
தலைமுறை கடந்து நம்மோடு புழங்கிக் கொண்டிருக்கும் ஒன்றின் தொடக்கத்தைப் பற்றி நாம் அறிகின்ற போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கும். 1937 ஆம் ஆண்டு தொழிலாளர்களைப் பற்றிப் பேசவும் அவர்களின் பிரச்சனைகளை அரசிடம் கொண்டு செல்லவும் தொழிலாளர் பத்திரிகை வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இலக்கியப் பேராசான் தோழர் ஜீவானந்தம் நினைத்தார்.
நினைப்பு நல்லதாக இருந்தாலும் அதற்கு நிதி ஆதாரம் தேவை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நிதி சேகரிப்பதற்காக கோவை மாவட்ட தோழர்களிடம் சென்று நாள் முழுதும் நிதிகளைச் சேகரித்தார். நாள் முழுவதும் நகர்ந்து பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. பசியாற்றலாமே என்றால் உடன் வந்த தோழர்.
அதற்குக் காசு வேண்டுமே என்றார் தோழர் ஜீவா.
காலையிலிருந்து சேகரித்த நிதிதான் நம்மிடம் இருக்கிறதே அதில் இருந்து பசியாற்றிக் கொள்வோம் என்றார் உடன் வந்த தோழர்.
பத்திரிகைக்காகச் சேகரித்த நிதி இதை நம் பசிக்காகச் செலவிடக் கூடாது என்றார் தோழர் ஜீவா.
பசியோடு ரயில் நிலையத்தில் இருந்தனர். உடன் வந்திருந்த தோழர் இப்படி ஒரு நாணயமான மனிதரோடு நாம் பயணிக்கிறோம் என்று பெருமை கொண்டார். சிறிது நேரம் கழித்து ரயில் நிலையத்திற்கு வந்த மற்றொரு தோழர் நிலைமையை உணர்ந்து, உணவு வாங்கிக் கொடுத்து ஊருக்கு அனுப்பினார்.
சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. எனவே பத்திரிகை நடத்தும் அனுமதி எளிதாகக் கிடைத்து விடும் என்று ஜீவா நினைத்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இருந்தாலும் ஜீவா பத்திரிகை தொடங்கும் வேலையில் பின் வாங்கவில்லை.
அப்போது காகிதத்தின் விலை தோழர் ஜீவாவின் பொருளாதாரத்திற்குச் சாதகமாக இருந்தால் 3 இதழ்களுக்கான காகிதங்கள் வாங்கினார்.
அச்சிடுவதற்கான கூலியும் கையில் இருந்ததால் அச்சகங்களைத் தேடத் தொடங்கினார். பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக பி.எஸ்.பிரஸ் என்கின்ற அச்சகத்தின் உரிமையாளர் பத்திரிகையை அச்சிட்டுத் தருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையில் பத்திரிகை நடத்துவதற்கு மாகாண மாஜிஸ்திரேட் 500 ரூபாய் ஜாமீனாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு மேல் பணத்துக்கு எங்கே போவது என்ற கவலை ஜீவாவைச் சூழ்ந்திருந்தாலும் தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்தார். மீண்டும் தோழர்களிடம் நிதி கேட்டுப் பணத்தைச் சேகரித்தார்.
நீதிமன்றத்தில் செலுத்தி அனுமதி பெற்றார். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு 1937 நவம்பர் 6ஆம் நாள் தமிழர்கள் கரங்களில் தொழிலாளர்களின் பத்திரிகையான ஜனசக்தி தவழ ஆரம்பித்தது. ஜனசக்தி பத்திரிகைக்கு ஜீவா ஆசிரியராகச் செயல்படத் தொடங்கினார். தொழிலாளர்களும் பத்திரிகையை ஆர்வத்தோடு வாங்கிப் படிக்கத் தொடங்கினார்.
தொடக்கக் காலத்தில் பி.ராமமூர்த்தி, முருகேசன், ஏ.எஸ்.கே ஆகியோர் ஜனசக்திக்கு உறுதுணையாக இருந்தனர். இவர்களின் மதியச் சாப்பாடு உணவகத்தில் இருந்து ஒரு எடுப்பு சாப்பாடு வரும். அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.
யாராவது வேலை நிமிர்த்தமாக வெளியே சென்றால் பங்கிடுவது குறைந்து உணவு சற்று கூடுதலாக கிடைக்கும். யாராவது கூடுதலாக வந்துவிட்டால் எண்ணிக்கை கூடி உணவும் குறையும். இப்படியான சிரமங்களை எல்லாம் சந்தித்தனர்.
ஜனசக்தியில் வெளியாகும் கட்டுரைகள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ.
அந்த அளவு ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அச்சகங்களும் கடுமையான மிரட்டல்களைச் சந்திக்க வேண்டி இருந்ததால் பத்திரிகை அச்சிட்டுத் தருவதிலிருந்து ஒதுங்கியது.
வாரப் பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ஜனசக்தி வெளி வருவது உத்தரவாதம் அற்ற நிலை உருவானது.
பத்திரிகை நின்று போவதை விரும்பாத ஜீவா தோழர்களோடு கலந்து ஆலோசித்துச் சொந்தமாக அச்சகத்தை உருவாக்க வேண்டிய நிலையை உணர்த்தி அதற்கான நிதிகளைச் சேகரிக்கும் பணியில் இறங்கினார்.
கிடைத்த நிதியைக் கொண்டு ஜனசக்தி பத்திரிகைக்காகத் தனி அச்சகத்தை உருவாக்க நினைத்தார்.
ஜனசக்தி பத்திரிகைக்காக அச்சக அனுமதி கேட்டால் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் வெள்ளை அரசிடம் இருந்து நிச்சயமாக அனுமதி கிடைக்காது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் உணர்ந்த ஜீவா, ஜீவா பெயரில் ஜனசக்தி அச்சகம், ராமமூர்த்தி பெயரில் சோசலிஸ்ட் அச்சகம், அடையாளம் தெரியாத ஒருவரின் பெயரில் ஜேசு அச்சகம் என மூன்று உரிமங்களை அரசிடம் கேட்டார். ஜேசு அர்ச்சகத்துக்கு உரிமம் கிடைத்தது. ஜேசு அச்சகத்தின் மூலம் 1938 ஏப்ரல் 6 அன்று சோஷலிஸ்ட் வாரப்பத்திரிகை என்ற முத்திரையோடு மீண்டும் ஜனசக்தி வெளிவரத் தொடங்கியது.
வார பத்திரிகையாக இருப்பதைத் தினசரி நாளிதழாகக் கொண்டு வர ஜீவா முயற்சித்தார்.
அப்போது தன் நாடக நண்பர்களான டி.கே. சண்முகம் சகோதரர்கள் நினைவுக்கு வந்தனர்.
திண்டுக்கல்லில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த டி.கே.சண்முகம் சகோதரர்களிடம் சென்று விசயத்தைச் சொன்னார். பாசத்தோடு வரவேற்று ஜனசக்தி பத்திரிகைக்காக ஒரு நாடகத்தை நடத்திக் கேட்ட நிதியைத் தர முயன்றார்கள்.
ஆனால் அன்று அவர்கள் நினைத்தபடி நாடகம் வசூல் ஆகவில்லை. இருந்தாலும் அவர்களிடம் 5000 ரூபாய் கடனாகப் பெற்று சென்னை திரும்பினார்.
அப்போது இந்தியாவில் அந்நிய ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் விரட்டி விரட்டிக் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 5000 ரூபாய் பணத்துடன் சென்னை வந்து இறங்கிய ஜீவாவை உடனடியாகக் கைது செய்தது காவல்துறை. ஜனசக்தியின் தினசரி கனவு அந்த இடத்திலேயே கலைந்தது.
லட்சியப் பயணத்தில் தடைகள் படிக்கட்டுகளாக மாறிவிடும் என்பது காலத்தால் எழுதப்பட்ட வரலாறு. அந்த வரலாறு உண்மை என்பதற்கு உதாரணமாக ஜீவாவின் வழித்தோழர்களால் காகிதத்தில் ஓர் ஆயுதம் என்ற சொல்லாடலோடு தொழிலாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஜனசக்தி பத்திரிகை தவழ்ந்து கொண்டிருக்கிறது.