மாநில செயலாளர்

சரடு விடுவதில் சளைக்காத மோடி

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

பெஹல்காம் சம்பவம் நடந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. பதில் தாக்குதலும் நடத்தப்பட்டு விட்டது. அந்நாள் முதல் இந்நாள் வரை பஹல்காம் தாக்குதல் குறித்து நாள் தவறாமல் மோடியும் அவரது சகாக்களும் பேசியே வருகின்றனர்.

திரும்பத் திரும்ப இதனைப் பேசி வருபவர்கள் உண்மைகளை மட்டும் பேச மறுக்கின்றனர்.
நாட்டின் மீது தங்களை விடப் பற்றுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது போன்றும் ஆகச் சிறந்த தேச பக்தர்கள் தாங்கள்தான் என்பது போன்றும் ஒரு சித்திரத்தை உருவாக்கிடப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.

பயங்கரவாதிகளின் தாக்குதலை இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை.

ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வலுவாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் வெளிப்படுத்தினர் என்பதனை நிரூபிக்கச் சாட்சியங்கள் தேவையில்லை.

பிகாருக்குச் சென்ற பிரதமர் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பதிலடி இருக்கும் என்றார்.

அத்தகைய பதிலடி கொடுக்கப்பட்டதா? தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பிடிபட்டார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என்ற வினாவிற்கு விடை உண்டா?

எல்லைப் பகுதியில் அவ்வப்போது ஊடுருவல்காரர்கள் தாக்குதல் தொடர்கின்ற நிலையில், பாதுகாப்பு பலப்பட்டிருக்க வேண்டாமா?

ஆகச் சிறந்த உளவுப் பிரிவுகள் என்ன செய்து கொண்டிருந்தன என்ற கேள்விக்கு உங்களின் நேர்மையான பதில் என்ன?

உளவுப் பிரிவின் தோல்விகள் என்று எடுத்துக் கொள்ளலாமா? நமது ராணுவத்தின் எதிர்த் தாக்குதல் குறித்து முன்கூட்டியே பாகிஸ்தான் நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சரும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் மவுனம் சாதித்தது ஏன்?

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எழுப்பிய வினாக்களுக்குப் பதில் அளித்திட வேண்டிய நிர்பந்தங்களுக்கு வெளியுறவு அமைச்சர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பின்னர், பதில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர்தான் பாகிஸ்தானுக்குத் தகவல் தரப்பட்டது என்று கூறுவது ஏன்?

பதில் தாக்குதல் நடத்திய பின்னர் நம் நாடு பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விளக்கமளிப்பாரா?

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல், அணு ஆயுதப் போராக மாறிவிடக் கூடாது என்று நான்தான் போரை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முறை அல்ல திரும்பத் திரும்ப ஒன்பது முறை கூறிவிட்டாரே? அதுதான் உண்மையா?

ட்ரம்ப் கூறுவது உண்மை அல்ல என்றால் நாட்டின் பிரதமர் மோடி இன்றுவரை மறுக்கவில்லையே ஏன்?

வர்த்தகத்தைப் பயன்படுத்திப் போரை நிறுத்தினேன், அதாவது இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்தேன் என்று டிரம்ப் கூறிவருவதும் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தகம் குறித்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன என்று டிரம்ப் தெரிவித்து வருவதும் உண்மையா?

டிரம்பின் மிக நெருங்கிய நண்பரான மோடி இவைகள் குறித்தான உண்மைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது நாட்டின் பிரதமர் என்கிற முறையில் அவரது தலையாய கடமை அல்லவா?

அத்தகைய கடமையை ஆகச் சிறந்த தேசபக்தராக தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொள்ள முயலும், முயன்று வரும் மோடி மூடி மறைக்க முற்படுவது ஏன்?

மோதல்கள் நடந்த பின்னர் இருமுறை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தைக் கூட்ட அமைப்பு விடுத்தது ஒன்றிய அரசு.

இருமுறையும் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை அமைச்சரான மோடி பங்கேற்காமல் பதுங்கியது ஏன்?

இக்கூட்டங்களில் பங்கேற்று நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டியது பிரதமரின் தார்மீகப் பொறுப்பல்லவா?

தனது தார்மீகக் கடமைப் பொறுப்பில் இருந்து தவறியது ஏன்?

அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று, அனைத்துக் கட்சிகளும் நல்லெண்ணத்துடன் விடுத்த வேண்டுகோளைப் புறக்கணித்தது ஏன்?

நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க மறுத்துவிட்டு, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட தூதுக்குழுக்களை அனுப்பிட முடிவு செய்தது ஏன்?

யார் முக்கியம்? நாட்டு மக்களா? அல்லது உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களா?

நாம் நடத்திய எதிர்த் தாக்குதலில் நமது நாட்டு ராணுவத்திற்குச் சேதம் ஏற்பட்டதா? நமது இராணுவ விமானங்கள் சேதமடைந்தனவா? என்ற வினாக்களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் பதிலளிக்க மறுப்பது ஏன்? மறுப்பது மட்டுமல்ல, நமக்கு எந்தச் சேதமும் இல்லை. முழுக்க முழுக்க பாகிஸ்தானுக்கே சேதம். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பில் இருந்து மீள்வதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகின்றார்.

நமது நாட்டிற்கு எவ்வித பாதிப்புமில்லை. நம் நாட்டுக்கு இராணுவத்திற்கு பாதிப்பு இல்லை எனத் திரும்பத் திரும்ப ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டையின் போது போர் விமானங்களை இந்தியா இழந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் புளும்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். யார் சொல்வது உண்மை? எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என ஒன்றிய அரசு கூறுவது உண்மையா? அல்லது முப்படைத் தலைமைத் தளபதி கூறுவது உண்மையா?

இவைகளுக்கு எல்லாம் எங்கே தீர்வு காண்பது?

நாடாளுமன்றம் என்று ஒன்று இருக்கின்றதே, அங்கே விவாதிக்க வேண்டாமா? நடந்த உண்மைகள் எதுவாயினும் அவை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

உண்மைகளை எல்லாம் மூடி மறைத்து விட்டு, பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்வது ஏன்?

விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகள் தலைதூக்கி உள்ளன. மக்கள் துன்பத்தில், துயரத்தில் உள்ளனர். விலைவாசி வியர்வைக் கட்டுப்படுத்தவோ வேலையின்மையைப் போக்கவோ ஒன்றிய அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கவலைப்படத் தயாராக இல்லை.

மக்களின் அப்பழுக்கற்ற தேசபக்த உணர்வை, தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு, தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மோடி அரசு முயல்கின்றது.

பெஹல்காம் பிரச்சனையை முதன்மைப் பிரச்சனையாக்கி, தாங்கள் செய்து வரும் தவறுகளில், குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள, தப்பித்துக் கொள்ள மோடி அரசு முயல்கின்றது.

இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது!

மீண்டும் சந்திப்போம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button