அறிக்கைகள்

கள்ளிப்பால் அல்ல கறந்தபால்

இந்து தமிழ் கட்டுரைக்கு ஆவின் ஏஐடியுசி மறுப்பு

தமிழ்நாடு அனைத்து ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஆவின் தொழிலாளர்கள் குறித்து தமிழ் இந்து இதழில் வெளியான கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

‘ஆவின் தந்த கள்ளிப்பால்’ எனும் தலைப்பில் பெருமதிப்புக்குரிய நீதியரசர் கே.சந்துரு அவர்கள் இந்து தமிழ் திசை (03.06.2025) நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களை அலைக்கழித்து காலங்கடத்தி சோர்வடைய வைப்பதற்காக, வேலையளிப்பவர்கள் நீதிமன்றங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற அந்தக் கட்டுரையின் அடிப்படைக் கருத்தில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஆவின் நிர்வாகம் ஒரு அடிமை சாசனத்தை தொழிலாளர்களிடம் எழுதி வாங்கி, ஒப்பந்த தொழிலாளர்களாக்கி வேலை வாங்கியதாகவும், அவர்களுக்கு புதிய தீர்ப்பின் அடிப்படையில் நீதி வழங்கப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தும் கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை அல்ல.

மக்களிடம் செல்வாக்குப்பெற்ற ஒரு நாளிதழில் பதிவாகி விட்டதால், உண்மைகளை விளக்கி பதில் அளிக்க வேண்டியது, ஏஐடியுசி தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற வகையில் எனது கடமையாகிறது.

மதுரையில் நடைபெற்ற பால்வளத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்ட மாதவரம் பால் பண்ணையின் 1,100 தொழிலாளர்களை, சட்ட விதிகளுக்கு விரோதமாக, எம்ஜிஆர் அவர்களின் அஇஅதிமுக அரசு 1980ல் வேலைநீக்கம் செய்தது.

அவர்களுக்கு மறுபடி வேலை தர நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், மேல் முறையீடுகளை செய்து அரசு தொடர்ந்து தடுத்து வந்தது.

கலைஞர் முதலமைச்சராக 1996 இல் பதவி ஏற்ற பிறகு, அன்றைய சட்டப்பேரவை உறுப்பினரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியியைச் சேர்ந்த ஏஐடியுசி தலைவர் திருப்பூர் கே.சுப்பராயன், பால்வள தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

1997ல், பால்வள மானியக் கோரிக்கையின் போது, கே.சுப்பராயன் இந்தப் பிரச்சனையை கடுமையாக வலியுறுத்திய நிலையில், பதிலளிக்க எழுந்த பால்வள அமைச்சர் திரு சுந்தரம் அவர்களை கையசைத்து அமர்த்தி விட்டு, கலைஞர் தானே பேசினார்.

‘’பணித் தொடர்ச்சி இன்றி தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள அரசு உறுதியளிக்கிறது’’ என்று வாக்களித்தார். ஆவின் நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை மீறி அவர் இவ்வாறு ஒரு அரசியல் முடிவு எடுத்தது முக்கியமானதாகும்.

பணி நீக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஏஐடியூசி சங்கத்தின் உறுப்பினர்கள். சங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அந்த தொழிலாளர்கள் தனித்தனியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணிக்கு சேர்வது என்று முடிவெடுக்கப்பட்டது. கலைஞரிடம் மேலும் வலியுறுத்தி அனைத்து உரிமைகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாக அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பணித் தொடர்ச்சியின்றி வேலைக்குச் சேர்க்கப்பட்டிருந்தாலும், அன்றைய முதலமைச்சர் கலைஞரிடம் தொடர்ந்து முறையிட்டதால், பணிக்கு சேர்ந்த 7 மாதத்திலேயே, வேலை நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் பணியாற்றிய வருடங்களோடு சேர்த்து, பணி தொடர்ச்சியோடு அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர்.

பால்வள ஊழியர்களுக்கு, அரசு பணியாளர்களுக்கு உரிய சம்பள விகிதம் பொருந்தும். அதன்படி முழுச் சம்பளத்தை அவர்கள் வேலைக்கு சேர்ந்த ஏழே மாதத்தில் பெறத் தொடங்கினார்கள்.

வேலை நீக்கம் செய்யப்பட்டபோது அவர்கள் பெற்று வந்த மாதச் சம்பளம் 1000 ரூபாயை விடக்குறைவு.

பணியில் சேர்ந்தவர்களில் மூத்த தொழிலாளர்கள், 2010 ஆம் ஆண்டு வாக்கில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றனர். அப்போது அவர்களது மாத சம்பளம் சுமார் 30,000 ரூபாய்.

அவர்களில் மிக இளைய தொழிலாளராக இருந்தவர்கள் 2019ல், 22 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றனர். அப்போது அவர்களது மாத சம்பளம் சுமார் 45 ஆயிரம் ரூபாய்.

நிரந்தரப் பணியாளருக்குரிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றை அவர்கள் பெற்றனர். பால்வளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி அடிப்படையில் அமைந்தது. அது மாதத்துக்கு ரூபாய் 1,000 என்ற அளவிலேயே இருந்தது.

கலைஞர் 2006ல் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, ஆவின் தொழிலாளர்களுக்காக தனி ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என வலியுறுத்தினோம். அன்றைய பால்வளத்துறை அமைச்சர் திரு உ. மதிவாணன் அவர்கள் முன்னிலையில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக வருங்கால வைப்பு நிதி வழங்கும் ஓய்வூதியத்துடன், கூடுதலாக மாதம் ரூபாய் 3,000 வீதம் வழங்கி ஆவின் தனி ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு அந்தத் தொகை மாதம் ரூபாய் 4,500 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தனை உரிமைகளையும், அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதாக சொல்லப்படும் அந்தத் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர் என்ற செய்தி மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு சொல்லப்படாமல் இருந்திருக்கலாம்.

அன்று பணிக்குச் சேர்ந்ததால், வேலையையும் கௌரவமான மாத ஊதியத்தை உறுதி செய்ததோடு, அதன் வழியாக அவர்களுடைய சந்ததியினரையும் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர அவர்களால் முடிந்திருக்கிறது.

இந்த நலன்களைப் பெற்று விட முடியும் என்ற உறுதியோடு அவர்கள் தொழிற்சங்கத்தில் ஒற்றுமையாக இருந்ததும், தொடர்ந்து எடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் உரிய முறையீடுகளும் இதற்குக் காரணமாகும். ‘சாபத்தையும் வரமாக்கிக் கொள்ள’ தொழிலாளர்களின் ஒற்றுமையால் இயலும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஒப்பந்தத்தை அடிமை சாசனமாக கருதி, கையெழுத்திட மறுத்த இரண்டு தொழிலாளர்களுக்கு 45 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி பகுதிக்கு வந்து விட்ட பின்பு அவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடுகிறது.

வழக்குகளை மட்டுமே நம்பியிராமல், தீர்வுக்கான வாய்ப்பு கிடைத்தால், அதனைப் பற்றிக் கொண்டு, மேலும் மேம்பாட்டுக்குத் தொடர்ந்து முயல வேண்டும் என்பது ஒரு தொழிற்சங்க உத்தியாகும்.

ஆவின் நிர்வாகம் கள்ளிப்பால் தர முயன்றாலும், அதனைக் கறந்த பால் ஆக்கிகொள்ள, முதல்வர் கலைஞரின் ஒத்துழைப்போடு தொழிலாளர்களால் முடிந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button