தடுத்து வருகிறது. இதனால் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரால், பாலஸ்தீன மக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் வீடுகளை இழந்தனர். உறவுகளைப் பறிகொடுத்தனர். எஞ்சியவர்கள் உயிர் பிழைக்க காசா எங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
தற்போது போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதிக்கு உணவு, மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் பட்டினிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. பசியால் குழந்தைகள் துடிக்கின்றனர். அதனை காணச் சகிக்காமல் பெற்றோர் கதறுகின்றனர்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பசியையே “ஆயுதமாக்கும்’’ செயல் என ஐ.நா கண்டித்துள்ளது. ஆனால், பசியையும் பட்டினியையும் ஆயுதமாக்கி, பாலஸ்தீனர்களைக் கொன்று அழிப்பதற்கான ‘புதிய போரை’ இஸ்ரேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனர்களின் சாம்பல் மேட்டில், ரியல்எஸ்டேட் தொழில் நடத்த அமெரிக்கக் கழுகு காத்துக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் ஆதரவு பெற்ற ‘காசா மனிதாபிமான அறக்கட்டளை’ (GHF) என்ற அமைப்பு மட்டும் உணவுப் பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய கட்டமைப்போ அனுபவமோ இல்லாத இந்த அமைப்பு, உணவு வாங்கக் குவியும் மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. திரண்டிருந்தவர்களில் ராணுவம் குறிவைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 97 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
ஜி.எச்.எஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்ற ஐ.நா மற்றும் உதவி நிறுவனங்கள் மறுத்து விட்டன. அதன் செயல்பாடுகள் நடுநிலமை இல்லாமலும், மனிதநேய உதவிகளை ராணுவ மயமாக்கும் இஸ்ரேல் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதாக ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.
அதே நேரத்தில், பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்கப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமான அமைப்புகள் முன்வந்தன.
அவர்களின் ஏற்பாட்டில், உணவு மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மட்லின் என்ற கப்பல் ஜுன் 1 அன்று இத்தாலியில் இருந்து புறப்பட்டது. இதில், காலநிலை மாற்றச் செயல்பாட்டாளரான கிரெட்டா துன் பெர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 தன்னார்வலர்கள் பயணித்தனர்.
அந்தக் கப்பலை சர்வதேசக் கடல் எல்லையில் வழிமறித்த இஸ்ரேல் ராணுவம், துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. கப்பலில் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் காசாவிற்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது.
ஐ.நா.வின் நிவாரணப் பொருட்களையும் காசா மக்களுக்குக் கொடுக்க விடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.
கடந்த மே முதல் வாரம், ஹாண்டலா கப்பலில் தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை காசாவிற்கு எடுத்துச் சென்றனர். அந்தக் கப்பல் சர்வதேசக் கடல் எல்லையை நெருங்கும் போதே, இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
ஜூன் முதல் வாரத்தில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தீர்மானத்தை நிராகரித்தது. இப்படி ஐந்தாவது முறையாக அமெரிக்கா நிராகரித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பு நாடுகளும், காசா பேரழிவை எதிர்கொண்டிருப்பதாகவும், உணவு வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான பாலஸ்தீன பிரதிநிதி ரியாத் மொன்சூர், “10 லட்சம் குழந்தைகள் உட்பட 20 லட்சம் அப்பாவி பாலஸ்தீன மக்களைப் பஞ்சத்தின் விளிம்புக்கு இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.
“காசாவில் வாழும் மொத்த மக்களும் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். பூமியில் பசிக் கொடுமை மிகுந்த இடமாக காசா மாறியுள்ளது” என்று ஐ.நா மனிதாபிமான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே வேதனையுடன் கூறியுள்ளார்.
வல்லரசுகளையும் அவற்றின் அரவணைப்பில் இருக்கும் இஸ்ரேல் போன்ற இனவெறி அரசுகளையும் மக்கள் எழுச்சிதான் பணிய வைத்துள்ளது. பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி கட்டமைக்கப்பட வேண்டும்.