பெரும்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

பெரும்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமன் (90) நேற்று (04.07.2025) இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையுற்றோம்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில், ஏழ்மை நிறைந்த எளிய குடும்பத்தில் வா.மு.சேதுராமன் 1935-ஆம் ஆண்டு பிறந்தார்.
தமிழ் மொழி மீது கொண்ட பேரார்வத்தால், சுய முயற்சியில் தமிழ் வித்துவான் பயின்று தேறினார். தமிழ் இலக்கியங்களை உள்வாங்கி, வெளிபடுத்தும் இவரது கவித்துவப் படைப்புகள் என்றென்றும் அவரது ஆய்வறிவை போற்றி நிற்கும்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்து வாழ்ந்த மிகச் சிறந்த ஆளுமையை தமிழகம் இழந்து விட்டது.
அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
